Chief Minister Awards - Pongal Medals to Police and Other Uniformed Services Personnel

3,186 காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்களுக்குப் பொங்கல் பதக்கங்கள் வழங்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

Advertisment

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'தமிழக காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறை, சிறை மற்றும் சீர்திருத்தத்துறைகளில் பணியாற்றும் பணியாளர்கள், தமது பணியில் வெளிப்படுத்தும் நிகரற்றச் செயல்பாட்டினை அங்கீகரித்து ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளன்று தமிழக முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகின்றன.

Advertisment

இந்த ஆண்டு, காவல்துறையில் (ஆண்/பெண்) காவலர் நிலை-1, தலைமைக் காவலர், ஹவில்தார் மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர் நிலைகளில் 3,000 பணியாளர்களுக்கு ‘தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கங்கள்’வழங்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். மேலும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் முன்னணி தீயணைப்போர், ஓட்டுநர் கம்மியர் மற்றும் தீயணைப்போர் ஆகிய நிலைகளில் 120 அலுவலர்களுக்கும், சிறை மற்றும் சீர்திருத்தத் துறையில் (ஆண்/பெண்) முதல் நிலை வார்டர்கள் மற்றும் இரண்டாம் நிலை வார்டர் நிலைகளில் 60 நபர்களுக்கும் ‘தமிழக முதலமைச்சரின் சிறப்பு பணிப் பதக்கங்கள்’வழங்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். அந்தவகையில் 2021- ஆம் ஆண்டு பிப்ரவரி 1- ஆம் தேதி முதல், மேற்படி பதக்கங்கள் பெறுபவர்களுக்கு நிலைவேறுபாடின்றி மாதாந்திர பதக்கப்படி ரூபாய் 400, வழங்கப்படும்.

மேலும், காவல் வானொலி பிரிவு, நாய் படைப்பிரிவு மற்றும் காவல் புகைப்படக் கலைஞர்கள் பிரிவுகளில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் என ஒவ்வொரு பிரிவிலும் 2 அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் என ஆக மொத்தம் 6 அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு ‘தமிழக முதலமைச்சரின் காவல் தொழில்நுட்ப சிறப்புப் பணிப் பதக்கம்’வழங்கப்படுகிறது. இப்பதக்கங்கள் பெறும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு அவரவர்களின் நிலைகளுக்குத் தக்கவாறு ரொக்க தொகை வழங்கப்படும்.

இவர்கள் அனைவருக்கும் பின்னர் நடைபெறும் சிறப்பு விழாவில் பதக்கம் மற்றும் முதலமைச்சரின் கையொப்பத்துடன் கூடிய பதக்கச்சுருள் வழங்கப்படும்'. இவ்வாறு அரசின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.