Skip to main content

மருத்துவ மாணவர்களின் போராட்டக் களத்தில் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தப் பேச்சுவார்த்தைத் தோல்வி!

Published on 24/01/2021 | Edited on 24/01/2021

 

 

chidambaram medical college students

தமிழகத்தின் மற்ற அரசு மருத்துவக் கல்லூரியில் வசூலிக்கும் கல்விக் கட்டணத்தையே வசூலிக்க வலியுறுத்தி, கடலூர் மாவட்டம், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 45 நாட்களாக  1,300 மருத்துவ மாணவர்கள் தொடர்ந்து 47 நாட்களாக நூதன முறையில் அறவழியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இந்த நிலையில் பல்கலைக்கழக நிர்வாகம் கல்லூரி விடுதியில் மின்சாரம், குடிநீர், உணவு என அனைத்தையும் தடை செய்துள்ளது. இதனால் பாதிப்படைந்த மாணவர்கள் தேசிய மனித உரிமை ஆணையம் மற்றும் தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர்.

 

இந்நிலையில் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன் தலைமையில் பல்கலைகழக துணைவேந்தர் முருகேசன், பதிவாளர் ஞானதேவன், சிதம்பரம் டி.எஸ்.பி. லாமேக், மருத்துவக் கல்லூரி முதல்வர் மிஸ்ரா, கண்காணிப்பாளர் நிர்மலா உள்ளிட்டோர் போராட்டக் களத்தில் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

 

அப்போது, சிதம்பரம் எம்.எல்.ஏ. பாண்டியன், மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு வரும் ஜனவரி 27-ஆம் தேதி சென்னையில் நடைபெறும் மணிமண்டபம் திறப்பு நிகழ்ச்சியில் முதல்வர் மற்றும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து நல்ல முடிவு எடுப்பதாக உறுதியாகக் கூறினார். அதனால் மாணவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

 

இதற்கு மாணவர்கள் நாங்கள் அமைதியான முறையில் இங்கே அமர்ந்து இருக்கிறோம் என்றும் மாணவ பிரதிநிதிகள் 5 பேர் மட்டும் சென்னையில் அமைச்சரைச் சந்தித்து நல்ல முடிவை அறிவித்தால் நாங்கள் நிரந்தரமாகப் போராட்டத்தை கைவிடுகிறோம் என்றனர். ஆனால் எம்.எல்.ஏ. போராட்டத்தை கைவிட்டால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு அழைத்து செல்வதாகக் கூறினார் அதனை மாணவர்கள் ஏற்கவில்லை. இதனால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதனைத் தொடர்ந்து மீண்டும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  

 

இந்த நிலையில் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் மாநில துணைத்தலைவர் புலிகேசி, மாவட்ட செயலாளர் குலோத்துங்கன் உள்ளிட்ட நிர்வாகிகள் போராட்டக் களத்திற்கு நேரில் சென்று மாணவர்களைச் சந்தித்துப் பேசினர். பின்னர் அவர்கள் அரசு சரியான முடிவு எடுக்கவில்லை என்றால் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரியில் பணியாற்றும் 14,000 மருத்துவர்களும் ஒரு முடிவு எடுக்கும் சூழ்நிலை உருவாகும் என  கூறியுள்ளனர்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்தியாவின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்கிய நாள்” - தொல்.திருமாவளவன்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
today India redemption started writing from Tamil Nadu says Thirumavalavan

சிதம்பரம் நடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிடுகிறார். இவர் தொகுதிக்குட்பட்ட அவரது சொந்த ஊரான அங்கனூர்  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தனது தாயாருடன் வாக்களித்தார்.

இதனைதொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் வாக்குச்சாவடி மையத்திற்கு வெளியே வந்து பேசுகையில், இந்த தேர்தல் இரண்டு கட்சிகளுக்கு எதிரான தேர்தல் அல்ல. சங்‌பரிவார் மற்றும் இந்திய மக்களுக்கு இடையேயான தர்ம யுத்தம்.  நாட்டு மக்கள் வெற்றிபெற வேண்டுமென்பதற்காக இந்தியா கூட்டணி மக்கள் பக்கம் நிற்கிறது.‌ இந்திய அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க இந்தியா கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும்.‌ நாடு முழுவதும் இந்தியா கூட்டணிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.‌தமிழ்நாட்டில் 40க்கும் 40 இடங்களிலும் வெற்றி பெறும்.

கூட்டணி பலம், திமுக அரசின் மூன்றாண்டுகள் நலத்திட்டங்கள், இந்தியா கூட்டணியின் நோக்கங்களால் எங்கள் அணி மாபெரும் வெற்றி பெறும். இந்த தேசத்தின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்குகிறோம் என்பதை அறிவிக்கும் நாள் இன்று. தமிழ்நாட்டுப் பெண்கள் திமுக அரசின் மீது நன்மதிப்பை கொண்டுள்ளனர். டெல்லியில் பாஜக வென்றால் மாநில அரசுகளை கலைக்கும் நிலை வரலாம், அப்படி நடந்தால் மகளிர் உரிமைத் தொகைக்கு ஆபத்து வரலாம்.‌ தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட வேண்டும். ஆந்திரா, தெலுங்கானா கர்நாடகா மற்றும் கேரளாவில் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன். சிதம்பரம் தொகுதியில் பானை சின்னம் அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்” என்றார்.

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.