சட்டமேதை அம்பேத்கரின் 135 ஆவது பிறந்தநாள் நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு அரசியல் தலைவர்களும் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அம்பேத்கர் சிலைக்கு தமிழக வெற்றிக் கழக கட்சி தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள 'எக்ஸ்' வலைத்தள பதிவில், 'நமது தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 135ஆவது பிறந்த நாளையொட்டி, சென்னை, பாலவாக்கத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.
சட்ட உரிமைகள் மட்டுமில்லை, சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவையும் அனைவருக்குமானவை என்பதை வலியுறுத்தி, தமது வாழ்நாளை மக்களுக்கு அர்ப்பணித்த அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளில் அவரைப் போற்றி வணங்குவோம். நம் சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் நீங்கி, சமத்துவம் என்றும் நிலைத்திட உறுதி ஏற்போம்' என தெரிவித்துள்ளார்.