
அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தொழிற்கல்வி படிப்புகளில் 7.5% உள்ஒதுக்கீடு வழங்க வகைச் செய்யும் மசோதாவை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (26/08/2021) தாக்கல் செய்தார். ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் கமிட்டியின் பரிந்துரையை ஏற்று 7.5% இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "கிராமப்புற மாணவர்கள் தொழிற்கல்வியில் சேருவது குறைந்துவருவதால் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மாநிலத்தில் நடைமுறையில் உள்ள இடஒதுக்கீடு விதிமுறைகளைப் பாதிக்காமல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். வேளாண்மை, கால்நடை உள்ளிட்ட பாடப் பிரிவுகளிலும் கிராமப்புற மாணவர்கள் சேருவதற்கு வாய்ப்பு ஏற்படும்" எனத் தெரிவித்தார்.
அதன் தொடர்ச்சியாக பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, "தொழிற்படிப்புகளில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை அதிமுக வரவேற்கிறது. முதலமைச்சர் முன்மொழிந்த மசோதாவை அதிமுக முழு மனதுடன் ஆதரிக்கிறது" எனக் கூறினார்.
எதிர்க்கட்சிகளும் ஆதரவளிக்கும் நிலையில் மசோதா இன்றே குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட வாய்ப்பு உள்ளது.