Skip to main content

8 வழிச்சாலை தீர்ப்பு மகிழ்ச்சியே... பாதிக்கப்படவிருந்த விவசாயிகள் பேட்டி

Published on 08/04/2019 | Edited on 08/04/2019

சேலம் - சென்னைக்கு சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் வழியாக 277 கி.மீ தூரத்துக்கு 8 வழிச்சாலை 10 ஆயிரம் கோடியில் அமைக்க மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவும், தமிழகத்தை ஆளும் அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி அரசும் இணைந்து முடிவு செய்தது. இதனால் வேலை வாய்ப்புகள் பெருகும், விரைவில் சென்னைக்கு சேரலாம் என காரணம் சொன்னார்கள் பாஜகவும், அதிமுகவும்.

 

chennai salem 8 way road


இந்த சாலையால் 3 ஆயிரம் ஹெக்டர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகிறது, 5 இடங்களில் பாதுகாக்கப்பட்ட வனங்கள் அழிக்கப்படுகிறது என விவசாய அமைப்புகளும், சுற்றுசூழல் ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதோடு, சேலத்துக்கு செல்ல ஏற்கனவே இரண்டு தேசிய நெடுஞ்சாலைகள் உள்ள நிலையில் இந்த 8 வழிச்சாலை எதற்காக என்கிற விமர்சனமும் எழுந்தது.


இந்த சாலை பயணமாகவுள்ள சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டத்தின் விவசாயம் பெரும்பாலானவை அழிந்துவிடும் என இந்த திட்டத்தை எதிர்த்து தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக, பாமக, மதிமுக, விசிக, இடதுசாரிகள், விவசாய சங்கங்கள், சமூக ஆர்வலர்கள் பெரும் போராட்டம் நடத்தினர்.


அதோடு, சட்டப்போராட்டத்திலும் குதித்தனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக, பாமக, பூவுலகின் நண்பர்கள், விவசாய அமைப்புகள் சில என தனித்தனியாக வழக்கு தொடுத்தன. வழக்கின் இறுதி விசாரணை கடந்த ஆண்டு டிசம்பர் 14 ஆம் தேதி நடைபெற்றது. அனைத்து தரப்பிலும் இறுதி வாதங்கள் அன்று முடிவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் இன்று காலை  தீர்ப்பளித்தனர். 
 

நிலங்களை கையகப்படுத்த ஏற்கனவே இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்தாலும், அதிமுக அரசாங்கம் அதனை மதிக்காமல் நிலங்களை பறிமுதல் செய்தது. இதற்கு பாஜக அரசும் துணை நின்றது.


இந்நிலையில் ஏப்ரல் 8-ம் தேதியான இன்று சென்னை உயர்நீதிமன்றம் அந்த திட்டத்துக்கு நிரந்தர தடை விதித்துள்ளது. இது 5 மாவட்ட விவசாயிகளை பெரும் மகிழ்ச்சிக்கொள்ள வைத்துள்ளது. இந்த திட்டத்தை எதிர்த்து போராடிய திமுக, இடதுசாரிகள், மதிமுக, விவசாய சங்கங்கள், 8 வழிச்சாலை எதிர்ப்பு கூட்டியக்கம் போன்றவை இணைந்து திருவண்ணாமலையில் பட்டாசு வெடித்து கொண்டாடியது.


இந்த தீர்ப்பு பற்றி நிலத்தை பறிக்கொடுக்க இருந்த விவசாயிகள் என்ன நினைக்கிறார்கள் என அறிய சில விவசாயிகளிடம் பேசினோம்.


பெலாசூர் ஏழுமலை, “என்னோட 3.5 ஏக்கர் விவசாய நிலத்தின் குறுக்கே செல்லும் வகையில் 8 வழிச்சாலைக்காக கல் நட்டார்கள். இதனால் என்னுடைய மொத்த நிலமும் பறிபோனது. என் குடும்பத்துக்கு விவசாயத்தை தவிர வேறு எதுவும் தெரியாது. என் நிலத்தை அரசாங்கம் எடுக்காமல் இருக்க யாரெல்லாம் போராட்டம் நடத்தினார்களோ அங்கு எல்லாம் சென்று கலந்துகொண்டேன். இப்போது தீர்ப்பு வந்துள்ளது. பெரிய சந்தோஷமாக இருக்கிறது. இந்த சந்தோஷம் நீடிக்க வேண்டும், ஆட்சியில் உள்ள அரசாங்கம் தேர்தலுக்கு பின் இதில் விளையாடக்கூடாது” என்றார்.

 

chennai salem 8 way road


பெரியகிளம்பாடி பச்சையப்பன்,  “நாங்க அண்ணன் தம்பிங்க 4 பேரு. எங்களோட 6 ஏக்கர் நிலத்தில் 4.5 ஏக்கர் அரசாங்கம் எடுத்துக்கிறதா கல்லு நட்டது. வாழ்வாதாராம்மே சுத்தமா போயிடுச்சி. இந்த வயசுலப்போய் நாங்க என்ன வேலை செய்யறதுன்னு தெரியாம முழிச்சோம். போராடனோம், எங்க போராட்டத்துக்கு கிடைத்த வெற்றிதான் இந்த தீர்ப்புன்னு நினைக்கிறேன். எங்களுக்காக போராடிய அனைவருக்கும் நன்றி” என்றார்.

பாதிக்கப்படும் நிலையில் இருந்த விவசாயிகள் நீதிமன்ற உத்தரவால் பெரும் மகிழ்ச்சியில் உள்ளார்கள் என்பது அவர்களிடம் பேசும்போது தெரிந்தது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"நெஞ்சில் பால் வார்த்த ஸ்டாலின்!" - '8' வழிச்சாலை விவசாயிகள் நெகிழ்ச்சி!!

Published on 19/03/2021 | Edited on 19/03/2021

 

salem chennai 8 way road


சேலம் டூ சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை என்றைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கையில் எடுத்தாரோ, அப்போது முதலே அவருக்கு ஏழரை ஆரம்பித்து விட்டது என்கிறார்கள், இத்திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள். நாடாளுமன்றத் தேர்தலைப் போல, சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுகவுக்கு மரண அடி கொடுப்போம் என சூளுரைத்திருக்கிறார்கள் சேலம் விவசாயிகள்.

 

சேலம் - சென்னை 8 வழிச்சாலைத் திட்டத்தை 10 ஆயிரம் கோடி ரூபாயில் கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டுள்ளன. இதற்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் வரை 277.3 கி.மீ. தூரத்துக்கு பசுமைவழி விரைவுச்சாலை அமைக்க, 2343 ஹெக்டேர் நிலத்தை சிறு, குறு விவசாயிகளிடம் இருந்து தடாலடியாகப் பறித்துக் கொண்டது எடப்பாடி பழனிசாமியின் அரசு.

 

நிலம் கொடுக்க மறுத்த விவசாயிகள், கோரிக்கை மனு அளித்தவர்கள், திட்டத்துக்கு எதிராகப் பேசியவர்கள் என அனைவர் மீதும் கன்னாபின்னாவென்று வழக்குப் போட்டு அச்சுறுத்தினர். இந்த திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ''விவசாயிகளிடம் இருந்து நிலத்தைக் கையகப்படுத்திய முறை தவறு. நிலத்தை உடனடியாக உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இதற்காக போடப்பட்ட அரசாணையைத் திரும்பப் பெற வேண்டும்,'' என்று 2019 ஏப்ரல் 8ம் தேதி உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

 

இதை எதிர்த்து மத்திய, மாநில அரசுகள், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. உச்சநீதிமன்றமோ, ''8 வழிச்சாலைத் திட்டத்திற்குத் தடை இல்லை. அதேநேரம், புதிய அரசாணை வெளியிட வேண்டும். மேலும், சுற்றுச்சூழல் ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டும்'' என்று தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பு, விவசாயிகள் தலையில் பேரிடியாக இறங்கியது. இதையடுத்து, கடந்த பிப்ரவரி மாதம் பட்ஜெட் தாக்கலின்போது, விரைவில் சேலம் டூ சென்னை 8 வழிச்சாலைத் திட்டத்துக்கான அரசாணை வெளியிடப்படும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

 

இத்திட்டம் அமைய உள்ள சேலம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில், பத்தாயிரம் விவசாயிகள், தேர்தல் நேரத்தில் இத்திட்டத்தை நிறுத்தி வைப்பது தொடர்பாக ஏதேனும் அறிவிப்பு வருமா என எதிர்பார்த்து இருந்தனர். அதிமுக, திமுக தேர்தல் அறிக்கைகளில் இது பற்றி எதுவும் குறிப்பிடாதது விவசாயிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

 

இந்நிலையில், திமுக தேர்தல் அறிக்கையில் சில திருத்தங்களைச் செய்து, மார்ச் 14ம் தேதி வெளியிட்டது. அதில், 'திமுக ஆட்சி அமைந்தால், 8 வழிச்சாலைத் திட்டம் ரத்து செய்யப்படும்' என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதைக்கேட்டு, இத்திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் உற்சாகம் அடைந்தனர். சேலம் மாவட்டத்தில் உத்தமசோழபுரம், பாரப்பட்டி, வீரபாண்டி, பூலாவரி, நிலவாரப்பட்டி, கூமாங்காடு உள்ளிட்ட பத்து பஞ்சாயத்துகளைச் சேர்ந்த விவசாயிகள் திரண்டு வந்து, ஒருவருக்கொருவர் இனிப்புகளை ஊட்டி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். 

 

இது தொடர்பாக 8 வழிச்சாலைத் திட்ட எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் மோகனசுந்தரம், சிவகாமி ஆகியோர் நம்மிடம் பேசினர்.

 

salem chennai 8 way road
                                                                      மோகனசுந்தரம்

 

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, எட்டுவழிச்சாலை திட்டம் ரத்து செய்யப்படும் என மு.க.ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி கொடுத்துள்ளார். இந்த அழிவுத்திட்டம் வேண்டாம் என்று கடந்த 3 வருஷமாகக் கதறி, அழுது புரண்டு கோரிக்கை வைத்தோம். முதல்வர் எடப்பாடி பழனிசாமி எங்களை ஒருமுறை கூட நேரில் சந்தித்துப் பேசவில்லை.

 

அவரை சந்திக்கப்போன எங்களை மறித்து காவல்துறையினர் வழக்கு போட்டனர். சர்வாதிகார ஆட்சியில்தான் இப்படி எல்லாம் நடக்கும். இதுவரை கடும் மன உளைச்சலில் இருந்தோம். திமுக அளித்த வாக்குறுதிக்குப் பிறகுதான், நிம்மதியாக இரவு தூங்கச் போகிறோம். விவசாயிகளின் நெஞ்சில் பால் வார்த்து விட்டார் ஸ்டாலின். இத்திட்டத்தை ரத்து செய்வதன் மூலம் விவசாயிகளை மட்டுமின்றி உணவு உற்பத்தி, கனிம வளம் கொள்ளை, சுற்றுச்சூழல் ஆகியவற்றையும் ஸ்டாலின் காப்பாற்றி விடுவார்.  

 

salem chennai 8 way road
                                                                      சிவகாமி

 

'விவசாயி மகன்' என்று மூச்சுக்கு முந்நூறு முறை சொன்னாலும், விவசாயிகளுக்கு எதிராகச் செயல்படும் எடப்பாடி பழனிசாமி விவசாயியாக முடியாது. விவசாயிகளின் துயரங்களை உணர்ந்த ஸ்டாலின்தான் உண்மையான விவசாயி. கடந்த பாராளுமன்றத் தேர்தலை போல, வரும் சட்டமன்றத் தேர்தலிலும் விவசாயிகள் திமுக கூட்டணிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்வோம். அதிமுகவை தோற்கடிப்போம், என்றனர்.

 

இது ஒருபுறம் இருக்க, மார்ச் 13ம் தேதி வெளியிட்ட திமுக தேர்தல் அறிக்கையிலேயே 8 வழிச்சாலை பற்றி குறிப்பிடாததும் ஒரு தரப்பு விவசாயிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்க மற்றொரு ஒருங்கிணைப்பாளரான குள்ளம்பட்டி பன்னீர்செல்வம் கூறுகையில், ''திமுக தேர்தல் அறிக்கையை 7 பேர் கொண்ட குழு, கடந்த சில மாதங்களாக ஆலோசித்து எழுதி இருக்கிறது. அப்படி இருந்தும், 8 வழிச்சாலைத் திட்டத்தை முதல்முறை வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலேயே சொல்லாதது எங்களில் பலருக்கு கடும் ஏமாற்றம் அளித்தது. 

 

paner
                                                                            பன்னீர்செல்வம்

 

இங்குள்ள திமுக பிரமுகர்களிடம் விவசாயிகள் அழுத்தம் கொடுத்த பிறகுதான், மார்ச் 14ம் தேதி சில திருத்தங்களை செய்து, 8 வழிச்சாலை திட்டம் ரத்து செய்யப்படும் என ஸ்டாலின் அறிவித்தார். இந்த திட்டத்தை திமுக முழு மனதோடு எதிர்க்கிறதா என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது'' என்றார். உலகுக்கே படியளக்கும் விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் எந்த ஓர் அரசும் நீடித்ததாக வரலாறு இல்லை. எடப்பாடி பழனிசாமியும் இதை உணராதவர் அல்லர்.

 

 

 

Next Story

அதிருப்தி அளித்த 8 வழிச்சாலை தீர்ப்பு! விவசாயிகள் கொந்தளிப்பு!

Published on 09/12/2020 | Edited on 09/12/2020

 

Chennai salem expressway supreme court order and farmers reaction

 

சேலம் - சென்னை எட்டு வழிச்சாலைத் திட்ட வழக்கில், ''ஈயம் பூசின மாதிரியும் இருக்கணும்; பூசாத மாதிரியும் இருக்கணும்'' என்ற கணக்காக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பால், டெல்லியைத் தொடர்ந்து தமிழக்திலும் விவசாயிகள் போராட்டம் வெடிக்கும் அபாயம் உருவாகியுள்ளது. 

 

மத்திய பாஜக அரசின் பாரத்மாலா திட்டத்தின் கீழ், சேலம் - சென்னை இடையே எட்டு வழிச்சாலைத் திட்டம் கொண்டு வரப்பட்டது. இதன் பட்ஜெட், 10 ஆயிரம் கோடி ரூபாய். இத்திட்டம், சேலத்தில் தொடங்கி தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் வழியாகச் சென்னையில் முடிகிறது. இந்த சாலையின் மொத்த நீளம்  277.3 கி.மீ. எடப்பாடி பழனிசாமி அரசு, இத்திட்டத்துக்காக 2,343 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தும் பணிகளில் தீவிரம் காட்டியது. 

 

இந்த சாலைக்காகக் கையகப்படுத்தப்படும் நிலங்களில் 80 சதவீதம் சிறு, குறு விவசாயிகளுக்குச் சொந்தமான விளைநிலங்கள். எட்டுவழிச்சாலை வந்தால், சேலம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் 3 லட்சம் மரங்கள் அழிக்கப்படும். 10 ஆயிரம் குடும்பங்கள் வீடுகளை இழக்க நேரிடும். சேலம் கஞ்சமலை, திருவண்ணாமலையில் உள்ள கவுந்தி மலை, வேடியப்பன் மலைகளில் உள்ள கனிம வளங்கள் சுரண்டப்படும் அபாயம் உள்ளது. இதனால், விவசாயிகளும், பொதுமக்களும் தொடக்கத்தில் இருந்தே இத்திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். 

 

வெட்டப்படும் தென்னை மரத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் வரை இழப்பீடு வழங்கப்படும் என ஆசை வலை விரித்தும் விவசாயிகள் கொஞ்சமும் இறங்கி வரவில்லை. ஏற்கனவே, அதிமுக அரசு, சேலம் - உளுந்தூர்பேட்டை சாலைக்காக நிலம் வழங்கிய மக்களுக்கு பத்து ஆண்டுகளுக்கு மேலாகியும் முழுமையான இழப்பீடு தராமல் வஞ்சித்து இருந்தது. இதையெல்லாம் யோசித்த விவசாயிகள், கடந்த 2018ம் ஆண்டு முதல் இத்திட்டத்திற்கு எதிராகத் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

 

இந்த எதிர்ப்புகளுக்கு இடையே, விளைநிலங்களுக்குள் பூட்ஸ் கால்களுடன் போலீசாரை இறக்கி, நிலத்தை அளந்து, முட்டுக்கல் நட்டனர் வருவாய்த்துறையினர். திட்டத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர் விவசாயிகள். கடந்த 2019 ஏப்ரல் 8ம் தேதி, ''8 வழிச்சாலைக்காக நிலத்தைக் கையகப்படுத்திய நடைமுறை தவறு என்றும், கையகப்படுத்திய நிலத்தை உடனடியாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பு அளித்தது. மேலும், இதற்கான அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தது.

 

இதையடுத்து தேசிய நெடுஞ்சாலைத்துறை, உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இருதரப்பு விசாரணைகளும் முடிந்த நிலையில், 2020 டிச. 8ம் தேதி இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

 

''எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்குத் தடை இல்லை. ஆனால், முந்தைய அறிவிக்கை அடிப்படையில் நிலம் கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடை செல்லும். மீண்டும் புதிய அறிவிக்கையை வெளியிட்டு இத்திட்டத்தைத் தொடரலாம். ஏற்கனவே கையகப்படுத்திய நிலங்களை உரியவர்களிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும். சுற்றுச்சூழல் துறையிடம் முன்னனுமதி பெறாமல் நிலத்தைக் கையகப்படுத்தியது தவறு. 

 

இத்திட்டத்தைச் செயல்படுத்த உரிய வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்கிறோம். அதேநேரம், மத்திய அரசுக்கும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திற்கும் எட்டுவழிச்சாலை போடும் அதிகாரம் இருக்கிறது,'' என்று தீர்ப்புரையில் கூறியிருந்தது.

 

தீர்ப்பின் முழு விவரம் வருவதற்கு முன்பே, எட்டுவழிச்சாலைத் திட்டத்திற்குத் தடை என்று டிவி சேனல்களில் செய்திகள் வெளியானதால், சேலத்தில் விவசாயிகள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். நேரம் போகப்போகத் திட்டத்தை, புதிய வழிகாட்டுதல் படி செயல்படுத்தலாம் என்ற தகவல் பரவியதால் விவசாயிகள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

 

சேலம் ராமலிங்கபுரத்தில் ஒன்றுகூடிய 100க்கும் மேற்பட்ட விவசாயிகள், உச்சநீதிமன்ற தீர்ப்பு அதிருப்தி அளிக்கிறது என்றும், எட்டுவழிச்சாலைத் திட்டத்தை ரத்து செய்வதாக மத்திய, மாநில அரசுகள் உடனடியாக அறிவிக்க வேண்டும் என்றும் முழக்கமிட்டனர். இதற்கிடையே, கியூ பிரிவு, காவல்துறை தனிப்பிரிவு, எஸ்பிசிஐடி உள்ளிட்ட அனைத்து உளவுப்பிரிவு காவல்துறையினரும் வாகனங்களுடன் வந்திறங்கவும், அங்கு மேலும் டென்ஷன் எகிறியது. 

 

எட்டுவழிச்சாலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் குப்பனூர் நாராயணன், சிவகாமி, கவிதா, மோகனசுந்தரம், குப்புசாமி ஆகியோர் பேசினர்.

 

Chennai salem expressway supreme court order and farmers reaction
                                                    குப்பனூர் நாராயணன்

 

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, மக்கள் நலன் சார்ந்ததாக இல்லை. மத்திய, மாநில அரசுகளுக்குச் சாதகமாக இந்த தீர்ப்பு அமைந்துள்ளது. சூழலியல் தாக்க மதிப்பீடு அறிவிக்கை - 2020 (இஐஏ - 2020), ஒரு திட்டம் தொடங்குவதற்கு முன்பாக சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி பெறத்தேவை இல்லை என்று கூறுகிறது. இந்த அறிவிக்கை, இன்னும் சட்டமாகவில்லை. இப்போது வந்துள்ள தீர்ப்பானது, மத்திய அரசுக்கு இஐஏ - 2020 அறிவிக்கையைச் சட்டமாக்கிவிட்டு, அதன்பிறகு புதிய அறிவிக்கை வெளியிட்டு எட்டுவழிச்சாலை போடுங்கள் என மறைமுகமாகச் சொல்வது போல் இருக்கிறது.

 

Chennai salem expressway supreme court order and farmers reaction
                                                                குப்புசாமி

 

உண்மையிலேயே மக்கள் நலன் சார்ந்துதான் சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை அமைகிறது எனில் நாங்களே முன்வந்து எங்கள் நிலத்தைத் தர தயாராக இருக்கிறோம். ஆனால், ஆட்சியாளர்கள் கொள்ளை அடிக்கவும், கஞ்சமலையில் இருக்கும் இரும்பு உள்ளிட்ட கனிம வளங்களைத் தனியார் கார்ப்பரேட்டுகளிடம் தாரை வார்க்கவும்தான் இந்த திட்டத்தைக் கொண்டு வர துடிக்கிறார்கள. இந்த திட்டத்துக்காக எங்கள் நிலத்தை ஒரு அடிகூட விட்டுத்தர மாட்டோம். 

 

Chennai salem expressway supreme court order and farmers reaction
                                                        மோகனசுந்தரம்

 

கடந்த இரண்டு ஆண்டு காலமாக எங்கள் மீது எடப்பாடி பழனிசாமியின் போலீசார் எத்தனையோ பொய் வழக்குகளைப் போட்டு, கைது செய்துள்ளனர். போலீசார், வருவாய்த்துறையினர் டார்ச்சரால் மன உளைச்சல் ஏற்பட்டு பல விவசாயிகள் மாரடைப்பில் உயிரிழந்துள்ளனர். இறந்து போன விவசாயிகளின் குடும்பத்தினருக்கு என்ன  இழப்பீடு கொடுத்தாலும் ஈடுகட்ட முடியுமா?

 

சேலத்திலிருந்து சென்னை செல்ல ஏற்கனவே மூன்று வழித்தடங்கள் இருக்கின்றன. அந்த வழியாக எட்டுவழிச்சாலை போடலாமே? மலையைக் குடைந்து, இயற்கையை அழித்து எட்டுவழி என்ற பெயரில் பசுமைவழி விரைவுச்சாலை தேவை இல்லை. இத்திட்டத்தை உடனடியாக கைவிட வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் விரைவில் டெல்லியில் விவசாயிகள் நடத்துவதைப் போல சேலம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களிலும் தொடர் போராட்டத்தைத் தொடங்க இருக்கிறோம். எங்கள் மண்ணுக்காக நாங்கள் தற்கொலை போராட்டத்தில் இறங்கவும் தயாராக இருக்கிறோம்,'' என்றனர்.

 

தீர்ப்பின் உள்ளடக்கம் குறித்து பாமகவைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலுவிடம் கேட்டோம்.

 

Chennai salem expressway supreme court order and farmers reaction
                                                   வழக்கறிஞர் பாலு          

 

''அறிவிக்கப்பட்ட ஒரு திட்டத்தைச் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது தவறு என்கிறது உச்சநீதிமன்றம். நெடுஞ்சாலைத்துறைக்குச் சாலைகள் அமைக்க அதிகாரம் இருக்கிறது. அதேவேளையில், விவசாயிகள் பெயரில் இருக்கும் நிலத்தை அரசுக்கு வகை மாற்றம் செய்ததையும், அதில் விதிகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை என்றும் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை இப்போது உச்சநீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது. 

 

சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அனுமதி பெற்ற பிறகுதான் ஒரு திட்டத்தைத் தொடங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பில் சொல்லி இருக்கிறது. அதை அடிப்படையாகக் கொண்டுதான் சென்னை உயர்நீதிமன்றம் அப்போது எட்டுவழிச்சாலை வழக்கில் தீர்ப்பு அளித்தது. ஆனால் இன்றைக்கு உச்சநீதிமன்றம், திட்டம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்ட பிறகும், இடைப்பட்ட காலத்தில் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியை மத்திய அரசு பெற வேண்டும். அந்த அனுமதி சரியாக வழங்கப்பட்டு உள்ளதா என்பதை இப்போது நாங்கள் ஆய்வு செய்யவில்லை என்று உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

 

ஒருவேளை, எதிர்காலத்தில் சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி கொடுத்தாலும், நிலத்தை வகை மாற்றம் செய்ய உரிய விதிகள் பின்பற்றப்படாமல் போனாலும் கூட அதை எதிர்த்து நாம் வழக்கு தொடரலாம். உயர்நீதிமன்ற தீர்ப்பை முழுமையாக ஏற்றுக் கொள்ளாதது விவசாயிகளுக்குப் பெருத்த ஏமாற்றம் அளிக்கிறது. இந்த திட்டமே தேவை இல்லை என்பதுதான் பாமகவின் நிலைப்பாடு. 

 

சேலத்திலிருந்து சென்னை செல்ல ஏற்கனவே மூன்று வழித்தடங்கள் இருக்கும்போது புதிய வழித்தடத்தில் எட்டுவழிச்சாலைத் திட்டம் தேவையில்லை. இதற்கான திட்ட அறிக்கை முறையாகத் தயாரிக்கப்படவில்லை. விளை நிலங்களைக் கையகப்படுத்தும் இப்படியொரு திட்டம் தேவையில்லாதது. மதுரை - சென்னை இடையே எட்டு வழிச்சாலை அமைக்கும் திட்டம்தான் ஆரம்பத்திலிருந்தது. அதை மாற்றித்தான் சேலம் - சென்னை எட்டுவழிச்சாலையாக மாற்றி இருக்கிறார்கள். தொடர்ந்து போராடுவோம். 

 

உயர்நீதிமன்ற தீர்ப்பைப் பகுதியாக நீக்கம் செய்து, ஒரு பகுதியை உறுதி செய்திருக்கிறது, உச்சநீதிமன்றம். இந்தியா முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் சூழலில், இப்படியொரு தீர்ப்பை அறிவித்து இருப்பது வினோதமாக இருக்கிறது. இப்போது ஒரு திட்டம் நிறைவேறுவதற்கு எத்தகைய சமரசங்களையும் செய்து கொள்ளலாம் என்ற அளவிற்குச் சட்டங்களின் அழுத்தம் நீர்த்துப் போய்க்கொண்டு இருப்பது கவலை அளிக்கிறது,'' என்கிறார் வழக்கறிஞர் பாலு.

 

விவசாயிகளை மீண்டும் போராட்டக்களத்திற்கு அழைத்திருக்கிறது உச்சநீதிமன்ற தீர்ப்பு.