Skip to main content

பணி நிரந்தரம் செய்யக்கோரி போராட்டம்; விபரீத முடிவெடுத்த ஊழியர்

Published on 28/03/2023 | Edited on 28/03/2023

 

 chidambaram annamalai university temporary employees incident 

 

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக தொகுப்பு ஊதிய ஊழியர் ஒருவர் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடந்த 13 ஆண்டுகளாக 205 பேர் தொகுப்பு ஊதிய ஊழியர்களாக பணியாற்றி வருகிறார்கள். இவர்களின் மாத ஊதியம் ரூ. 1500 இல் இருந்து தற்போது ரூ. 5 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது இந்த நிலையில் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாக இவர்கள் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி தொடர்ந்து பல்கலைக்கழக வளாகத்தில் பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

 

கடந்த 13-ஆம் தேதி பல்கலைக்கழக துணைவேந்தர் அலுவலகம் முன்பு தொடர் போராட்டத்தை அறிவித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்ததால், துணைவேந்தர் அலுவலகத்திற்கு சற்று தூரம் உள்ள இடத்தில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை 11வது நாள் போராட்டத்தில் ஈடுபட்டபோது போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் முத்துலிங்கம் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டு விஷமருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். உடனடியாக இதனை அறிந்த சக ஊழியர்கள் இவரை மீட்டு ராஜா முத்தையா கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இவர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

 chidambaram annamalai university temporary employees incident 

 

இதனையடுத்து தொகுப்பு ஊதிய ஊழியர்கள் 50க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனை வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து சிதம்பரம் - பிச்சாவரம் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அறிந்த சிதம்பரம் ஏ.எஸ்.பி ரகுபதி தலைமையிலான காவல்துறையினர் இவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதால் சாலை மறியலைக் கைவிட்டனர். மேலும், பணி நிரந்தரம் செய்யும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அறிவித்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பணிச்சுமை காரணமாக டான்சி நிறுவன ஊழியர் எடுத்த விபரீத முடிவு

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

tansi company employee  lost their life due to workload

 

ஈரோடு, மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி (53). இவரது மனைவி ராதா (48). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இருவரும் வெளியூரில் வேலை பார்த்து வருகின்றனர். ரங்கசாமி கோவையில் உள்ள தமிழ்நாடு அரசின் டான்சி நிறுவனத்தில் போர்மேனாக வேலை பார்த்து வந்தார்.

 

கடந்த சில மாதங்களாகவே தனக்கு பணிச்சுமை அதிகமாக இருப்பதாக ரங்கசாமி தனது மனைவியிடம் கூறி புலம்பி வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம்(29.11.2023) காலையில் ரங்கசாமி பணிக்குச் சென்றார். மனைவி ராதா அவர்களது உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தார். மீண்டும் மாலையில் ராதா வீட்டுக்கு வந்தபோது வீடு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்திருக்கிறது. ரங்கசாமியின் செல்போனுக்கு அழைத்தபோது அவர் போனை எடுக்கவில்லை. 

 

இதையடுத்து சந்தேகமடைந்த ராதா, அக்கம்பக்கத்தினரின் உதவியுடன், மாடிக்குச் சென்று பார்த்தபோது, அங்குள்ள குளியல் அறையில் நைலான் கயிற்றால் தூக்கில் தொங்கிய நிலையில் ரங்கசாமி இருந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே ரங்கசாமி இறந்துவிட்டதாகத் தெரிவித்தார். டான்சி நிறுவனத்தின் உயர் அதிகாரி செய்த தொந்தரவால்தான் ரங்கசாமி தற்கொலை செய்து கொண்டுள்ளார் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

 

Next Story

திருச்சி பெல் அதிகாரி பணியிட மாற்றம்; ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Published on 11/05/2023 | Edited on 11/05/2023

 

trichy bhel employee transfer trichy to punjab 

 

திருச்சி பெல் (BHEL) நிறுவனத்தில் சிவில் பிரிவில் பணியாற்றி வரும் தொழிற்சங்க தலைவரும், ஐஎன்டியுசியின் பொதுச் செயலாளருமான கல்யாணகுமாரை பெல் நிர்வாகம் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திருச்சியில் இருந்து பஞ்சாப் மாநிலத்திற்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.

 

பணியிட மாற்றம் செய்வதற்கு 15 நாட்களுக்கு முன்பாகவே முறையான அறிவிப்பு வழங்கப்பட்டு, இங்கிருந்து பணியில் விடுவிப்பதற்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும். ஆனால், தன்னை பெல் நிர்வாகம் வேண்டும் என்றே திட்டமிட்டு பணியிட மாற்றம் செய்து பழிவாங்குவதாக கல்யாணகுமார் குற்றம் சாட்டியுள்ளார். அதனைக் கண்டித்து இன்று காலை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் தொழிலாளர் அமலாக்க அதிகாரி அலுவலகத்தை ஐஎன்டியுசி உறுப்பினர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய கல்யாணகுமார், "நான் பெல் நிறுவனத்தை எதிர்த்து தொழிலாளர்களுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடர்ந்து உள்ளதால் என்னை பழிவாங்கும் நோக்கத்தில் பெல் நிர்வாகம் பணியிட மாற்றம் செய்துள்ளது. எனவே இந்த தொழிலாளர் விரோதப் போக்கை உடனடியாக கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி இன்று மத்திய அரசின் தொழிலாளர் அமலாக்க அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுத்துள்ளோம்" என்று கூறினார்.