Chidambaram Nataraja Temple Issue High Court warns

சிதம்பரம் நடராஜர் கோவிலில் மாநில அளவிலான நிபுணர் குழு ஒப்புதல் பெறாமல் கோயிலில் மாற்றங்கள் மற்றும் கட்டுமானம் மேற்கொள்வதைத்தடுக்கக் கோரியும், கோயில் கணக்குகளை சமர்ப்பிக்க பொது தீட்சிதர்கள் குழுவுக்கு உத்தரவிட வேண்டும் என அறநிலையத்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

Advertisment

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர். மகாதேவன், பி.டி. ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு கடந்த 2 நாட்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அறநிலையத்துறை தரப்பில் வாதிடுகையில், “கட்டுமானத்தை மேற்கொள்ள மாட்டோம் என்ற உத்திரவாதத்தை மீறி தீட்சிதர்கள் செயல்படுகின்றனர்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான ஆதாரத்தையும் நீதிமன்றத்தில் அறநிலையத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்டது. மேலும், “கோயில் நிர்வாகத்தின் சார்பில் கடந்த 2022 - 2023 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட வருமான வரித் தாக்குதலில் 2 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. ஆருத்ரா தரிசன விழாவில் சுமார் 6 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது “என அறநிலையத்துறை சார்பில் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது.

Advertisment

இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், “சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா அறக்கட்டளை நிர்வாகத்தின் வரவு - செலவு விவரங்களைத்தாக்கல் செய்ய வேண்டும். கோயிலில் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்பதை நிரூபிக்க காணொலிகளை சமர்ப்பிக்க வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கை மார்ச் 6 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்திருந்தனர். இந்நிலையில் இன்று மீண்டும் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அறநிலையத்துறை தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் அருணன் ஆஜராகி வாதிடுகையில், “உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும், கட்டுமான பணிகள் மூலம் கோயிலில் மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக ஆய்வு செய்ய மாவட்ட நீதிபதிகளை அனுப்ப வேண்டும்” எனத் தெரிவித்து இதற்கான ஆதாரத்தையும் சமர்ப்பித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “ஒப்புதலின்றி சிதம்பரம் நடராஜர் கோயிலில் மாற்றங்கள் மற்றும் கட்டுமானம் செய்யப்படுகிறதா என நேரில் ஆய்வு செய்வோம்” என்று பொது தீட்சிதர்கள் குழுவுக்கு எச்சரிக்கை விடுத்தனர். இந்த வழக்கை மார்ச் 6 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்துள்ளனர்.

Advertisment