Skip to main content

மதங்களைக் கடந்த மாசிமகத் திருவிழா; சிதம்பரத்தில் கோலாகலம்

Published on 08/03/2023 | Edited on 08/03/2023

 

chidambaram killai village maasimagam festival celebration with integrity

 

கடலூர் மாவட்டம் கிள்ளையில் ஆண்டுதோறும் மாசிமகத் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இதில் கிள்ளை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட சாமி சிலைகள் மேளதாளம் முழங்க கிள்ளை கடற்கரை பகுதிக்கு கொண்டுவரப்பட்டு தீர்த்தவாரி நடைபெறும். இந்த நிலையில், நேற்று கிள்ளையில் மாசிமக விழா நடைபெற்றது.

 

கிள்ளை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான சுவாமி சிலைகள் கிள்ளை கடற்கரைக்கு கொண்டுவரப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்றது. மாசிமகத்தை முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பலர் கடலில் குளித்துவிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் தந்தனர். ஆண்டுதோறும் கிள்ளை மாசிமகத் திருவிழாவிற்கு ஸ்ரீமுஷ்ணம் பூவராக சாமி தீர்த்தவாரிக்கு வருவது வழக்கம். அதேபோல் செவ்வாயன்று ஸ்ரீமுஷ்ணம் பூவராக சாமி கடற்கரைக்கு வழக்கம்போல தீர்த்தவாரிக்கு வந்தது. கிள்ளை தைக்கால் பகுதியில் தர்கா டிரஸ்ட்  நிர்வாகி சையது சக்காப் தலைமையில் ஏராளமான இஸ்லாமியப் பிரமுகர்கள் வரவேற்பளித்து பட்டு சாத்தினார்கள்.

 

பின்னர் பூவராக சாமி எடுத்து வந்த பிரசாதத்தை அதே பகுதியில் இருந்த தர்காவிற்கு அனைவரும் சென்று உலக நன்மைக்காகவும், மக்களின் நலனுக்காகவும் பாத்தியா ஓதப்பட்டது. அனைவருக்கும் பிரசாதமாக எடுத்து வரப்பட்ட சர்க்கரை வழங்கப்பட்டது. தர்காவில் பாத்தியா ஓதிய பொருட்கள் ஸ்ரீமுஷ்ணம் சாமி கோயில் அர்ச்சகர்களிடம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கிள்ளை பேரூராட்சி தலைவர் மல்லிகா, துணைத் தலைவர் கிள்ளை ரவீந்திரன், பேரூராட்சி உறுப்பினர்கள், செயல் அலுவலர்கள் ஸ்ரீமுஷ்ணம் பூவராக சாமி கோயில் செல்வமணி, சிதம்பரம் அனந்தீஸ்வரன் கோயில் ராஜ்குமார், விவசாய சங்க தலைவர்கள் ரங்கநாயகி, கண்ணன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 

கிள்ளை தர்கா டிரஸ்டி நிர்வாகி சையது சக்காப் கூறுகையில், இந்த நிகழ்வு எங்களது முன்னோர்களால் கடந்த 1892 ஆம் ஆண்டு முதல் செய்யப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து நாங்களும் செய்து வருகிறோம். பூவராக சாமி வரும்போது மேளதாளங்களுடன் வரவேற்று அவர்கள் எடுத்து வரும் பிரசாதத்தை பெற்றுக்கொண்டு அதனை தர்காவில் வைத்து பாத்தியா ஓதி இந்த நாட்டில் அனைவரும் சுபிட்சமாக இருக்கும் வகையில் அனைவரும் பிரார்த்தனை மேற்கொண்டு அதனை மீண்டும் சாமியிடம் வழங்குவோம் அதனைப் பெற்றுக்கொண்டு சாமி கடற்கரைக்கு செல்வார். கிள்ளை பேரூராட்சி மன்ற துணைத் தலைவரும் திமுக மாநில செயற்குழு உறுப்பினருமான கிள்ளை ரவீந்திரன் கூறுகையில், "இது நூற்றாண்டு காலமாக நடைபெற்று வரும் மதம் கடந்த மாசிமகமாக கிள்ளையில் நடைபெற்று வருகிறது. இதனை கிள்ளை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வரவேற்று வழி அனுப்பி வைப்பதில்  பெருமை கொள்கிறோம்" எனக் கூறுகிறார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

13வது நோன்பு நாளில் சுடச்சுட ஆவி பறக்க தயாரான பிரியாணி

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
Ready-to-eat Biryani to bake on the 13th day of Lent

ஏப்ரல் மாதம் ரம்ஜான் பண்டிகை வருவதையொட்டி உலகம் முழுவதும் இஸ்லாமிய மக்கள் நோன்பு இருந்து வருகின்றனர். சூரியன் உதயம் முதல் அந்தி சாயும் வரை உணவு உண்ணாமல், நீர் அருந்தாமல் நோன்பு இருப்பர். மாலை 6 மணிக்கு மசூதிக்கு சென்று நமாஸ் செய்துவிட்டு உணவு உண்பார்கள். காலை 5 மணிக்கு முன்பாக உணவு உண்பதை நிறுத்திவிடுவர். நோன்பு காலத்தில் இயலாத மக்களுக்கு மதம் பார்க்காமல் உதவுவார்கள்.

வேலூர் கோட்டை எதிரே 400 கிலோ சிக்கன் கறி கொண்டு சுடச் சுட ஆவி பறக்க நோன்பு பிரியாணி தயார் செய்யப்பட்டது. வேலூர் மக்கான் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 13 வது நோன்பு நாளில் பிரியாணி சமைத்து சுமார் 2000 வீட்டுக்கு பகிர்ந்து அளித்தனர்.

சனிக்கிழமை மாலை 5 மணியிலிருந்து பிரியாணி தயார் செய்யும் பணி தொடங்கிய நிலையில் நள்ளிரவு ஒரு மணி வரை பிரியாணி சமைக்கப்பட்டது. இந்தப் பணியில் சுமார் 130 பேர் ஈடுபட்ட நிலையில், மக்கான் பகுதியில் உள்ள வீடுகளுக்கு சுமார் அதிகாலை 2.30 மணிக்கு முன்பு பகிர்ந்தளிக்கப்பட்டது. ரம்ஜானை முன்னிட்டு 13 வது நோன்பு நாளில் அதிகாலையில் மக்கான் பகுதியில் உள்ள அனைத்து இஸ்லாமியர்களும் பிரியாணியை உண்டு மகிழ்ந்தனர்.

Next Story

திடீரென சரிந்து விழுந்த தேர்; மயானக்கொள்ளை விழாவில் நடந்த சோகம்

Published on 10/03/2024 | Edited on 10/03/2024
The chariot that came grand and collapsed miserably; Tragedy at the funeral ceremony

வடமாவட்டங்களில் பிரபலமான மயானக் கொள்ளை திருவிழா வேலூரின் மிக முக்கியமான பாரம்பரிய திருவிழாக்களில் ஒன்றாகவும் உள்ளது. பாலாற்றங்கரையில் மயானக்கொள்ளை திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி மார்ச் 9ஆம் தேதி  மயான கொள்ளை திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இத்திருவிழாவையொட்டி வேலூர், விருதம்பட்டு, சைதாப்பேட்டை, தோட்டப்பாளையம், மக்கான், சத்துவாச்சாரி, கழிஞ்சூர் மற்றும் நகரின் பல பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள், அங்காள பரமேஸ்வரி அம்மனை அலங்கரித்து கோவிலில் இருந்து பிரமாண்ட தேர் மூலம் ஊர்வலமாக பாலாற்றங்கரை சுடுகாட்டிற்கு எடுத்து வந்தனர்.

ஊர்வலத்தின் பின்னேயும் முன்னேயும் பக்தர்கள் தங்களுடைய நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் காளியம்மன், முருகன், சிவன், விநாயகர், அங்காளபரமேஸ்வரி அம்மன் போன்ற கடவுள் போல வேடமிட்டு சென்றனர். சிலர் கையில் சூலாயுதம் ஏந்தி ஆக்ரோஷமாக சென்றதும் பார்ப்பதற்கு தத்ரூபமாக அமைந்து மெய் சிலிர்க்கச் செய்தது.

ஊர்வலத்தில்  இளைஞர்கள் இளம் பெண்கள், சிறுவர்கள்  டி.ஜே.பாடல்களை ஒலிக்கவிட்டு குத்தாட்டம் போட்டு மகிழ்ந்தனர். சில ஆண்கள் பலர் பெண்கள் போல வேடமிட்டு, சிலர் எலும்பு துண்டுகளை வாயில் கவ்விய படியும், ஆட்டுக் குடலை மாலையாக அணிந்த படியும் ஊர்வலத்தில் சென்றது ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

The chariot that came grand and collapsed miserably; Tragedy at the funeral ceremony

இதில் விருதம்பட்டு, கழிஞ்சூர், மோட்டூர், வெண்மணி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சுமார் 60 அடி உயரம் கொண்ட 3 தேர்களில் அங்காள பரமேஸ்வரி அம்மன் அலங்கரிக்கப்பட்டு வேலூர் பாலாற்றங்கரைக்கு ஊர்வலமாக வந்து சூறையாடல் நடைபெற்றது. சூறையாடல் முடிந்து 3 தேர்களும் திரும்பும் சமயம் மோட்டூர், வெண்மணி பகுதியை சேர்ந்த சுமார் 60 அடி உயரம் கொண்ட தேர் எதிர்பாராதவிதமாக சரிந்து கீழே விழுந்தது. தேர் சரிவதை பார்த்து அங்கிருந்த ஆயிரக்கணக்கானவர்கள் தப்பி ஓடி தப்பினர். ஆனாலும் வெண்மணி பகுதியைச் சேர்ந்த விமல்ராஜ் (30) என்பவர் சிக்கிக்கொண்டார். அவரின் அலறலை கேட்டு ஓடிவந்த பொதுமக்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். லேசான காயங்களுடன் அவர் சிகிச்சைபெற்று வருகிறார்.

பாலாற்றில் டிராக்டர் மூலமாக தேர் திரும்பும் போது மணல் மற்றும் அங்கு செய்யப்பட்டிருந்த உருவ பொம்மைகளால் தேர் நிலை தடுமாறி கீழே சரிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. நல்லவேளை பொதுமக்கள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வேலூர் வடக்கு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.