Skip to main content

நடராஜர் கோயில் ஆயிரம்கால் மண்டபத்தை திருமண மண்டபமாக மாற்றி மரபுகளை மீறும் தீட்சிதர்கள்.

Published on 13/09/2019 | Edited on 13/09/2019

சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள ஆயிரம் கால் மண்டபத்தில் திருமணம் நடத்தி மரபுகளை மீறியுள்ளதாக பக்தர்கள் குற்றம் சாட்டி முகம் சுளித்தனர்..
 

chidambaram

 

 

சிதம்பரம் நடராஜர் கோயில் உலக புகழ் பெற்றது. இக்கோயில் அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் தேவாரப்பாடல் பெற்றதலம் ஆகும்.  மேலும் இதனை பூலோக கைலாசம் என்றும் கைலாயம் என்று பக்தர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர. இக்கோயிலுக்கென்று தனி மரபு உள்ளது. இன்று வரை ஆண்கள் நடராஜரை தரிசனம் செய்ய சித்சபைக்கு சென்றால் மேலாடைய கழிற்றி விட்டு அரைநிர்வாணத்தில் தான் செல்ல வேண்டும். இதில் நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த சட்டத்தை கடைபிடித்து வருகிறார்கள். இதே கோயிலில் பல மரபுகள் சார்ந்த சட்டம் உள்ளது.

பல்வேறு மரபுகளை கொண்ட இந்த கோயிலில் 999 கல்தூண்கள் கொண்ட ஒரு மண்டபம் கோயிலுக்கு வடக்கு புறத்தில் உள்ளது. இதில் ஆனித்திருமஞ்சனம் மற்றும் மார்கழி மாதத்தில் நடைப்பெறும் ஆருத்ரா தரிசனம் விழாவின் போது நடராஜர் ஒருகாலை தூக்கிகொண்டு ஒரு காலுடன் நிற்கும் இந்த சிலையை இந்த மண்டபத்தில் வைத்தவுடன் வருடத்தின் நான்கு நாட்களுக்கு இது 1000 கால் மண்டபமாக உள்ளதாக பக்தர்கள் நம்பிக்கை வைத்து வழிபட்டு வருகிறார்கள்.

நடராஜர் இந்த மண்டபத்தில் இருந்து தான் பக்தர்களுக்கு தரிசனம் தரும் நிகழ்ச்சி நடைபெறும். இதனை காண பல லட்சம் பக்தர்கள் ஆண்டுக்கு இருமுறை கூடுவார்கள். இதனால் இந்த மண்டபத்தை ஆண்மீக நிகழ்ச்சிக்கு தவிர மற்ற எந்த நிகழ்ச்சிக்கும் அனுமதி தரமால் பல ஆயிரம் காலம் மரபுகளை காத்து வந்தனர்.

இப்படியுள்ள இந்த மண்டபத்தில் தீட்சிதர்கள் சின்டிகேட் அமைத்து கொண்டு சிவகாசியை சேர்ந்த தீப்பெட்டி தொழிலதிபர் மகளுக்கும், சென்னை பாத்திரகடை தொழிலதிபர் மகனுக்கு திருமணம் செய்ய பல லட்சங்களை கோயிலுக்கென்று வாங்கி கொண்டும், தீட்சிதர்கள் தனித்தனியாக பல லட்சங்களை பெற்றுக்கொண்டு மரபு வாய்ந்த இந்த மண்டபத்தில் திருமணநிகழ்ச்சிக்கு ஒப்புதல் கொடுத்துள்ளதாக பக்கதர்கள் மத்தியில் குற்றச்சாட்டு பரவலாக பேசப்படுகிறது.

அனுமதியை பெற்ற தொழிலதிபர்கள் ஆயிரம்கால் மண்டபத்தை மின் விளக்குள், மலர் தோரணங்கள், வண்ண சீலைகள், பச்சை இலைகளால் நுழைவாயில் தோரணம் என நடராஜர் கோயிலை நட்சித்திர ஓட்டலாக மாற்றினார்கள். உணவு ஏற்பாட்டுக்கு மண்டபத்திற்கு அருகிலே பெரிய கொட்டாகை அமைத்து 200-க்கும் மேற்பட்ட சமையலர்களை கொண்டு அசத்தியுள்ளனர். திருமணம் முடியும் வரை வெளி ஆட்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை, திருமண பேட்ஜ் அணிந்தவர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

புனித இடமான ஆயிரம்கால் மண்டபத்தில் இதுவரை எந்த திருமண விழாவும் நடைப்பெறாத நிலையில் தற்பொழுது திருமணம் நடத்த கோயில் தீட்சிதர்கள் அனுமதி அளித்துள்ளது சிதம்பரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  மேலும் கோயிலில் சமான்யர்களுக்கு ஒரு சட்டம், வசதி படைத்தவர்களுக்கு ஒரு சட்டமா? என முகம் சுளித்து சென்றனர். மேலும் இந்த சம்பவத்தை செல்போனில் படமெடுத்து இதனை கேட்க யாருமில்லையா? என சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளனர். இதனால் சிதம்பரம் உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள சிவ பக்தர்களிடம் தீட்சிதர்களின் செயல்பாடு கோயிலின் மரபு மீறிய செயலாக உள்ளதாக பேசப்படுகிறது.

இதுகுறித்து இந்த திருமணத்தை நடத்திவைத்த பட்டு தீட்சிதரை தொடர்புகொண்டு பேசியபோது, “ஆயிரம் கால் மண்டபத்தை திருமணத்திற்கு வாடகை விடவில்லை. அந்த மண்டபத்தில் திருமணம் நடைபெறவில்லை. கோவிலில் கும்பாபிஷேக பணி நடைபெற்றதால் தற்செயலாக அங்கு நடைபெற்றது. யாருக்கும் அங்கு திருமணம் நடத்த அனுமதி இல்லை. சென்னையை சேர்ந்தவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. பொண்ணு, மாப்பிளை பெயர் தெரியாது என இழுத்தார். சரி போனில் பேசவேண்டாம் நேரில் வந்து உங்களிடம் பேசுகிறேன் என்றதுக்கும் மறுத்துவிட்டார், இந்த திருமண நிகழ்வுக்கு கோயில் செகரட்ரியிடம் அனுமதி பெற்றுதான் நடத்தப்பட்டது. இதற்கு பணம் எதுவும் வாங்கவில்லை” என்று மறுத்தார்.

இன்று திருணத்திற்கு பல ஆயிரம் ஆண்டுகால மரபுகளை மீறி அனுமதி அளித்துள்ளனர். கோயிலில் தீட்சிதர்கள் வைத்தது தான் சட்டம் என்று செயல்பட்டு வருவதால் பல்வேறு தவறுகள் வெளியே தெரியாமலே போய்விடுகிறது என்று சிவபக்தர் ஒருவர் காட்டமாக கூறுகிறார். மேலும் கோயில் நிர்வாகத்தை தனி ஐஏஎஸ் அதிகாரியை கொண்டு நிர்வகிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“காங்கிரஸ் ஆட்சியில்தான் இந்தியா நிலைகுலைந்து போனது” - நிர்மலா சீதாராமன்

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
Nirmala Sitharaman said It was under Congress rule that India became unstable

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில், மாநில தலைவர்கள் முதல் தேசிய தலைவர்கள் வரை அனைவரும் தமிழ்நாட்டைச் சுற்றி சுழன்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சிதம்பரம் தொகுதி பாஜக வேட்பாளர், கார்தியாயினிக்கு ஆதரவாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், “சிதம்பரத்தில் பாஜக வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்க எனக்கு வாய்ப்பு அளித்ததற்கு நான் பெருமையாக கருதுகிறேன்.  தமிழ்நாட்டுக்கு பல திட்டங்களை கொண்டு வந்தவர் மோடி. பிரதான் மந்திரி கரி கல்யாணம் அன்னை யோஜனா திட்டத்தில் 80 கோடி மக்களுக்கு 2020ல் இருந்து இன்று வரைக்கும், இலவசமாக தனிநபர் ஒருவருக்கு 5  கிலோ வீதம் அரிசி வழங்கி வருகிறார். அதேபோல் கோதுமை, வழங்கும் திட்டம் செயல்படுகிறது.

விவசாயிகள் நலன் கருதி பீயன்கிசான் சமான்  யோஜனா, திட்டத்தின் கீழ் உங்களுடைய அக்கவுண்டில் ரூ.6,000 வருஷத்துக்கு வருகிறது. விவசாயப் பொருள்களுக்கு டபுள் மடங்கு விலை உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 11 மெடிக்கல் காலேஜ் திறந்து வைத்தார் மோடி, அதில் ஒன்று அரியலூரில் உள்ளது. இதைத் தவிர நேஷனல் ஹைவே விரிவாக்குதல் செய்வதற்கும் நல்ல சாலையாக போடுவதற்கும் பணம் கொடுக்கப்பட்டுள்ளது. 60 கிலோ மீட்டர் ரோடுக்கு மீன்சுருட்டி நேஷனல் ஹைவேக்கு  ரூ.1025  கோடி ரூபாய் ரோடு போடுவதற்கு கொடுக்கப்பட்டுள்ளது. புதுச்சத்திரம் ரயில்வே நிலையம் புதுமையாக்கப்படுவதற்கு வேண்டுமென்ற திட்டம் போட்டு உள்ளார்கள். அரியலூர், சிதம்பரம்  ஸ்டேஷன் இவற்றை எல்லாவற்றிற்கும் அமர்த்பாரத் ஸ்டேஷன் ஸ்கீம் மூலமாக புதுப்பிக்கப்படும். மீனவர்கள் அதிகமாக உள்ள ஏரியா இது, விவசாயிகளுக்கு கிசான் கிரெடிட் கார்டு இதை வைத்து பேங்கில் விவசாயிகள் கடன் வாங்க முடியும், அதற்கு அரசு மூலம் மானியம் கொடுக்கப்படுகிறது. இதனால் குறைந்த வட்டியில் அவர்களுக்கு கடன் கிடைக்கிறது.

சிதம்பரம் பகுதியில் கிசான் கிரெடிட் கார்டு அனைத்து மீனவர்களுக்கும் கிடைப்பதற்கு கணக்கு எடுக்கப்படும். முந்திரி தொழில் ஈடுபடும் பெண்களுக்கு சுய உதவிக் குழு மூலமாக. அவர்களை கூட்டமைத்து அவற்றை சுத்திகரிப்பு செய்து  வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய முடியும், அண்ணாமலை பல்கலைக்கழகமும் அங்குள்ள மருத்துவமனையும் அரசு கட்டுப்பாட்டில் எடுத்த பிறகு மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

திமுக, காங்கிரஸ் கட்சி மற்றும் தோழமைக் கட்சியில் ஆட்சியில் இருக்கும் போது தமிழ்நாட்டுக்கு ஒன்றும் செய்யவில்லை. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 10 ஆண்டுகளில் ஊழல் காரணமாக இந்திய நாடு நிலை குலைந்து போனது, நாட்டின் தரவரிசை பட்டியலில் இந்தியா 5 ரேங்க் பட்டியலில் சென்று விட்டது. இது மோடி ஆட்சியில் சரி செய்யப்பட்டுள்ளது. மேலும் 2020ல் கொரோனா தொற்று நோய் வந்ததும் உலகமே நடுங்கியது. அந்தச் சமயத்திலும் நாட்டை முன்னேற்றத்துக்கு கொண்டு வந்தவர் மோடி

மோடி வந்தால், கோ பேக் மோடி என்று தமிழ்நாட்டில் குரல் கொடுத்து வருகிறார்கள். அண்ணாமலை ஐபிஎஸ் படித்துவிட்டு அரசியலுக்கு வந்தவரை ஜோக்கர் என்று ஏளனமாக பேசுகிறார்கள், ஆனால்  அவர் மக்களுக்கு சேவை செய்து வருகிறார்” என்று பேசினார்.

Next Story

திருமாவளவனை கிராமத்திற்கு அழைப்பதில் போட்டி; வி.சி.கவினர் இடையே மோதல்

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
Clash between VCk over inviting Thirumavalavan to village

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி வி.சி.க., வேட்பாளரும் அக்கட்சியின் தலைவருமான திருமாவளவன், அமைச்சர் பன்னீர்செல்லம் தலைமையில் புவனகிரி ஒன்றியத்தில் பல்வேறு பகுதியில் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். மருதுாரில் ஓட்டு சேகரித்தவர், நிகழ்ச்சியில் திட்டமிட்டவாறு அருகில் உள்ள பகுதிகளுக்கு ஓட்டு சேகரிக்க சென்றார். இதில் வி.சி.க., இளைஞர்கள் கிருஷ்ணாபுரம், நத்தமேடு, ஜெயங்கொண்டம், ஆலம்பாடி உள்ளிட்ட கிராமங்களுக்கு தனித்தனியாக அழைத்தனர். அதற்கு திருமாவளவன் நேரம் குறைவாக உள்ளது. பிறகு வந்து சந்திக்கிறேன், திட்டமிட்டவாறு சில கிராமங்களுக்கு செல்ல வேண்டும் என்றார்.

இதில் சிலர் வேறு ஊருக்கு செல்லட்டும் வழி விடுங்கள்.. என்றனர். இதனால் இளைஞர்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக் கெண்டனர். மேலும் எங்கள் ஊருக்கு வரவேண்டும் என கோரி மருதுார் – ஜெயங்கொண்டம் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் ஆனதால் மிகுந்த பரபரப்பு காணப்பட்டது.

போலீசார் இல்லாததால் மறியல் செய்தவர்களை அப்புறப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.  இதனால் திருமாவளவன் வேறு ஊருக்கு ஓட்டு கேட்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அதன் பின் இரவு 9.00 மணிக்கு தகவலறிந்து வந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து போக எச்சரித்தும் கண்டு கொள்ளாமல் போலீசாரிடம் முரண்பாடாகப் பேசினர். இதனால் நீண்ட நேர போராட்டத்திற்குப் பின் குறைந்த அளவில் இருந்த போராட்டக்காரர்களை போலீசார்  விரட்டியடித்து  கலைத்தனர்,  இதனால் புவனகிரிக்கு வந்த திருமாவளவன், இரவு காலம் கடந்து வந்ததால் ஓட்டு கேட்காமல் கையை அசைத்தவாறு திரும்பிச்சென்றார்.