Chief Election Commissioner of India consultation in Chennai

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இந்தியத் தேர்தல் ஆணையமும் தேர்தல் தொடர்பான பணிகளை விரைவுபடுத்தி உள்ளது.

Advertisment

இந்த சூழலில் தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய கடந்த 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் தேர்தல் ஆணையத்தின் துணை தேர்தல் ஆணையர் அஜய் பாது தலைமையிலான தேர்தல் ஆணைய அதிகாரிகள் குழுவினர் தமிழகம் வந்திருந்தனர். இந்த குழுவினர் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு மற்றும் தேர்தல் ஆணையத்தின் முதன்மைச் செயலாளர் மலய் மாலிக் ஆகியோர் முன்னிலையில் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையில் காவல்துறை அதிகாரிகள், வருமான வரித்துறை அதிகாரிகள், தொழிலக பாதுகாப்புப் படை வீரர்கள், மாவட்ட ஆட்சியர்கள் கலந்துகொண்டனர். இதனையடுத்து தமிழகத்திற்கு கூடுதலாக 3 தேர்தல் அதிகாரிகளை நியமித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி மூத்த ஐஏஎஸ் அதிகாரியான சங்கர்லால் குமாவத் கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரியாகவும், இணைத் தலைமை தேர்தல் அதிகாரிகளாக ஸ்ரீகாந்த், அரவிந்தன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

Advertisment

இந்நிலையில் தமிழகம் வந்துள்ள இந்தியத் தேர்தல் தலைமை ஆணையர் ராஜீவ் குமார் தலைமையில் சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் தேர்தல் ஆணையர் அருண் கோயல் மற்றும் மூத்த தேர்தல் ஆணைய அலுவலர்களுடன் தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் - 2024 தொடர்பான ஆய்வு கூட்டம் இன்று (23.02.2024) நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, தமிழகத்தின் அனைத்து மாவட்ட மாவட்ட ஆட்சியர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆணையர்கள், காவல் துறை தலைவர்கள், காவல் துறை மற்றும் துணைத் தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்களிடம் இந்தியத் தேர்தல் தலைமை ஆணையர் ராஜீவ் குமார் தீவிர ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டம் நாளையும் நடைபெற உள்ளது.