Skip to main content

செஸ் ஒலிம்பியாட்- பிரதமர் படத்தை சேர்க்கக் கோரி வழக்கு! 

Published on 28/07/2022 | Edited on 28/07/2022

 

Chess olympiad- a lawsuit demanding inclusion of Prime Minister's picture!

 

செஸ் ஒலிம்பியாட் தொடர்பான விளம்பரங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் படத்தைச் சேர்க்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

 

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இன்று (28/07/2022) மாலை 05.30 மணிக்கு நடைபெறும் விழாவில், மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இந்த விழாவில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தலைவர், தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப. உள்ளிட்ட கலந்துக் கொள்கின்றனர். 

 

இதனிடையே, 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக, தமிழகம் முழுவதும் விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கான செலவை தமிழக அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. அந்த விளம்பரங்களில் தமிழக முதலமைச்சரின் படம் மட்டுமே இடம் பெற்றிருந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த பா.ஜ.க.வினர், அந்த விளம்பர பலகையில் பிரதமர் நரேந்திர மோடியின் போஸ்டரை ஒட்டினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இது தொடர்பான வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலானது. 

 

இந்த நிலையில், செஸ் ஒலிம்பியாட் தொடர்பான விளம்பரங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் பெயரையும், படத்தையும் சேர்க்கக்கோரி, மதுரையைச் சேர்ந்த ராஜேஷ் கண்ணா என்பவரது தரப்பில் வழக்கறிஞர் சண்முகநாதன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து, மனுவை வழக்காக தாக்கல் செய்யவும், இன்று (28/07/2022) மதியம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும், உயர்நீதிமன்றக் கிளை தலைமை நீதிபதி அமர்வு அறிவித்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அங்கித் திவாரி ஜாமீன் மனு; நீதிபதி அதிரடி உத்தரவு!

Published on 15/03/2024 | Edited on 15/03/2024
Ankit Tiwari Bail Petition; Judge action order

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் துணை சூப்பிரண்டாக இருக்கக்கூடிய டாக்டர் சுரேஷ்பாபுவின் சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்காமல் இருக்க ரூ. 20 லட்சம் லஞ்சம் பெற முயன்றபோது, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1 ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் மதுரை மண்டல அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்டார். அதன்பின் திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டு மதுரை மத்திய சிறைக்கு மாற்றினார்கள்.  இதற்கிடையே திண்டுக்கல் மாவட்ட நிதிமன்றம், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை மற்றும் உச்சநீதிமன்றத்திலும் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்கள் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டன.

இதனையடுத்து அங்கித் திவாரி இரண்டாவது முறையாக தனக்கு ஜாமீன் வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “தனது கைது என்பது விதிமுறைகளுக்கு எதிரானது. கைது செய்யப்பட்டு 90 நாட்களுக்கு மேலாக சிறையில் இருக்கிறேன். எனவே சட்டப்படி ஜாமீன் வழங்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். இந்த மனு கடந்த 12 ஆம் தேதி (12.03.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் திருவடிக்குமார், “அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்கக் கூடாது. ஏற்கனவே உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் சட்டத்திற்கு உட்பட்டு பரிசீலனை செய்ய வேண்டும் என கூறியிருக்கிறது. எனவே அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்கினால் இந்த வழக்கு நீர்த்துப்போகும்” என வாதிட்டார். மனுதாரர் அங்கித் திவாரி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்க வேண்டும்” எனத் தெரிவித்து ஜாமீனுக்கான நிபந்தனைகள் குறித்து வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி விவேக்குமார் சிங், “தாம் இன்னும் ஜாமீன் வழங்கவில்லை. ஆனால் மனுதாரர் தரப்பு ஜாமீனுக்கான நிபந்தனைகள் குறித்து வாதிடுகிறார். இதனால் அங்கித் திவாரியின் வழக்கில் இருந்து விலகுகிறேன். இந்த வழக்கை விசாரிக்க விரும்பவில்லை” எனக் கோபத்துடன் தெரிவித்து வழக்கில் இருந்து விலகினார்.  இந்நிலையில் நீதிபதி தண்டபாணி முன்பு இன்று (15.03.2024)  விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் திருவடிக்குமார், “ஒரே நேரத்தில் உயர் நீதிமன்றத்தில், உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். வழக்கு விசாரணை முடிவடைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ள நிலையில் விசாரணைக்கு தடை வாங்கியுள்ளார். எனவே இவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது” எனக் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

Ankit Tiwari Bail Petition; Judge action order!

இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, “லஞ்ச ஒழிப்புத்துறை,  அமலாக்கத்துறையில் பணியாற்றும் அதிகாரிகள் லஞ்சம் பெறுவதை ஒரு போதும்  அனுமதிக்க முடியாது. இதுபோன்ற செயல்களை சகித்துக்கொள்ள முடியாது.  இதனை வேடிக்கை பார்க்க முடியாது. இதுபோன்ற அதிகாரிகள் லஞ்ச வழக்கில் சிக்கும்போது இரும்பு கரம் கொண்டு  அடக்க வேண்டும்.  அரசு அதிகாரிகள் லஞ்சம் பெறும் செயல் அதிகரித்திருப்பது நாட்டின் வளர்ச்சிக்கு நல்லது அல்ல. வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறையில் லஞ்சம் ஊடுருவி உள்ளதை சகித்துக் கொள்ள முடியாது.  அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி லஞ்சம் பெற்றதாக கூறப்படும் வழக்கு தீவிரமானது. அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் ஜாமீன் மனுவை  நீதிமன்றம் தள்ளுபடி செய்கிறது” என அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Next Story

அங்கித் திவாரி வழக்கு; நீதிபதி கோபம்! 

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
Ankit Tiwari case; The judge is angry

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் துணை சூப்பிரண்டாக இருக்கக்கூடிய டாக்டர் சுரேஷ்பாபுவின் சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்காமல் இருக்க ரூ. 20 லட்சம் லஞ்சம் பெற முயன்றபோது, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1 ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் மதுரை மண்டல அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்டார். அதன்பின் திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டு மதுரை மத்திய சிறைக்கு மாற்றினார்கள். இதனையடுத்து அங்கித் திவாரி இரண்டாவது முறையாக தனக்கு ஜாமீன் வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “தனது கைது என்பது விதிமுறைகளுக்கு எதிரானது. கைது செய்யப்பட்டு 90 நாட்களுக்கு மேலாக சிறையில் இருக்கிறேன். எனவே சட்டப்படி ஜாமீன் வழங்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். இந்த மனு கடந்த பிப்ரவரி 23 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது அங்கித் திவாரி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. மனுதாரர் கிட்டத்தட்ட 80 நாட்களுக்கு மேலாக சிறையில் இருக்கிறார். உடனடியாக அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்” என வாதிட்டது.

அதனைத் தொடர்ந்து அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “உச்சநீதிமன்றம் இந்த வழக்கிற்கு இடைக்கால தடை மட்டுமே விதித்துள்ளது. வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் வரும் மார்ச் 11 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வர இருக்கிறது. திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை குற்றப்பத்திரிக்கை தயார் செய்து வைத்துள்ளது. எனவே உச்சநீதிமன்ற தீர்ப்பை பொறுத்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். அதுவரை அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது. ஜாமீன் வழங்கினால் சாட்சியங்களை கலைக்க வாய்ப்புள்ளது” என கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துகொண்ட  நீதிபதி, மார்ச் 12 ஆம் தேதிக்கு இந்த வழக்கை ஒத்திவைத்தார். மேலும் உச்சநீதிமன்ற தீர்ப்பை பொறுத்து தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (12.03.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் திருவடிக்குமார், “அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்கக் கூடாது. ஏற்கனவே உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் சட்டத்திற்கு உட்பட்டு பரிசீலனை செய்ய வேண்டும் என கூறியிருக்கிறது. எனவே அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்கினால் இந்த வழக்கு நீர்த்துப்போகும்” என வாதிட்டார். மனுதார் அங்கித் திவாரி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்க வேண்டும்” எனத் தெரிவித்து ஜாமீனுக்கான நிபந்தனைகள் குறித்து வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி விவேக்குமார், “தாம் இன்னும் ஜாமீன் வழங்கவில்லை. ஆனால் மனுதாரர் தரப்பு ஜாமீனுக்கான நிபந்தனைகள் குறித்து வாதிடுகிறார். இதனால் அங்கித் திவாரியின் வழக்கில் இருந்து விலகுகிறேன். இந்த வழக்கை விசாரிக்க விரும்பவில்லை” எனக் கோபத்துடன் தெரிவித்துள்ளார்.