
சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன விழாவில் பிற மாவட்ட பக்தர்களையும் அனுமதிக்க வேண்டும் என, கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோவிலில், டிசம்பர் 28-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை மார்கழி ஆருத்ரா தரிசன மகோத்சவம் நடைபெற உள்ளது. ஆனால், இந்த உற்சவத்தில் கடலூர் மாவட்டம் தவிர, பிற மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதியில்லை என கடலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 21-ம் தேதி மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த விஷ்ணுதாஸ் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு, நீதிபதிகள் மகாதேவன் மற்றும் அனிதா சுமந்த் அமர்வில் சிறப்பு வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘பிற மாவட்ட பக்தர்களுக்கு ஒட்டுமொத்தமாக தடை விதிப்பதற்கு பதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உதவியுடன், தனிமனித விலகல் நடைமுறைகளைப் பின்பற்றி கூட்டத்தை முறைப்படுத்துவது குறித்து பரிசீலிக்கலாம். ஏற்கனவே, பிற மாவட்டங்களுக்குப் பயணிக்க பின்பற்றப்பட்ட, இ–பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு தளர்வுகளும் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால், பிற மாவட்ட மற்றும் பிற மாநில பக்தர்களுக்கு, தனிமனித விலகல் உள்ளிட்ட விதிகளைப் பின்பற்றி, ஆருத்ரா தரிசன மகோத்சவ நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதிக்கும்படி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டும்.’ என வாதிட்டார்.
தமிழக அரசுத்தரப்பில், ‘கரோனா பரவல் சூழலைக் கருத்தில் கொண்டு, பக்தர்களின் பாதுகாப்புக்காகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் மட்டுமே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பக்தர்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் நோக்கம் ஏதும் அரசுக்கு இல்லை.’எனத் தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘மாநிலங்களுக்கு இடையிலும், மாநிலத்திற்குள்ளும், மக்கள் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், மத விவகாரங்களில் காரணமற்ற கட்டுப்பாடுகள் விதிக்க முடியாது. சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடைபெற உள்ள ஆருத்ரா தரிசனத்திற்கு அனைத்து பக்தர்களையும் அனுமதிக்க வேண்டும்.
மேலும், மாவட்ட ஆட்சியரின் கடிதத்தில் கூறியுள்ளபடி, பிற்பகல் 3 மணி முதல் 4 மணி வரையிலும், 4.30 மணி முதல் 5.30 மணி வரையிலும், 6 முதல் 7 மணி வரையிலும், தலா 200 பக்தர்கள் வீதம், முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் அனுமதிக்க வேண்டும். பக்தர்களுக்கு வெப்பநிலை பரிசோதனை செய்ய வேண்டும். வெப்பநிலை அதிகமாக இருக்கும் பட்சத்தில், சம்பந்தப்பட்டவர்களுக்கு கரோனா பரிசோதனை நடத்தி, கரோனா அறிகுறி இல்லாவிட்டால் அனுமதி வழங்க வேண்டும்.
அனைத்து பக்தர்களும் முகக்கவசம் அணிய வேண்டும். கரோனா பரிசோதனை சான்று கட்டாயமில்லை. திறந்த வெளியில் 50 சதவீதம் பேர் கூட அனுமதியளித்த மத்திய அரசின் உத்தரவுகளைப் பின்பற்ற வேண்டும்.’ என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)