பள்ளிச் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ள சுஷில் ஹரி பள்ளியின் தாளாளர் சிவசங்கர் பாபா மீண்டும் பிணை கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறார்.
செங்கல்பட்டில் இயங்கிவந்த சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் தாளாளரான சிவசங்கர் பாபா பள்ளி மாணவிகள் மற்றும் முன்னாள் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார். தற்போதுவரை சிவசங்கர் பாபா மீது 3 போக்சோ வழக்குகள் உள்ள நிலையில் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே பிணை கோரி சிவசங்கர் பாபா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் கீழமை நீதிமன்றம் மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் சிவசங்கர் பாபா தரப்பு பிணை கோரி உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது. சிவசங்கர் பாபா தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு வரும் 8 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருக்கிறது.