நேற்று நிலவரப்படி சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 79,662 ஆக அதிகரித்துள்ள நிலையில் 62,552 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
பொதுமக்கள் மட்டுமின்றி கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுவரும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவலர்களுக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவ்வாறு பொதுப்பணியின் போது தொற்று ஏற்பட்டு மீண்டு பணிக்குத் திரும்புவோருக்கு அந்தந்த துறை சார்பில் வரவேற்பு அளித்து உற்சாகப்படுத்துகின்றனர்.
நேற்று முந்தினம் சென்னை, வேப்பேரி காவல் ஆணையரகத்தில் கரோனா சிகிச்சை முடிந்து பணிக்குத் திரும்பிய 72 காவலர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில், சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் கலந்துகொண்டு பணிக்குத் திரும்பிய காவலர்களுக்கு சான்றிதழ் வழங்கி வாழ்த்தினார்.