Advertisment

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றம்!

Chidambaram Nataraja Temple Arudra Darshan Festival Flag Hoisting

Advertisment

உலகப் புகழ் பெற்ற சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தியின் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவ கொடியேற்று விழா நடந்தது. வருகின்ற 12-ம் தேதி தேர் திருவிழாவும், 13ம் தேதி மார்கழி ஆருத்ரா தரிசன விழாவும் நடைபெறுகிறது. சைவத் திருத்தலங்களின் முதன்மையான சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதம் ஆனித்திருமஞ்சன தரிசனமும் ஆகிய இரு திருவிழாக்கள் தொன்று தொட்டு இக் கோவிலில் நடைபெற்று வருகிறது.

அதன்படி இந்த ஆண்டுக்கான மார்கழி ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றம் இன்று(ஜன.4) காலை 6.15 மணியில் இருந்து 7 மணி வரை நடைபெற்றது. உற்சவ ஆச்சாரியார் சிவராஜ தீட்சதர், மேளதாளங்கள் முழங்க தேவாரம் திருவாசகம் ஓதிட, வேத மந்திரங்கள் முழங்கிட கோயில் கொடிமரத்தில் கொடியேற்றினார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பஞ்சமூர்த்தி கோவில் உட்பிரகாரத்தில் உலா வந்தது. முன்னதாக கொடியேற்றத்தை முன்னிட்டு சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்தி சாமிகளுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதணை காட்டப்பட்டது.

இதனை தொடர்ந்து நாளை( ஜன.5) சுவாமிகள் வெள்ளி சந்திர பிரபை வாகன வீதியுலா, 6-ம் தேதி தங்க சூரிய பிரபை வாகனத்தில் வீதிஉலா, 7-ம் தேதி வெள்ளி பூத வாகனத்தில் வீதியுலா, 8-ம் தேதி வெள்ளி ரிஷப வாகனத்தில் தெருவடைச்சான் வீதி உலாவும், 9-ம் தேதி வெள்ளி யானை வாகன வீதியுலாவும், 10-ம் தேதி தங்கக் கைலாச வாகன வீதி உலாவும் நடக்கிறது. 11-ம் தேதி தங்க ரதத்தில் பிச்சாடனார் வெட்டுக்குதிரையில் வீதியுலாவும் நடைபெறுகிறது.

Advertisment

12-ம் தேதி ஞாயிற்றுக் கிழமை தேர்த்திருவிழாவும், இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்தி சுவாமிகளுக்கு ஏககால லட்சார்ச்சனை நடைபெறுகிறது. 13-ம் தேதி திங்கள் கிழமை அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது.

பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும், பஞ்சமூர்த்தி வீதிஉலா வந்த பின்னர் பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனமும், ஞானாகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது. 14-ம் தேதி செவ்வாய் கிழமை பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதிஉலாவுடன் நடைபெறுகிறது. 15ம் தேதி ஞானப்பிரகாசம் குளத்தில் தெப்ப உற்சவத்துடன் விழா முடிவடைகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் பொதுதீட்சிதர்கள் செய்து வருகின்றனர். உற்சவ 10 நாட்களும் மாலை 6 மணிக்கு சாயரட்சை பூஜையில் சித்சபை முன்பு மாணிக்கவாசகரை எழுந்தருளிச் செய்து திருவெம்பாவை உற்சவம் நடைபெறும். விழாவுக்கவுக்கான ஏற்படுகளை கோவில் பொது தீட்சிதர்கள் செயலாளர் வெங்கடேச தீட்சிதர், துணை செயலாளர் சுந்தர தாண்டவ தீட்சிதர் மற்றும் கோவில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர். கொடியேற்றத்துடன் முன்னிட்டு கோவிலில் சிதம்பரம் டிஎஸ்பி லாமேக் தலைமையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Chidambaram temple
இதையும் படியுங்கள்
Subscribe