Skip to main content

சிதம்பரம் கோயிலில் மாலை 3 மணிக்குள் தரிசன விழாவை முடிக்க சார் ஆட்சியர் உத்தரவு

Published on 03/07/2019 | Edited on 03/07/2019

 

சிதம்பரம் நடராஜர் கோயிலில் இந்த ஆண்டிற்கான ஆனித்திருமஞ்சன திருவிழா கடந்த 29-ந்தேதியில் இருந்து தொடங்கி நடைபெற்று வருகிறது. இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 7-ந்தேதி தேர் திருவிழாவும், 8-ந்தேதி தரிசன விழாவும் நடைபெறுகிறது. இவ்விழாவுக்கு தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள் லட்சக் கணக்கில் வருவார்கள்.

c

 

திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு போதிய வசதிகளை செய்து கொடுக்கும் வகையிலும் விழா ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. சார் ஆட்சியர் விசுமகாஜன் தலைமை வகித்தார். சிதம்பரம் கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் கார்த்திகேயன், நகராட்சி சார்பில் பொறியாளர் மகாதேவன், கோயில் தீட்ஷீதர்கள் சார்பில் பாஸ்கர், நவமணி உள்ளிட்ட மின்துறை, நெடுஞ்சாலைதுறை, உணவு பாதுகாப்பு துறை, போக்குவரத்து துறை, காவல்துறை, தீயணைப்பு உள்ளிட்ட அனைத்து துறைகளை சார்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டு விழா ஏற்பாடுகள் குறித்து பேசினார்கள்.

 

கூட்டத்தில் பக்தர்களின் உடல்நிலையை கருத்தில் கொண்டு தரிசன நிகழ்ச்சியை 8-ந்தேதி மாலை 3 மணிக்குள் நடத்துவது, கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு குடிநீர், கழிவறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் சிறப்பாக செய்வது, கோயிலுக்கு உள்ளே வரும் பக்தர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் செய்ய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்வது என்றும். 7,8 இரு நாட்கள் சிதம்பரம் நகருக்கு உள்ளே வரும் வாகனங்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படும். மேலும் சிதம்பரம் பகுதியில் 8-ந்தேதி டாஸ்மாக் முடப்படும், புலால் விற்பனைக்கும் தடைவிதிக்கப்படும்  என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.  
 

சார்ந்த செய்திகள்