தமிழ்நாடு தடய அறிவியல் துறையின் பயன்பாட்டிற்காக குற்றம் நிகழ்விடத்திலேயே ஆரம்பக்கட்ட ஆய்வுகளை மேற்கொள்ள ஏதுவாக ரூ.3 கோடியே 92 லட்சத்து 70 ஆயிரம் செலவில் 14 நடமாடும் தடய அறிவியல் ஆய்வக வாகனங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்து கொடியசைத்து தொடங்கி வைத்தார். இவ்வாகனங்கள் சென்னை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, திருப்பூர், வேலூர், தர்மபுரி, கோயம்புத்தூர், நீலகிரி, மதுரை, விழுப்புரம், இராமநாதபுரம், தஞ்சாவூர் ஆகிய காவல் மாவட்டங்களின் தடய அறிவியல் ஆய்வக பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளன.
இந்த நடமாடும் தடய அறிவியல் ஆய்வகங்கள், குற்றவாளிகளை விரைவில் கண்டறிய குற்ற நிகழ்விடத்திலேயே குற்றப் புலனாய்வாளர்களுக்கு அறிவியல்சார் சேவைகளை வழங்கும். இந்த நடமாடும் தடய அறிவியல் சிறப்பம்சமாக இரத்தக்கறை, வெடி பொருள்கள், போதை பொருள் மற்றும் துப்பாக்கி சுடு படிமங்கள் ஆகியவற்றை சம்பவ நடைபெற்ற இடத்திலேயே பரிசோதனை கூடத்தில் பரிசோதிக்க முடியும். மேலும் குற்ற நிகழ்விடத்திலேயே குற்றச்செயலை அடையாளம் காணுவதற்கும், எவ்வித வெளிப்புற மாசுபடுதலுக்கும் தடய பொருள்கள் உட்படாதவாறு ஆய்வு மேற்கொள்வதற்கு வாகனத்தின் உட்கட்டமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் குற்ற சம்பவங்களை குறுகிய காலத்தில் புலனாய்வு செய்து, குற்றத்தை கண்டுபிடிக்க முடியும்.