
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக சென்னையிலிருந்து திருச்சிக்கு நேற்று வந்தடைந்தார். அங்கிருந்து தஞ்சாவூர் சென்ற முதல்வர் அண்ணா மற்றும் கலைஞர் சிலையை திறந்து வைத்தார். அதன் பின்னர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சி-திண்டுக்கல் நெடுஞ்சாலையில் உள்ள தாயனூர் கேர் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார்.
பல்வேறு துறைகளில் ஏற்கனவே முடிவுற்ற 203 திட்டங்களை திறந்துவைக்கும் முதல்வர், 10 துறைகளின் கீழ் புதிதாக சுமார் 532 பணிகளுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். 327 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு துறைகளின் கீழ் சுமார் 45000 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.

மேலும் திருச்சி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 28.24 கோடியில் புதிதாக கட்டப்பட்ட சத்திரம் பேருந்து நிலையத்தை திறந்து வைக்கும் அவர், மலைக்கோட்டையை அழகுபடுத்தும் 11.36 கோடியில் லேசர் லைட் பணி, 10 கோடி மதிப்பில் ரைபிள் கிளப், 76 கோடியில் கனரக சரக்கு வாகனம் முனையம், 75 கோடியில் சாலைகள் மற்றும் மழைநீர் வடிகால் இதர உட்கட்டமைப்பு வசதிகள், 26 கோடியில் பிரதான சாலைகள் சீரமைப்பு பணி உள்ளிட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.
இதில் மிக முக்கிய திட்டமான பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திற்கான திட்டத்திற்கு அடிக்கல் நாட்ட உள்ளார். ஒருங்கிணைந்த பேருந்து முனையம் மற்றும் இதர உட் கட்டமைப்பு பணிகளுக்காக சுமார் 832 கோடி திட்டமிடப்பட்டுள்ளது. இதில் முதற்கட்ட பணிகளுக்காக 350 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கேர் கல்லூரி வளாகத்தில் நிகழ்ச்சி முடிந்த பின்னர் பஞ்சப்பூருக்கு நேரில் சென்று பேருந்து நிலையம் அமைய உள்ள இடத்தை பார்வையிட உள்ளார்.