Skip to main content

மாப்பிள்ளை தாடி வைத்திருக்கிறார்... கொள்கைக்காக என்றால் சந்தோசப்படுவேன்... மு.க.ஸ்டாலின் பேச்சு

Published on 13/09/2019 | Edited on 13/09/2019

 

சென்னை பெரம்பூர் வாத்தியார் என்று அழைக்கப்படும் இரா.அ.சிதம்பரம் சகோதரர் கலைவாணன் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மணமக்களை வாழ்த்தி பேசினார்.
 

அப்போது, இதுபோன்ற சீர்திருத்தத் திருமணங்கள் நடைபெறும் திருமண விழாக்களில் தவறாமல் ஒரு கருத்தை எடுத்துச் சொல்வதை வழக்கமாகவும், வாடிக்கையாகவும் வைத்திருக்கிறேன்.
 

நினைவில் வாழும் பெரம்பூர் வாத்தியார் சிதம்பரம் அவர்களைப் பற்றி எல்லோரும் பெருமையோடு எடுத்துச் சொன்னார்கள். அவர் மட்டுமல்ல, அவருடைய வாரிசுகளும் குடும்பத்தினரும் கூட இன்றைக்கும் இந்த இயக்கத்திற்காக பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் குடும்பப் பாசம்! இப்படிப்பட்டவர்கள்தான் திராவிட முன்னேற்றக் கழக வாரிசுகள்!! இதைத்தான் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

 

dmk


 

நம்முடைய சிதம்பரம், எந்தளவிற்கு போராட்ட உணர்வோடு இருந்தார் என்பதைப் பற்றி நம்முடைய டி.கே.எஸ் அவர் சொன்னார்; இரங்கநாதன் அவர்கள் சொன்னார்; சேகர் பாபு அவர்கள் சொன்னார்; இங்கு பேசிய அனைவரும் சொன்னார்கள். அதில், அவர் ஒரு குறிப்பிட்டக் காலம் வரை அவர் தாடி வைத்திருந்தார் என்றார்கள். காரணம், ஒரு கொள்கை - நினைத்ததை முடிக்க வேண்டும். கழகத்திற்கு சோதனை வந்தபோது, தனக்கு ஒரு வேதனை ஏற்பட்ட நேரத்தில் ஒரு வைராக்கியமாக அவர் தாடி வைத்திருந்தார். ஆனால், அது கொள்கைக்காக!
 

இப்போது மாப்பிள்ளை தாடி வைத்திருக்கிறார் நானும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இது கொள்கைக்காக என்றால் நானும் சந்தோசப்படுவேன். ஆனால், இப்போது எல்லோரும் எதற்காக தாடி வைக்கின்றார்கள் என்றால் அழகிற்காக! கொஞ்சம் முகம் ஒட்டியிருந்தால் முகம் சற்று பெரிதாக தெரிவதற்காக வைத்திருக்கிறார்கள். அது ஒரு பேஷனாக வைக்கும் சூழ்நிலைகூட வந்துவிட்டது.
 

வாத்தியார் சிதம்பரம் அவர்கள் ஒரு கொள்கைக்காக வைத்திருந்தார் என்பதைப் பற்றி எல்லோரும் எடுத்துச் சொன்னார்கள். எனவே, அப்படிப்பட்ட ஒரு கொள்கைக் குடும்பத்தில், ஒரு இலட்சியவாதியாக இருந்த அவரது குடும்பத்தில் நடைபெறும் மணவிழா என்பது உள்ளபடியே பாராட்டுக்குறிய வகையில் அமைந்திருக்கிறது.
 

அதேபோல், நம்முடைய பாரதி அவர்கள் பேசுகின்ற போது பெயர் மாற்றங்கள் பற்றியெல்லாம் எடுத்துச் சொன்னார்கள். அவருக்கு இருந்த பெயர், தலைவர் கலைஞர் அவர்களுக்கு இருந்த பெயர். அதேபோல் சிதம்பரம் அவர்களுக்கு இருந்த பெயர், இந்த மணவிழாவை நடத்திக்கொண்டிருக்கும் கலைவாணன் அவர்களுக்கு இருந்த பெயர். இவையெல்லாம் எப்படி மாற்றப்பட்டது என்பது பற்றிய வரலாறு எல்லாம் எடுத்துச் சொன்னார். என் பெயரையும் எடுத்துச் சொன்னார். அதைத்தான் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
 

எனவே, மணமக்களை அன்போடு நான் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். மணமகனின் பெயர் முத்துவேல் என்கின்ற தமிழ்ப் பெயர் தான். ஆனால், மணமளின் பெயர் ‘ஆசிகா இது’ தமிழ் பெயரா என்பது கேள்விக்குறிதான்!?
 

நான் விமர்சனம் செய்ய விரும்பவில்லை. ஆனால், அதே நேரத்தில் நான் கேட்டுக்கொள்ள விரும்புவது, இன்றைக்கு தமிழ்மொழிக்கும் நம்முடைய இனத்திற்கும் சோதனை வரக்கூடிய ஒரு சூழ்நிலையை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.


 

எனவே, இப்படிப்பட்ட இக்கட்டான காலகட்டத்திலாவது நம்முடைய குடும்ப வாரிசுகளுக்கு, நமக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு அழகிய தமிழ்ப் பெயர்களை சூட்ட வேண்டும்.
 

இவ்வளவு சொல்கிறாயே நீ, ஸ்டாலின் என்ற பெயர் என்ன தமிழ்ப் பெயரா? ஸ்டாலின் என்பது தமிழ் பெயர் இல்லையே என்று சிலர் கேட்கலாம்.
 

என் பெயர்க்காரணம் குறித்துதான் பாரதி அவர்கள் விளக்கிச் சொன்னார். சோவியத் ரஷ்ய நாட்டின் அதிபராக விளங்கிய -  கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மாபெரும் தலைவர்களில் ஒருவரான ஸ்டாலின் அவர்கள் மறைந்த நேரத்தில் நான் பிறந்த காரணத்தால், நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் அந்தப் பெயரை எனக்கு வைத்தார்கள்.
 

காரணம், தலைவர் கலைஞர் அவர்களுக்கு கம்யூனிசக் கொள்கையின்மீது அளவுகடந்த பற்று உண்டு - பாசம் உண்டு. எனவே, அந்த உணர்வோடு ஸ்டாலின் என்ற பெயரை எனக்கு சூட்டினார்.

அதுமட்டுமல்ல, தலைவர் கலைஞர் அவர்கள் குடும்பப் பெயர்களைப் பார்த்தாலே உங்களுக்குத் தெரியும். முரசொலி மாறன், செல்வம், அமிர்தம் இதெல்லாம் தலைவர் கலைஞர் குடும்ப உறவினர் பெயர்கள்.
 

அவருடைய பிள்ளைகள், என்னுடைய மூத்த அண்ணனுக்கு, என்னுடைய தாத்தாவின் நினைவாக முத்துவேல் என்ற அவருடைய பெயரை சூட்டினார்கள்.
 

அதேபோல் தலைவர் கலைஞர் அவர்களின் ஆசானாக விளங்கியவர் பட்டுக்கோட்ட அழகிரிசாமி அவர்கள் என்று தலைவர் கலைஞர் அவர்கள் பலமுறை சொல்லியிருக்கிறார். மேடையில் இவ்வளவு வீராவேசாமாக பேசுகிறேன் என்றால், அதற்கு பட்டுக்கோட்டை அழகிரிசாமி தான் காரணம் என்று தலைவர் கலைஞர் அவர்களே நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்கள். எனவே, அவரின் நினைவாக அழகிரி என்ற பெயரை என்னுடைய இரண்டாவது அண்ணனுக்கு வைத்தார்கள்.
 

அதேபோல், என்னுடைய தம்பிக்கு தமிழரசு, தங்கைகளுக்கு தமிழ்செல்வி, கனிமொழி என்று, வீட்டில் இருக்கும் அத்தனைப் பேரப்பிள்ளைகளுக்கும் தமிழ் பெயர்கள்தான்.
 

ஆனால், என்னுடைய பெயர் காரணத்தை நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன். இந்த பெயர் வைத்த காரணத்தால் நான் பல இடர்களை அனுபவித்திருக்கிறேன். நான் சட்டமன்ற உறுப்பினராக 1989-ல் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, கமிட்டி மூலமாக சட்டமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவில் வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்போது, இரஷ்ய நாட்டிற்கு போயிருந்தபோது ஸ்டாலின் என்ற பெயரைக் கேட்டதும் முகத்தை முழித்து – முழித்து பார்ப்பார்கள்.


 

ஏர்போட்டில் கூட பாஸ்போர்ட்டை சோதனை செய்து என்னை உள்ளே அனுப்பும் நேரத்தில் அவ்வளவு கேள்விகள் கேட்டு சங்கடம் கொடுத்தார்கள். ஏனென்றால், ஸ்டாலின் என்ற பெயருக்கு அவ்வளவு பிரச்சினை அங்கு!
 

இன்னும் கூட சொல்லவேண்டுமென்றால், அண்ணா சாலையில் இருக்கும் சர்ச் பார்க் கான்வெண்ட் பற்றி உங்கள் எல்லோருக்கும் தெரியும். இப்போது பெண்கள் மட்டும்தான் படிக்க முடியும். ஆண்கள் படிக்கமுடியாது. ஆனால், முன்பு ஆண்களும், பெண்களும் சேர்ந்து படிக்கும் பள்ளியாக இருந்தது. அதுதான், தமிழ்நாட்டில் நம்பர் 1 கான்வென்ட் என்று சொல்வார்கள். அந்தப் பள்ளிக்கூடத்தில் எப்படியாவது என்னையும், என் தங்கை தமிழ்செல்வியையும் சேர்க்க வேண்டும் என்று நம்முடைய முரசொலி மாறன் அவர்கள் சென்றிருந்தார்கள். முரசொலி மாறன் அவர்கள் தான் எங்கள் எல்லோரையும் படிக்க வைப்பதற்கு ஒரு காப்பளராக [கார்டியனாக] இருந்தார்.
 

அப்போது அண்ணா சாலையில் முரசொலி அலுவலகம் எதிரில்தான் பள்ளிக்கூடம் இருந்தது. எனவே, அங்கே சேர்க்க வேண்டும் என்று முடிவு செய்து 'அட்மிசன்' எல்லாம் வாங்கி சேர்த்துவிட்டார்கள். அப்படி, சேர்ந்தப் பிறகு முதன்முதலில் நான் பள்ளிக்கூடத்திற்குபோகும் போது, அந்தப் பள்ளியின் தாளாளர் [கரெஸ்பாண்டன்ட்] முரசொலி மாறன் அவர்களிடத்தில், "இவர்கள் இரண்டு பேரையும் இப்போதே சேர்த்துக்கொள்கிறோம். ஆனால், ஸ்டாலின் என்ற பெயரை மட்டும் கொஞ்சம் மாற்றி விடுங்கள். ஏனென்றால், இரஷ்யாவில் அந்தப் பெயரால் மிகவும் பிரச்சினை போய்க்கொண்டிருக்கிறது. அங்கு அவரது சிலைகளையெல்லாம் உடைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது ஒரு கிறிஸ்துவ பள்ளிக்கூடமாக இருக்கிறது. எங்களுக்கு ஏதாவது பிரச்சினை வந்துவிடும். எனவே, இந்த பெயரை மட்டும் மாற்றிவிடுங்கள்", என்று சொல்லியிருக்கிறார்.

 

dmk


 

உடனே தலைவர் கலைஞரிடத்தில் முரசொலி மாறன் அவர்கள் இதை சொன்னபோது, “நான் ஸ்கூலை மாற்றினாலும் மாற்றுவேனே தவிர என் பையன் பெயரை மாற்ற மாட்டேன்” என்றார். இது வரலாறு!
 

எனவே, இப்படி பெயரை வைப்பதில்கூட திராவிட முன்னேற்றக் கழகம் எடுத்துக்காட்டாக இருந்திருக்கிறது.
 

இந்த திருமணமாகாதவர்களும் வந்திருப்பார்கள். விரைவில் திருமணம் முடிக்க இருப்பவர்களும், விரைவில் குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் சூழ்நிலையில் இருப்பவர்களும் வந்திருப்பீர்கள். எனவே, உங்களுக்கு பிறக்கும் குழந்தைகள் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் அழகான தமிழ்ப் பெயர்களை சூட்டுங்கள் - சூட்டுங்கள் என்று வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்.
 

அழகிய தமிழ்ப் பெயர் சூட்ட வேண்டும் என்று அடுத்த வருடமே குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அவசியமில்லை. அதில் அவசரம் காட்ட வேண்டும் என்று அவசியவில்லை. குழந்தை பெற்றுக்கொள்ளும் நேரத்தில் அதுபோன்று ஒரு நிலையை நீங்கள் ஏற்படுத்த வேண்டும் என்று நான் அன்பான வேண்டுகோளை எடுத்துவைக்க கடமைப்பட்டிருக்கிறேன். இவ்வாறு பேசினார். 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோவையில் ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா-திமுக புகார்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
DMK complains about BJP payment through GPay in Coimbatore

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை தொகுதியில் பாஜகவினர் ஜிபே மூலம் பண பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து திமுக புகார் எழுப்பியுள்ளது. பிரச்சாரம் முடிந்தவுடன் வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்றவில்லை என திமுக குற்றம் சாட்டியுள்ளது. கோவை அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தங்கி ஜிபே மூலம் பணம் பட்டுவாடா செய்து பாஜகவுக்கு வாக்களிக்கும்படி கோரி வருகின்றனர் எனவும், சென்னையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், கிருஷ்ணகுமார், கரூரை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் பணம் பட்டுவாடா செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தியுள்ளது.

Next Story

“மகத்தான வெற்றியை ஈட்டுவோம்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
We will achieve great success says CM MK Stalin 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது.

இந்நிலையில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் திமுக சார்பில் வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறவிருக்கும் இந்தியாவின் 18ஆவது நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளும் புதுச்சேரியின் ஒரு மக்களவைத் தொகுதியும் உள்ளடங்கிய 102 தொகுதிகளிலும் நடைபெறுகிறது. இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை அறிவித்த நாளிலிருந்து உடன்பிறப்புகளாம் நீங்கள் அனைவரும் களத்தில் இறங்கிப் பணியை மேற்கொண்டு, தோழமைக் கட்சியினருடன் ஒருங்கிணைந்து, மிகக் குறைந்த கால அவகாசத்திற்குள் வாக்காளர்களைச் சந்தித்து ஆதரவைப் பெற்று, வெற்றியை உறுதி செய்து, தேர்தல் பணியில் தி.மு.க.வினரை மிஞ்ச எவரும் கிடையாது என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறீர்கள்.

மார்ச் 22ஆம் தேதி திருச்சியில் எழுச்சிகரமாகத் தொடங்கிய உங்களில் ஒருவனான என்னுடைய பரப்புரைப் பயணம் ஏப்ரல் 17 அன்று தமிழ்நாட்டின் தலைநகருக்குள் அடங்கிய தென்சென்னை - மத்திய சென்னை தொகுதிகளில் மக்களின் உணர்ச்சிகரமான முழக்கங்களுடன் நிறைவடைந்திருக்கிறது. நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன். களத்தில் நமக்குக் கிடைத்துள்ள ஆதரவு, வாக்குகளாகப் பதிவாகி, வெற்றியாக வெளிப்படும் என்பதில் உறுதியுடன் இருக்கிறேன். அந்த நம்பிக்கையும் உறுதியும் நிறைவேற, வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19 அன்று கழகத்தினர் மிகுந்த கவனத்துடன் செயலாற்ற வேண்டும். அப்போதுதான், இத்தனை நாள் பாடுபட்டது பயன் தரும். 

We will achieve great success says CM MK Stalin 

தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்ய வேண்டிய கடமைக் கழகத் தொண்டர் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. மாவட்டக் கழகச் செயலாளர்கள் தொடங்கி கிளைக் கழக நிர்வாகிகள் வரை தங்களுக்கான பணிகளைத் திட்டமிட்டுக்கொண்டு செயலாற்றுவதுடன், வாக்குச்சாவடிப் பணிகளில் ஈடுபடக்கூடிய பாக முகவர்கள், வாக்குச்சாவடி முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள்தான் வாக்குப்பதிவு நாளின் முன்களப் பணியாளர்கள். முழுமையான போர் வீரர்கள். இதில் வாக்குச்சாவடி முகவர்கள், மாற்று முகவர்கள் ஆகியோர் வாக்குப்பதிவு தொடங்கி நிறைவடையும் வரை விழிப்புடன் செயலாற்ற வேண்டிய பணியில் இருப்பதால், அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை முழுமையாக அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.

அதற்கான பயிற்சியினை நமது கழகச் சட்டத்துறையின் உதவியுடன் ஏற்கனவே வழங்கியுள்ள நிலையில், வாக்குப்பதிவு நாளன்று மறக்காமல் மேற்கொள்ள வேண்டிய கடமைகளை நினைவூட்ட விரும்புகிறேன். காகித வாக்குச் சீட்டுக்குப் பதில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பொதுமக்கள் வாக்களிப்பதால், நாம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளும், கவனிக்க வேண்டிய நடைமுறைகளும் நிறைய உள்ளன. அவை நம் தி.மு.கழகத்தின் சட்டத்துறை சார்பில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் மூலமாக உங்களிடம் கையேடாக வழங்கப்பட்டிருக்கும். 

We will achieve great success says CM MK Stalin 

அவற்றைக் கவனத்தில் கொண்டு வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்படவேண்டும். பாக முகவர்கள் உள்ளிட்ட கழகத்தின் தேர்தல் பணிகளை மேற்கொள்வோர் இவை ஒவ்வொன்றையும் உறுதி செய்யவேண்டும். வாக்குப்பதிவில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் சரியாக அமைந்தால்தான் வாக்கு எண்ணிக்கையின்போது கழகக் கூட்டணியின் முழுமையான வெற்றி உறுதியாகும். விரைந்து களப்பணியாற்றி, வியர்வை சிந்தி விதைத்தவை அனைத்தும் அறுவடையாகும் நாள்தான் வாக்குப்பதிவு நாள். அதனால் மிகுந்த விழிப்புடன் பணியாற்றுங்கள். வாக்குரிமையை நிலைநாட்டுவோம். மகத்தான வெற்றியை ஈட்டுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.