Advertisment

என்கவுண்டர் செய்யப்பட்ட கொள்ளையன்; மாஜிஸ்திரேட் நேரில் விசாரணை!

 chennai police incident investigation by the magistrate

Advertisment

சென்னையில் உள்ள சைதாப்பேட்டை, அடையாறு, கிண்டி உள்ளிட்ட 8 பகுதிகளில் பத்து சவரனுக்கு மேற்பட்ட நகைகள் நேற்று (25.03.2025) ஒரே மணி நேரத்தில் தொடர்ச்சியாக பொதுமக்களிடமிருந்து வழிப்பறி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக அடையாறு காவல் எல்லைக்கு உட்பட்ட ஆறு இடங்களில் செயின் பறிப்புகள் நடைபெற்றது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியது. இதேபோல் சென்னையில் பல இடங்களில் எட்டுக்கும் மேற்பட்ட வழிப்பறி சம்பவங்கள் ஒரே நாளில் நடந்தது என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்காக தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் வழிப்பறியில் ஈடுபட்டது வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும், திருடிய நகைகளை எடுத்துக்கொண்டு இருவரும் சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானத்தில் ஏறி தப்பிக்க முயன்றதும் தெரிந்தது. உடனடியாக அங்கு சென்ற போலீசார் ஹைதராபாத் செல்லும் விமானத்திலேயே வைத்து கைது செய்தனர். விசாரணையில் இருவரும் உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த சூரஜ் மற்றும் ஜாபர் குலாம் ஹுசைன் என்பது தெரியவந்தது. இவர்கள் கடந்த பொங்கலன்று தாம்பரம் பகுதியில் இதேபோல் 10க்கும் மேற்பட்ட இடங்களில் வழிப்பறியில் ஈடுபட்டனர். அதன் பின்னர் விமானத்தில் தப்பிச் சென்றனர் என்பதும், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் ஜாபர் மீது 50க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பது தெரியவந்தது.

இத்தகைய சூழலில் தான் கைது செய்யப்பட்ட ஜாபர் குலாம் ஹுசைனை நேற்று நள்ளிரவு தரமணி பகுதியில் வைத்து திருவான்மியூர் போலீசார் என்கவுண்டர் செய்தனர். ஒரு மணி நேரத்தில் தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட அந்த நகைகளை தரமணி பகுதியில் பதுக்கி வைத்திருந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், பதுக்கி வைத்திருந்த நகைகளை மீட்பதற்காக கைது செய்யப்பட்ட ஜாபரை போலீசார் தரமணிக்கு அழைத்துச் சென்றனர். அப்போது, அங்கு மறைத்து வைத்திருந்த கள்ளத்துப்பாக்கியை எடுத்து ஜாபர் போலீசாரை சுட்டு தப்பிக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது திருவான்மியூர் காவல் ஆய்வாளர் முகமது புகாரி தற்காப்பிற்காக ஜாபரை நோக்கி சுட்டுள்ளார். இதில், ஜாபர் குலாம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Advertisment

இந்நிலையில் என்கவுண்டர் நடைபெற்ற இடத்தில் சென்னை சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் பார்த்திபன் இன்று (26.03.2025) மாலை நேரில் சென்று விசாரணை நடத்தினார். அப்போது இந்த என்கவுண்டர் எப்படி நடந்தது?. என்கவுண்டர் நடந்தபோது யார்? யார்? உடன் இருந்தனர் எனப் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டார். அதே சமயம் காவல் ஆய்வாளர் முகமது புகாரியிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் போது அடையாறு உதவி காவல் ஆணையர் முருகேசன உடன் இருந்தார்.

encounter Investigation Judge Chennai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe