Skip to main content

வெகு விமர்சையாக நடைபெற்ற ஆருத்ரா தரிசன விழா

Published on 07/01/2023 | Edited on 07/01/2023

 

chidambaram natarajar temple aruthra tharisana festival 

 

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

 

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள பஞ்சபூத தலங்களில் ஆகாய தலமாக விளங்கும் உலக புகழ்பெற்ற நடராஜர் கோயிலில் சிவபெருமானின் ஜென்ம நட்சத்திரமான திருவாதிரை நட்சத்திர நாளில் ஆண்டுதோறும் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் ஆருத்ரா தரிசன விழா கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக நடைபெற்று வந்தது. அதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. பின்னர் வெள்ளிக்கிழமை அதிகாலை ஆயிரங்கால் மண்டபம் முகப்பில், ஸ்ரீ சிவகாமசுந்தரி நடராஜ மூர்த்திக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. இதில் விபூதி, பால், தயிர், தேன், சந்தனம், பழச்சாறு, பஞ்சாமிர்தம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மதியம் பஞ்சமூர்த்திகள் கிழக்கு சன்னதி வழியாக, தெற்கு வீதி, மேலவீதி, வடக்கு வீதி, மீண்டும் கிழக்கு சன்னதி வழியாக கோவிலுக்குள் வந்து ஆயிரம் கால் மண்டபம் முன்பு நின்று தரிசன காட்சி நடைபெற்றது.

 

இதனையடுத்து கோவில் ராஜ சபையில் இருந்து மேள, தாளங்கள் முழங்க தேவாரம், திருவெம்பாவை, பாடியபடி சிவனடியார்கள் நடன பந்தலுக்கு ஊர்வலமாக வந்தனர். அவர்களைத் தொடர்ந்து ஆயிரம் கால் மண்டபத்தில் இருந்து மூலவர் ஆனந்த நடராஜ மூர்த்தியும், சிவகாமசுந்தரி அம்பாளும் எழுந்தருளி சபைக்கு புறப்பட்டனர். தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட நடன பந்தலுக்குள் மூலவர் ஆனந்த நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாளும் முன்னும் பின்னும் அசைந்தாடியபடி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதனை தொடர்ந்து அங்கு பெரும் திரளாக திரண்டு இருந்த பக்தர்கள் ஓம் நமச்சிவாயா, ஓம் நமச்சிவாயா, என்றும் ஹர ஹர கோஷங்கள் எழுப்பியபடி சாமி தரிசனம் செய்தனர். இந்த தரிசனத்தை காண்பதற்காக பக்தர்கள் கூட்டம் கோயிலுக்கு உள்பகுதியிலும் வெளிப்பகுதியிலும் அதிகமாக காணப்பட்டது. மேலவீதி கோபுர வழியிலும், சிவகங்கை குளம் அருகிலும் சிவகாமசுந்தரி அம்பாள் கோயில் அருகிலும், கீழ சன்னதி, ஆயிரங்கால் மண்டபம் முன்பும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கோயிலில் உள்ள அனைத்து இடங்களிலும் பக்தர்கள் திரண்டு இருந்தனர். அதனைத் தொடர்ந்து மாலை ஆனந்த நடராஜ மூர்த்தியும், சிவகாமசுந்தரி அம்பாளும் கோயில் உள் பிரகாரத்தை வந்தடைந்தனர். தொடர்ந்து கருவறையில் வைத்து சாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் உள்ளூர், பக்தர்கள், வெளியூர் பக்தர்கள், வெளி மாவட்ட பக்தர்கள், வெளிமாநில பக்தர்கள், வெளிநாட்டு  பக்தர்கள் என பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நடராஜ பெருமானை தரிசனம் செய்தனர்.

 

மேலும் காவல்துறை சார்பில் ஆங்காங்கே பொதுமக்களுக்கு விழிப்புணர்வு எடுத்தும் வகையில் பாதுகாப்போடு தரிசனத்தை கண்டு சொல்லுங்கள் என்று அறிவுறுத்தப்பட்டது. விழா ஏற்பாடுகளை நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் செய்திருந்தனர். தரிசன விழாவை முன்னிட்டு கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்தி கணேசன் மேற்பார்வையில், சிதம்பரம் உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் ரகுபதி தலைமையில் 600க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ட்ரோன்கள் கண்காணிப்பில் வெள்ளியங்கிரி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Drones are the key to surveillance

வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது ட்ரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர். மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர்.

அண்மையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய வேலூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற இளைஞரும், சேலம் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த கிரண் என்ற இளைஞரும் மலையேறும் போதே மூச்சுத்திணறி உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 25 ஆம் தேதி தெலுங்கானாவைச் சேர்ந்த சுப்பாராவ் (வயது 68). மருத்துவரான இவர் நான்காவது மலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அதேபோல் சேலத்தைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் குரங்கு பாலம் என்ற பகுதியில் மயங்கி விழுந்து இறந்து போனார். மேலும் 26 ஆம் தேதி நான்கு மணி அளவில் மலையில் ஏறிக் கொண்டிருந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவரும் மூச்சுத்திணறி உயிரிழந்தார். அதேபோல் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய ரகுராம் (வயது 50) என்பவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

இப்படியாக வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இன்று சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு வெள்ளியங்கிரியில் மலையேறும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் வனத்துறை சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தற்போது கோடை காலம் என்பதால் காட்டுத்தீ ஏற்படும் சூழ்நிலைகளும் உருவாகியுள்ளது. பக்தர்கள் மலையேறுவதற்கான பாதையைத் தவிர்த்து வேறு பாதையைப் பயன்படுத்திவிடாமல் இருக்க கண்காணிக்கப்படுவதாற்காக ட்ரோன்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இன்று காலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாரை சாரையாக மலையேற தொடங்கி வரும் நிலையில் சுழற்சி முறையில் தற்போது ட்ரோன்கள் மூலம் பக்தர்களின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Next Story

கள்ளழகர் திருவிழாவில் நிகழ்ந்த சோகம்; போலீசார் தீவிர விசாரணை!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tragedy at the Kalalhagar festival Police serious investigation

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு பெரும் விமரிசையாக ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இதனை லட்சக்கணக்கான மக்கள், பக்தர்கள் நேரில் கண்டு களிப்பர்.  தங்கக் குதிரையில் கம்பீரமாக வலம் வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரைத் திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் நேற்று (22.04.224) கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து பரவசம் அடைந்தனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அதே சமயம் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக கள்ளழகர் மதுரை வந்தடைந்தார். கள்ளழகர் உடன் பாரம்பரியமாகக் கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டது.

இதனையடுத்து மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு இன்று (23.04.2024) நடைபெற்றது. கள்ளழகரை தரிசிக்க ஆயிரக்கணக்கான மக்கள் வைகை ஆற்றில் குவிந்தனர். இதனையடுத்து பச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரையில் கள்ளழகர் வைகை ஆற்றின் கரைக்கு வருகை புரிந்தார். கள்ளழகர் வைகையாற்றில் இறங்குவதற்கு முன்பு ஆற்றங்கரையில் மாலை அணிவித்து அழகருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்களின் கோஷம் விண்ணை முட்ட, தங்கக்குதிரையில் பச்சைப்பட்டு உடுத்தி வைகையாற்றில் கள்ளழகர் இறங்கினார். 

Tragedy at the Kalalhagar festival Police serious investigation

இந்நிலையில் மதுரை சித்திரை திருவிழாவில் இளைஞர்கள் பட்டாக்கத்தியுடன் மோதிக்கொண்டதில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். சித்திரைத் திருவிழா நடந்த மதுரை மாவட்டம் ஆழ்வார்புரம் பகுதியில் ஏற்பட்ட மோதலில் கத்தியால் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். இதில் ஆழ்வார்புரத்தைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் சிவகங்கையைச் சேர்ந்த சோனையை மர்ம நபர்கள் கத்தியால் குத்தினர். இதனையடுத்து மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவம் குறித்து மதுரை மாநகர போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.