The Chief Minister instructed the Special Monitoring Officers to expedite the flood relief operations!

Advertisment

வெள்ள நிவாரண நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த அமைச்சர்கள் மற்றும் மாவட்ட சிறப்புக் கண்காணிப்பு அலுவலர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு இன்று (11/11/2021) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு நிவாரண நடவடிக்கைகளைக் கண்காணித்து, பணிகளைத் துரிதப்படுத்திட அந்தந்த மாவட்டத்திற்குட்பட்ட அமைச்சர்களையும், மாவட்டங்களுக்கு சிறப்பு கண்காணிப்பு அலுவலர்களாக அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களையும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (11/11/2021) தொலைபேசியில் தொடர்பு கொண்டு, மாவட்டங்களில் மழை, வெள்ள நிலவரங்களைக் குறித்து கேட்டறிந்தார்.

Advertisment

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிடத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனுக்குடன் எடுத்திட அறிவுறுத்திய முதலமைச்சர், ஆங்காங்கே நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தரமான உணவு, மருத்துவ வசதி மற்றும் நிவாரண உதவிகள் வழங்கப்படுவதை உறுதி செய்திடவும் உத்தரவிட்டார்.

மேலும், துறை அலுவலர்கள் பயிர் சேதங்களைத் தவிர்க்கும் வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.

இதற்கு முன்னதாக இன்று (11/11/2021) காலை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தில் மழை வெள்ள நிலை குறித்தும், மேற்கொள்ளப்பட்டுள்ள நிவாரண நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்திட முதலமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர், வருவாய் நிர்வாக ஆணையர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்." இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.