Skip to main content

நடராஜர் கோயில் ஆயிரம்கால் மண்டபத்தை திருமண மண்டபமாக மாற்றி மரபுகளை மீறும் தீட்சிதர்கள்.

Published on 13/09/2019 | Edited on 13/09/2019

சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள ஆயிரம் கால் மண்டபத்தில் திருமணம் நடத்தி மரபுகளை மீறியுள்ளதாக பக்தர்கள் குற்றம் சாட்டி முகம் சுளித்தனர்..
 

chidambaram

 

 

சிதம்பரம் நடராஜர் கோயில் உலக புகழ் பெற்றது. இக்கோயில் அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் தேவாரப்பாடல் பெற்றதலம் ஆகும்.  மேலும் இதனை பூலோக கைலாசம் என்றும் கைலாயம் என்று பக்தர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர. இக்கோயிலுக்கென்று தனி மரபு உள்ளது. இன்று வரை ஆண்கள் நடராஜரை தரிசனம் செய்ய சித்சபைக்கு சென்றால் மேலாடைய கழிற்றி விட்டு அரைநிர்வாணத்தில் தான் செல்ல வேண்டும். இதில் நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த சட்டத்தை கடைபிடித்து வருகிறார்கள். இதே கோயிலில் பல மரபுகள் சார்ந்த சட்டம் உள்ளது.

பல்வேறு மரபுகளை கொண்ட இந்த கோயிலில் 999 கல்தூண்கள் கொண்ட ஒரு மண்டபம் கோயிலுக்கு வடக்கு புறத்தில் உள்ளது. இதில் ஆனித்திருமஞ்சனம் மற்றும் மார்கழி மாதத்தில் நடைப்பெறும் ஆருத்ரா தரிசனம் விழாவின் போது நடராஜர் ஒருகாலை தூக்கிகொண்டு ஒரு காலுடன் நிற்கும் இந்த சிலையை இந்த மண்டபத்தில் வைத்தவுடன் வருடத்தின் நான்கு நாட்களுக்கு இது 1000 கால் மண்டபமாக உள்ளதாக பக்தர்கள் நம்பிக்கை வைத்து வழிபட்டு வருகிறார்கள்.

நடராஜர் இந்த மண்டபத்தில் இருந்து தான் பக்தர்களுக்கு தரிசனம் தரும் நிகழ்ச்சி நடைபெறும். இதனை காண பல லட்சம் பக்தர்கள் ஆண்டுக்கு இருமுறை கூடுவார்கள். இதனால் இந்த மண்டபத்தை ஆண்மீக நிகழ்ச்சிக்கு தவிர மற்ற எந்த நிகழ்ச்சிக்கும் அனுமதி தரமால் பல ஆயிரம் காலம் மரபுகளை காத்து வந்தனர்.

இப்படியுள்ள இந்த மண்டபத்தில் தீட்சிதர்கள் சின்டிகேட் அமைத்து கொண்டு சிவகாசியை சேர்ந்த தீப்பெட்டி தொழிலதிபர் மகளுக்கும், சென்னை பாத்திரகடை தொழிலதிபர் மகனுக்கு திருமணம் செய்ய பல லட்சங்களை கோயிலுக்கென்று வாங்கி கொண்டும், தீட்சிதர்கள் தனித்தனியாக பல லட்சங்களை பெற்றுக்கொண்டு மரபு வாய்ந்த இந்த மண்டபத்தில் திருமணநிகழ்ச்சிக்கு ஒப்புதல் கொடுத்துள்ளதாக பக்கதர்கள் மத்தியில் குற்றச்சாட்டு பரவலாக பேசப்படுகிறது.

அனுமதியை பெற்ற தொழிலதிபர்கள் ஆயிரம்கால் மண்டபத்தை மின் விளக்குள், மலர் தோரணங்கள், வண்ண சீலைகள், பச்சை இலைகளால் நுழைவாயில் தோரணம் என நடராஜர் கோயிலை நட்சித்திர ஓட்டலாக மாற்றினார்கள். உணவு ஏற்பாட்டுக்கு மண்டபத்திற்கு அருகிலே பெரிய கொட்டாகை அமைத்து 200-க்கும் மேற்பட்ட சமையலர்களை கொண்டு அசத்தியுள்ளனர். திருமணம் முடியும் வரை வெளி ஆட்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை, திருமண பேட்ஜ் அணிந்தவர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

புனித இடமான ஆயிரம்கால் மண்டபத்தில் இதுவரை எந்த திருமண விழாவும் நடைப்பெறாத நிலையில் தற்பொழுது திருமணம் நடத்த கோயில் தீட்சிதர்கள் அனுமதி அளித்துள்ளது சிதம்பரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  மேலும் கோயிலில் சமான்யர்களுக்கு ஒரு சட்டம், வசதி படைத்தவர்களுக்கு ஒரு சட்டமா? என முகம் சுளித்து சென்றனர். மேலும் இந்த சம்பவத்தை செல்போனில் படமெடுத்து இதனை கேட்க யாருமில்லையா? என சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளனர். இதனால் சிதம்பரம் உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள சிவ பக்தர்களிடம் தீட்சிதர்களின் செயல்பாடு கோயிலின் மரபு மீறிய செயலாக உள்ளதாக பேசப்படுகிறது.

இதுகுறித்து இந்த திருமணத்தை நடத்திவைத்த பட்டு தீட்சிதரை தொடர்புகொண்டு பேசியபோது, “ஆயிரம் கால் மண்டபத்தை திருமணத்திற்கு வாடகை விடவில்லை. அந்த மண்டபத்தில் திருமணம் நடைபெறவில்லை. கோவிலில் கும்பாபிஷேக பணி நடைபெற்றதால் தற்செயலாக அங்கு நடைபெற்றது. யாருக்கும் அங்கு திருமணம் நடத்த அனுமதி இல்லை. சென்னையை சேர்ந்தவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. பொண்ணு, மாப்பிளை பெயர் தெரியாது என இழுத்தார். சரி போனில் பேசவேண்டாம் நேரில் வந்து உங்களிடம் பேசுகிறேன் என்றதுக்கும் மறுத்துவிட்டார், இந்த திருமண நிகழ்வுக்கு கோயில் செகரட்ரியிடம் அனுமதி பெற்றுதான் நடத்தப்பட்டது. இதற்கு பணம் எதுவும் வாங்கவில்லை” என்று மறுத்தார்.

இன்று திருணத்திற்கு பல ஆயிரம் ஆண்டுகால மரபுகளை மீறி அனுமதி அளித்துள்ளனர். கோயிலில் தீட்சிதர்கள் வைத்தது தான் சட்டம் என்று செயல்பட்டு வருவதால் பல்வேறு தவறுகள் வெளியே தெரியாமலே போய்விடுகிறது என்று சிவபக்தர் ஒருவர் காட்டமாக கூறுகிறார். மேலும் கோயில் நிர்வாகத்தை தனி ஐஏஎஸ் அதிகாரியை கொண்டு நிர்வகிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிதம்பரத்தில் மாணவ மாணவிகளுக்கு உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Higher education guidance program for students in Chidambaram

சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய  மாணவ மாணவிகளுக்கு  உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்சிக்கு  சிதம்பரம் சார் ஆட்சியர் ராஷ்மிராணி தலைமை தாங்கி மாணவர்கள் மத்தியில் பேசுகையில்  பன்னிரெண்டாம் வகுப்பு  முடித்து  அடுத்து என்ன படிக்கலாம்.  மாணவர்களின் கனவுகளை நினைவாக்கும்  படிப்புகள்  எவை,   உயர்கல்விக்கு செல்ல ஏராளமான உதவித் தொகை வாய்ப்புகள் உள்ளது என்றும்,   தேர்ச்சி பெற்ற அனைத்து  மாணவர்களுக்கும்  உயர் கல்விக்கான  வழிகாட்டுதல்களைத் தமிழக அரசு சிறப்பாகச் செய்து வருகிறது.  சிறந்த வாய்ப்புகளுக்கு எந்தக் கல்லூரியிலும்  சேர்ந்து படிக்கலாம்,  வருங்காலத்தைப் பலப்படுத்த எந்தப் பாடப்பிரிவைத்  தேர்ந்தெடுக்கலாம் என்பது குறித்து  மாணவர்களிடம் விளக்கி பேசினார்.

Higher education guidance program for students in Chidambaram

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆதிதிராவிட  மற்றும் பழங்குடியின நல அலுவலர்  லதா அனைவரையும் வரவேற்றார். மண்டல உதவி இயக்குநர் சுப்பிரமணியன்,  ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் சரவணகுமார்,  நந்தனார் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் குகநாதன், குமராட்சி வட்டார வள மைய மேற்பார்வையாளர் இளவரசன்,  ஒருங்கிணைப்பாளர் பூங்குழலி,  பள்ளித்துணை ஆய்வாளர்  வாழ்முனி,  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இதில் மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் ரவி, அருள்சங்கு, நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராதாகிருஷ்ணன்,  சுவாமி சகஜானந்தா மணி மண்டப ஒருங்கிணைப்பாளர் பாலையா, குமராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பாலமுருகன், உள்ளிட்ட கடலூர் மாவட்டத்தில் உள்ள  ஆதி திராவிட நலத்துறை   பள்ளிகளின் மாணவ மாணவிகள்  300-க்கும் மேற்பட்டவர்கள்  கலந்து கொண்டு  உயர்கல்வி குறித்து ஆலோசனைகளைப் பெற்றனர்.   இவர்களுக்கு உயர் கல்வி குறித்த விவரங்களை கருத்தாளர் கோபி வழங்கினார். சிதம்பரம் ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் சுதா அனைவருக்கும் நன்றி கூறினார்.

Next Story

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.