Chennai Peter Colony flats! -Housing Board ordered to file report!

Advertisment

சென்னை பீட்டர்ஸ் காலனியில் உள்ள 342 குடியிருப்புகளில், அரசு அலுவலர்கள், நீதிமன்ற ஊழியர்கள் முன்களப் பணியாளர்கள் உள்ளிட்டோர் குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில், குடியிருப்பை இடித்து விட்டு வணிக வளாகம் கட்டுவதற்காக, பீட்டர்ஸ் காலனியில் குடியிருப்போரை, குடியிருக்கத் தகுதியில்லாத லாயிட்ஸ் காலனி குடியிருப்புக்கு மாற்ற கட்டாயப்படுத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இதற்காக, வீட்டு வசதி வாரியத்தின் செயற்பொறியாளர் காந்தி பீட்டர், காலனியில் தங்கியிருப்போரை, காலி செய்ய தொடர்ந்து மிரட்டுவதோடு, மின் இணைப்பையும், குடிநீர் இணைப்பையும் துண்டித்து, மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாக, பீட்டர்ஸ் காலனி குடியிருப்போர் நலச்சங்கத்தின் செயலாளர் முத்துச்செல்வன், மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு அளித்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த மனித உரிமை ஆணையம், வீட்டு வசதி வாரியம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.இந்நிலையில், இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், வீட்டு வசதி வாரியத்தின் செயற்பொறியாளர் காந்தி, குடியிருப்பவர்கள் உடனடியாக வெளியேறுமாறு தொடர்ந்து மிரட்டி வருகிறார் என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கூடுதல் மனு ஒன்றை மனித உரிமை ஆணையத்திற்கு அனுப்பியிருந்தார்.

Advertisment

இதைப் பதிவு செய்த மனித உரிமை ஆணைய பொறுப்பு தலைவர் துரை ஜெயச்சந்திரன், செயற்பொறியாளர் காந்தியின் மனித உரிமை மீறல் செயல் குறித்தும், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும், வீட்டு வசதி வாரியம் 3 வாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.