சிதம்பரம் அண்ணாமலை நகர் கலுங்குமேடு பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடிகோழி பாண்டியன் (வயது 40). இவர் மீது 10க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளது. இவர் அண்ணாமலை நகர் ராஜா முத்தையா மருத்துவமனை அருகில் உள்ள ஒரு ஹோட்டலில் கடந்த 20-ந்தேதி இரவு சாப்பிட்டுக் கொண்டு இருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள் கோழி பாண்டியன் மீது வெடிகுண்டு வீசி அரிவாளால் வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி ஒடி விட்டனர். இதுகுறித்து அண்ணாமலைநகர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடிவந்தனர்.

c

Advertisment

இந்த நிலையில் சிதம்பரம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைத்து தேடிவந்தனர். இதனைதொடர்ந்து கடலூர் சாலைகரை பகுதியை சார்ந்த ஜெயசீலன்(22), கடலூர் முதுநகரை சேர்ந்த ராஜா(34), அண்ணாமலைநகர் சக்கரா அவென்யூ மணி(65), கலுங்குமேடு மஞ்சுளா(34) ஆகிய நான்கு பேரை அண்ணாமலைநகர் போலீஸார் மற்றும் தனிப்படையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இவர்களிடம் விசாரணை மேற்கொண்டு திங்கள் கிழமை மாலை சிறைக்கு அனுப்பியுள்ளனர்.

Advertisment

இதுகுறித்து போலீசார் கூறுகையில், கடந்த 2014 ஆம் ஆண்டு அண்ணாமலைநகர் கலுங்குமேடு பகுதியை சார்ந்த குமார், ராஜேஷ் இருவரும் அண்ணன் தம்பிகள். இவர்களை ரவுடிகள் வீடுபுகுந்து நாட்டுவெடிகுண்டு வீசி கொலை செய்து தலையை வெட்டி சென்றார்கள். இதற்கு அதே பகுதியை சார்ந்த கோழிபாண்டியன் என்ற பாண்டியராஜ் தான் காரணம் என கருதிய இவர்கள் இந்த கொலையை செய்துள்ளதாக கூறுகிறார்கள்.