Skip to main content

பாலியல் தொல்லையால் செய்யூர் சசிகலா மரணம்! -சி.பி.சி.ஐ.டி. / சி.பி.ஐ.  விசாரணை கோரி தாயார் சந்திரா வழக்கு!

Published on 21/07/2020 | Edited on 21/07/2020

 

hc

 

தற்கொலை செய்ததாகக் கூறப்படும் செய்யூர் சசிகலா மரணம் தொடர்பான வழக்கை,  சி.பி.சி.ஐ.டி. அல்லது சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, அவரது தாயார் சந்திரா,  சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

 

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூரை அடுத்த நைனார்குப்பத்தைச் சேர்ந்த சசிகலா என்ற 24 வயது இளம்பெண்,  ஜூன் 24-ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக அப்பகுதியைச் சேர்ந்த தி.மு.க. நிர்வாகி தேவேந்திரன் அளித்த தகவலின் அடிப்படையில், செய்யூர் காவல் நிலையத்தினர் உடலைக் கைப்பற்றினர். மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை முடிந்த நிலையில், சசிகாலாவின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்ட நிலையில், தனது தங்கையின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி,  சசிகலாவின் சகோதரர் அருண்பாபு புகார் அளித்தார்.

 

தேவேந்திரன் மற்றும் அவரது சகோதரர் புருஷோத்தமன் ஆகிய இருவரும் தன் தங்கையைக் கொலை செய்து விட்டு நாடகமாடியதாகக் குற்றம் சாட்டியிருந்தார். தங்கை சசிகலா குளிக்கும்போது வீடியோ எடுத்துவைத்து, அந்த வீடியோவை இணையத்தளத்தில் வெளியிட்டுவிடுவதாக மிரட்டி, இருவரும் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும், சசிகலாவின் தோழிகள் அளித்த தகவலின் அடிப்படையில் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக தேவேந்திரன், புருஷோத்தமன் ஆகியோர் தி.மு.க.-வில் இருந்து நீக்கப்பட்டனர். பின்னர், புருஷோத்தமன் கைது செய்யப்பட்ட நிலையில், தேவேந்திரன் சரணடைந்தார்.

 

இந்நிலையில், மகள் சசிகலாவின் மரணம் குறித்த செய்யூர் காவல் நிலைய வழக்கை,  சி.பி.சி.ஐ.டி. அல்லது சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிடக்கோரி, அவரது தாயார் கே.சந்திரா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

 

அவரது மனுவில், சசிகலா மரணம் தொடர்பான வழக்கில், தற்கொலைக்கு தூண்டியதாக மட்டுமே புருஷோத்தமன் மற்றும் தேவேந்திரன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு செய்யூர் காவல் நிலையத்தினர் விசாரித்து வருகின்றனர்.  விசாரணை முறையாக நடக்கவில்லை.  இருவரும்,  தன் மகளை நிர்வாண வீடியோ எடுத்தது, பாலியல் தொல்லை கொடுத்து வன்கொடுமை செய்தது,   மரணம் விளைவித்தது போன்ற பிரிவுகளிலோ, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றத் தடுப்புச் சட்டத்திலோ வழக்குப் பதிவு செய்யாமல் விசாரணை நடத்துவது, இருவரையும் வழக்கிலிருந்து தப்பிக்க வைக்க செய்யும் காவல்துறையின் முயற்சி எனக் குற்றம் சாட்டியுள்ளார். இருவரையும் குண்டர் சட்டத்தில்,  அடைப்பதற்கு போதிய முகாந்திரம் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 

செய்யூர் சசிகலாவின் தாயார் சந்திரா தொடர்ந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. 


 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

18 மாவோயிஸ்டுகள் பலி; சத்தீஸ்கரில் பரபரப்பு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

சத்தீஸ்கர் மாநிலத்தில் 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலம் கன்கர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் மொத்தமாக 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தத் தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று வீரர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மொத்தமாக 18 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள், மெஷின் கன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒரே ஒரு எல்லை பாதுகாப்பு வீரரின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருப்பதாகவும் ஆனால் உயிருக்கு எந்தவிதமான சேதம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்திற்கு முன்பாக நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 18 மாவோயிஸ்டுகள் கொலை செய்யப்பட்டிருப்பது முக்கிய சம்பவமாக பார்க்கப்படுகிறது.  நக்சலைட்டுகள் ஆதிக்கம்  அதிகம் இருக்கும் சத்தீஸ்கரில் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.