சிதம்பரம் தில்லை காளியம்மன் கோவில் உண்டியல் திறக்கப்பட்டு பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள் எண்ணப்பட்டன.
சிதம்பரத்தில் பழமைவாய்ந்த தில்லை காளியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோயில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகிறது. இக்கோயிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்தும் வகையில் 6 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இதில் 5 உண்டியல்கள் இந்து சமய அறநிலையத்துறையின் கடலூர் மாவட்ட உதவி ஆணையர் சந்திரன், கோவில் செயல் அலுவலர் சரண்யா, ஆய்வாளர் நரசிங்க பெருமாள் உள்ளிட்டவர்களின் முன்னிலையில் இன்று (10.01.2023) திறக்கப்பட்டு பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள் எண்ணப்பட்டன.
இதில் பக்தர்கள் 5 லட்சத்து 40 ஆயிரத்து 648 ரூபாய் பணமும், தங்கம் 19 கிராம், வெள்ளி 40 கிராம், 107 சிங்கப்பூர் டாலர், 65 மலேசியா ரிங்கிட், ஓமன் நாட்டின் பணம் உள்ளிட்டவற்றை காணிக்கையாகச் செலுத்தியுள்ளனர். காணிக்கைகள் வங்கி ஊழியர்கள் மூலம் எண்ணப்பட்டு வங்கியில் செலுத்தப்பட்டன. ஒன்றரை மாத இடைவெளியில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை இதுவாகும். இதற்கு முன் இந்த உண்டியல்கள் கடந்த நவம்பர் 14-ஆம் தேதி திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டது குறிப்பிடத்தக்கது.