Skip to main content

‘சிதம்பரம் கோவிலில் விதிமுறைகளை மீறி கட்டுமானம்’ - ஆய்வுக் குழுவினர் 

Published on 14/12/2023 | Edited on 14/12/2023
Chidambaram Temple Violated Construction says Inspection Team

சிதம்பரம் நடராஜர் கோவில் வளாகத்தில் எந்த ஒரு அனுமதியும் இல்லாமல் கடந்த பல ஆண்டுகளாகக் கோவில் தீட்சிதர்கள் கட்டுமான பணிகளைச் செய்துள்ளதாகவும் தொடர்ந்து கட்டுமான பணிகளைச் செய்து வருவதாகவும் இதற்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் ஏற்கனவே கட்டப்பட்ட விதிமீறலுக்கு உட்பட்ட கட்டடங்களை அகற்ற வேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்றத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த ராதா என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நீதிமன்ற விசாரணையின்போது தீட்சிதர்கள், கட்டுமான பணியில் ஈடுபடமாட்டோம் எனப் பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில் கோவிலில் விதிமுறைகளை மீறிக் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதா? என இந்து அறநிலையத்துறை மற்றும் தொல்லியல் துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கொண்ட குழுவினர் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு  கொண்ட சிறப்பு அமர்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தீட்சிதர்கள் உத்தரவாதம் அளித்த பின்னரும் கட்டுமானத்தைத் தொடர்ந்து கோவில் வளாகத்துக்குள் மேற்கொள்கின்றனர். அதற்கு ஆதாரமாகப் புகைப்படங்களைத் தாக்கல் செய்தனர். இதற்கு நீதிபதிகள் பாரம்பரியமிக்க புராதன சின்னமாகத் திகழும் சிதம்பரம் கோவில் மீது கை வைக்க யாரையும் அனுமதிக்க மாட்டோம். சிதம்பரம் கோவில் என்பது பக்தர்களின் சொத்து அதன் மீது யாரும் உரிமை கோர முடியாது என்று கூறினர்.  

இனைத் தொடர்ந்து வியாழக்கிழமை சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு இந்து அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் மோகன் ஐஏஎஸ் தலைமையில் தொல்லியல் துறை இணை இயக்குநர் சிவானந்தம்,  முதன்மை பொறியாளர் பெரியசாமி, இந்து அறநிலையத்துறை இணை ஆணையர்கள், பரணிதரன், ஜோதி, உதவி ஆணையர் சந்திரன், தொல்லியல் துறை ஆலோசகர் மணி உள்ளிட்ட 6 பேர் கொண்ட குழுவினர் கோவிலில் விதிமீறல்கள் மீறிக் கட்டப்பட்ட கட்டடங்கள் குறித்து ஆய்வு செய்ய வந்துள்ளோம் எனத் தீட்சிதர்களைச் சந்தித்து கடிதம் அளித்தனர். அதற்குத் தீட்சிதர்கள் கோவில் செயலாளர் இல்லை என்று ஆட்சேபனை தெரிவித்தனர். இந்த நிலையில் ஆய்வுக் குழுவினர் கோவில் உள்ளே நடராஜர், அம்மன் சன்னதி, பிரகாரங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இந்து அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் சங்கர், “கோவிலில் பிரதான சின்னங்களை அழித்து பூங்கா அமைக்கப்பட்டுள்ளதாகவும், ராஜகோபுரங்கள் அருகில் புதுப்புது சன்னதிகளை கட்டியுள்ளனர். கோவில் உள் பிரகாரத்தில் கட்டுமானங்களை மேற்கொண்டுள்ளனர். பண்டைய ஓவிய சின்னங்களை அழித்து வரலாற்றை மாற்றியது. கல்வெட்டு எழுத்துகளை அழித்து வண்ணம் தீட்டியது. யானைக்கு மண்டபம், மாட்டுத் தொழுவம், அன்னதான கூடம் என அமைத்துள்ளனர். 4 இடத்தில் ஆழ்துளை மூலம் போர் போட்டுள்ளனர். கோவிலில் விதிமீறல்கள் உள்ளதை உயர்நீதிமன்றத்தில் புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரங்களுடன் சமர்ப்பிப்போம்” என்றார்.

இதுகுறித்து கோவில் தீட்சிதர்களின் வழக்கறிஞர் சந்திரசேகர் கூறுகையில், “கோவில் தீட்சிதர்கள் ஆட்சேபனை தெரிவித்தும் அனுமதி இல்லாமல் ஆய்வு செய்துள்ளனர். கோவிலில் எந்த விதி மீறல் கட்டடமும் இல்லை என்றும் உயர்நீதிமன்றம் கோவில் பக்தர்களின் சொத்து எனக் கூறியது, நீதிமன்றத்தின் கருத்துதான் அது தீர்ப்பு அல்ல. 1951 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற அமர்வில் இந்தக் கோவில் தீட்சிதர்களின் நிர்வாகத்திற்கு உறியது எனத் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது” எனக் கூறினார்.

சார்ந்த செய்திகள்