சிதம்பரம் அருகே வல்லம்படுகை கிராமத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு தமிழக முதல்வர் நிவாரண உதவிகளை வழங்கினார்.
கடலூர் மாவட்டம், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தொடர் மழை பெய்து வந்தது. இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை முதல் அதிக கனமழையாக 24 மணி நேரம் பெய்தது. இதனையொட்டி பல்வேறு கிராமங்களில் உள்ள நெல் வயல்கள் மற்றும் குடியிருப்புப்பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது.
இந்நிலையில், வீராணம் ஏரியிலிருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டதால் சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் உள்ள குடியிருப்புப் பகுதிகள்மற்றும் சம்பா நெற்பயிர்களில் வெள்ளநீர் சூழ்ந்தது.
இதனையறிந்த தமிழக முதல்வர் திங்கட்கிழமை வல்லம்படுகை கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த, குமராட்சி ஒன்றியம், பரங்கிப்பேட்டை ஒன்றியம், சிதம்பரம் நகராட்சிப் பகுதிகளில் மழையால்பாதிக்கப்பட்டபகுதிகளின்புகைப்படக் கண்காட்சியைப் பார்வையிட்டு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். அப்போது விவசாயச் சங்கத்தலைவர்கள் இளைஞன் மற்றும் பசுமை வளவன் ஆகியோர் மனுவளித்த போது வயல்களில் தண்ணீர் வடிந்த உடன் கணக்கெடுப்பு நடத்தி விவசாயிகளுக்குத்தேவையான நிவாரணம் உள்ளிட்ட இடுபொருட்கள் வழங்கப்படும் எனக் கூறினார். இவருடன் தமிழக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, தமிழகத்தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வே.கணேசன், கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் மற்றும் விவசாயச் சங்கத்தலைவர்கள், பொதுமக்கள் எனத்திரளாகக் கலந்து கொண்டனர்.