கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்றத் தேர்தலுக்கு வாக்களிக்க சொந்த ஊருக்குச்சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில் வாக்களித்துவிட்டு சேலத்தில் உள்ள வீட்டில் தங்கியிருந்தார். தற்போது கரோனா பரவல் இரண்டாவது அலை தீவிரமாக உள்ளதால், அதனைக் கட்டுப்படுத்துவது தொடர்பான ஆலோசனைக்காக சில தினங்களுக்கு முன் சென்னைக்கு வந்திருந்தார்.
இந்நிலையில், குடலிறக்க சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் எடப்பாடி பழனிசாமி நேற்று (19.04.2021) அனுமதிக்கப்பட்டார். அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். அவர் மூன்று நாள் ஓய்வில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்.