Skip to main content

'அண்ணன் கொடுத்த சீர் என சொன்னதை கேட்டு...'- முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Chief Minister M. K. Stalin's speech In dharmapuri

தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங்களைச் சேர்ந்த 8,736 பயனாளிகளுக்கு நல திட்டங்கள் வழங்கும் விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த விழாவில் 114.19 கோடி மதிப்பில் 75 திட்டப் பணிகளுக்கும் முதல்வர் அடிக்கல் நாட்டினார். அதுபோல் 350.50 கோடி மதிப்பில் முடிக்கப்பட்ட 993 திட்டங்களை திறந்து வைத்தார்.

நிகழ்ச்சிக்கு கோவை சரக டிஐஜி தலைமையில் 1300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அமைச்சர்கள் என பலரும் இந்த நலத்திட்ட விழாவில் கலந்து கொண்டுள்ளனர். இதில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ''தர்மபுரி என்ற உடனே எனக்கு நினைவுக்கு வருவது ஒகேனக்கல்லில் 1,928 கோடி ரூபாயில் உருவாக்கப்பட்ட ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம். அந்த திட்டத்திற்கு 2008 ஆம் ஆண்டு உள்ளாட்சித் துறை அமைச்சராக நான் இருந்தபோது ஜப்பானுக்கு சென்று நிதி வசதிகளையும், திட்டமிடுதல்களையும் செய்தேன்.

முதலமைச்சர் கலைஞர் அந்தத் திட்டத்தை அன்று தொடங்கி வைத்தார். ஆனால் ஆட்சி மாறியதும் காட்சி மாறியது. ஒகேனக்கல் குடிநீர் திட்டத்திற்கு முட்டுக்கட்டை போடப்பட்டது. உடனே நானே இங்கு நேரில் வந்து போராட்டம் நடத்தினேன். அதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். அந்த வகையில் தர்மபுரி மாவட்ட மக்களுக்கு நல்ல குடிநீர் கிடைக்க காரணமானவன் நான் என்ற மகிழ்ச்சியோடு உங்களிடையே நின்று கொண்டிருக்கிறேன்.

ஔவையின் வரலாற்றில் எப்படி தர்மபுரிக்கு பங்கு இருக்கிறதோ அதேபோல தமிழ்நாட்டு மகளிர் முன்னேற்றத்தில் தர்மபுரிக்கு முக்கிய பங்கு இருக்கிறது. 1989 ஆம் ஆண்டு இதே தர்மபுரியில் தான் மகளிர் சுய உதவிக் குழுக்கள் என்ற அமைப்பை முதல்வர் கலைஞர் தொடங்கி வைத்தார். அதன்படியே கலைஞர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கின்ற முகாம் இங்குதான் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த இரண்டு திட்டங்களும் மகளிர் வாழ்வில் ஒளிவிளக்காக இருந்து கொண்டிருக்கிறது. பெண்களுக்கு சொத்தில் சம பங்கு என்ற சட்டத்தை இயற்றியதும் கலைஞர்தான். இது பெண் இனத்திற்கு திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி வழங்கிய அதிகாரக் கொடை.

கொஞ்ச நாட்களுக்கு முன்பு டிவியில் ஒரு பேட்டியை பார்த்தேன். அதில் ஒரு பெண் கலைஞர் உரிமைத் தொகை திட்டம் ஸ்டாலின் அண்ணன் எங்களுக்கு கொடுத்த சீர் என்று சொன்னார். அப்பொழுது எனக்கு என்ன தோன்றியது என்றால், நம் திராவிட மாடல் அரசுக்கும், தமிழ்நாட்டுக்கும், தமிழக மகளிர்க்கும் இந்த திட்டத்தால் ஏற்பட்டுள்ள குடும்ப பாசத்தை எண்ணி நெகிழ்ந்து போனேன். மத்திய அரசு மாநிலங்களின் நிதி ஆதாரத்தை பறித்து அழிக்க நினைக்கிறது. பிரதமர் வருவது சுற்றுப்பயணம் அல்ல வெற்றுப் பயணம். தமிழ்நாட்டை சுரண்டியவர்களால் இது போன்ற சாதனை பட்டியலை வெளியிட முடியுமா?'' என்றார்.

சார்ந்த செய்திகள்

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.

Next Story

'பாஜகவின் செயலை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து 

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 'Our people are watching the work of the BJP' - Chief Minister M. K. Stalin's opinion

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் 'நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது' என பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.

ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!' எனத் தெரிவித்துள்ளார்.