Skip to main content

நக்கீரன் செய்தியின் எதிரொலி; இந்து அறநிலையத்துறை அதிகாரி வெளியிட்ட அறிவிப்பு

Published on 08/11/2023 | Edited on 08/11/2023

 

Chidambaram Thillai Govindaraja Notification of Hindu Welfare Department Officer

 

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குள் தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலும் உள்ளது. இந்த இரு கோவிலின் கருவறையும் ஒரே இடத்தில் நின்றுகொண்டு பெருமாளையும் சிவனையும் ஒரே நேரத்தில் வழிபடும் வகையில் அமைந்துள்ளதால், உலக நாடுகளில் இருந்தும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இந்தக் கோவிலுக்கு சிவ பக்தர்கள் மற்றும் வைணவ சமய பக்தர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஒரு நாளைக்குப் பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

 

இந்த நிலையில் இந்தக் கோவிலில் பிரமோற்சவம் நடத்துவதற்கு நடராஜர் கோவில் தீட்சிதர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள் எனப் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மத்தியில் கூறப்படுகிறது.  இந்த நிலையில், கடந்த வாரம் கோவிலில் உள்ள தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலுக்கு பிரம்மோற்சவம் நடத்த வேண்டும் என கோவிந்தராஜ பெருமாள் கோவில் அறக்கட்டளை உறுப்பினர்கள் சுதர்சனம், திருவேங்கடம் மற்றும் தெய்வீக பக்தர் பேரவை நிறுவனத் தலைவர் ஜெமினி ராதா உள்ளிட்டவர்கள் இந்து சமய அறநிலையத் துறையினருக்கு மனு அளித்தனர். இந்தத் தகவலைக் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான நக்கீரன் இதழில் இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்து செய்தி பதிவு செய்யப்பட்டது. இதனையொட்டி இந்தச் செய்தி மக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்பட்டது. மேலும் உடனடியாக 400 ஆண்டுகளுக்கும் மேலாகப் பிரமோற்சவம் நடைபெறாமல் உள்ளதை உடனடியாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் மத்தியில் தொடர்ந்து குரல் எழுப்பப்பட்டு வருகிறது.

 

இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை சிதம்பரத்தில் உள்ள அனந்தீஸ்வரன் கோவில் இந்து அறநிலையத்துறை அலுவலகத்தில் இது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் இந்து சமய அறநிலையத்துறை கடலூர் மாவட்ட இணை ஆணையர் பரணிதரன், கோவில் செயல் அலுவலர் ராஜ்குமார், ஆய்வாளர் நரசிங்க பெருமாள் மற்றும் தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் நிர்வாக உறுப்பினர்கள், தெய்வீக பக்தர்கள் பேரவை நிறுவனத் தலைவர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இதில் பேசிய இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் பரணிதரன், ‘400 ஆண்டுகளுக்கு மேலாக கோவிலில் பிரமோற்சவம் நடைபெறவில்லை என அனைத்து தரப்பினர் தரப்பிலிருந்தும் புகார் வருகிறது என்றும் இதனை உடனடியாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்படுகிறது. எனவே விரைவில் தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் பிரமோற்சவம் நடத்தப்படும்’ என அவர் தெரிவித்துள்ளார். இந்தத் தகவல் வைணவத்தை வழிபடும் பக்தர்கள் மட்டுமல்லாமல் அனைத்துத் தரப்பு மக்கள் மத்தியிலும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வெயிலின் தாக்கம்; திண்டல் கோவிலில் தரைவிரிப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Sun exposure; Carpet in Dindal temple

கோடை காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. நீர்சத்து  குறைபாட்டை தடுப்பதற்காக ஒவ்வொரு சுகாதார நிலையங்களிலும் ஓ.ஆர்.எஸ் கரைசல்களை ஆயத்தமாக வைத்திருக்கும் படி தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கோடை காலம் தொடங்கி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் பலரும் சுற்றுலா தளங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோட்டில் திண்டல் வேலாயுதசுவாமி கோவிலில், பக்தர்கள் பாதகங்களை வெயிலில் இருந்து காக்கும் வகையில், தென்னை நார் விரிப்பு போடப்பட்டுள்ளது. கோடை வெயில் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பக்தர்களின் பாதங்களை பாதுகாப்பதற்காக, திண்டல் வேலாயுதசுவாமி கோவில் வளாகத்தில், 1.20 லட்சம் ரூபாய் மதிப்பில், தென்னை நார் விரிப்பு போடப்பட்டுள்ளது. இதில்லாமல் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கப்படுகிறது. கோவில் வளாகத்தில் ஆங்காங்கே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய்களும் அமைக்கப்பட்டுள்ளன.

Next Story

கோவில் காவலாளி அடித்துக் கொலை; போலீசார் தீவிர சோதனை!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
69-year-old temple watchman was beaten to passed away near Mappedu

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் மப்பேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேட்டுமாநகர் பகுதியில் புதிதாக விநாயகர் கோயில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் கட்டுமான பணிக்காக செங்கல் இறக்கி வைத்திருப்பதால், அதனை பாதுகாப்பதற்காக  கோவிலுக்கு காவலாளியாக செல்வம் (69) என்ற முதியவர் கடந்த இரண்டு நாட்களாக வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை கோவில் காவலாளி செல்வம் தலையில் பலத்த காயங்களுடன் விழுந்து கிடப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் மப்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து மப்பேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு நடத்தினர். தலையில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த காவலாளி செல்வம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், முதியவர் செல்வத்திற்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் பிள்ளைகள் ஏற்கெனவே இறந்துவிட்ட நிலையில், தனியாக வாழ்ந்து வந்தது தெரிந்தது. மப்பேடு மாநகரில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த இரண்டு நாட்களாக கோயில் கட்டுமான பணி காரணமாக இரவு காவலாளியாக வேலை பார்த்ததும் தெரியவந்தது. எனவே புதிதாக கட்டப்படும் கோயிலில் 69 வயதான செல்லம் முதியவர் காவலாளியாக வேலை பார்த்த நிலையில் அவரை அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எதற்காக இந்த கொலை நடைபெற்றது? இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து மப்பேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவலாளிக்கே பாதுகாப்பு இல்லாத சம்பவத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.