Skip to main content

''இதுதான் சார் கோபம்...'' காதல் மனைவி தற்கொலை... உடலைக்கூட பார்க்காமல் கணவனும் தற்கொலை... 

Published on 03/08/2020 | Edited on 03/08/2020

 

chennai pallavaram

 

காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கணவருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது, உடலைக்கூட பார்க்க முடியாமல் இருந்த அவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

சென்னை பல்லாவரம், மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் 22 வயதான பிரவின்குமார். தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் ஈசா பல்லாவரத்தை சேர்ந்த 19 வயதான தீபிகா என்ற பெண்ணுடன் பழகியுள்ளார். பின்னர் இவர்களது நட்பு காதலாக மாறியது. இரண்டு வருடங்களாக காதலித்து வந்த இவர்கள், தங்களது வீட்டில் இதனை தெரிவித்துள்ளர். பெற்றோர்கள் இவர்களது திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. பெற்றோர்களின் எதிர்ப்புகளை மீறி கடந்த மே மாதம் திருமணம் செய்து கொண்டனர்.  

 

திருமணத்திற்கு பிறகு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தினால் பல்லாவரம் காவல்நிலையத்தில் இருவரும் பாதுகாப்பு வேண்டும் என்று முறையிட்டனர். பின்னர் போலீசார் இரு வீட்டாரையும் அழைத்து சமாதானம் செய்தனர். போலீசாரின் அறிவுரையை ஏற்று பிரவீன்குமார் வீட்டில் இருவரும் வசித்து வந்தனர். 

 

ஆடி மாதம் என்பதால் பெரியோர்களின் ஆலோசனைப்படி, தீபிகாவை கடந்த 20ஆம் தேதி அவரது தாயார் வீட்டுக்கு அழைத்துச் சென்று விட்டுவிட்டு வந்துள்ளார். தொடர்ந்து பிரவீன்குமார் தனது வீட்டில் தங்கியிருந்து தனியார் நிறுவனத்திற்கு பணிக்கு சென்று வந்து கொண்டிருந்தார். 

 

இந்தநிலையில் தீபிகா, 30-ந் தேதி வீட்டின் மின்விசிறியில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பான தகவல் பல்லாவரம் போலீசாருக்கு கிடைத்தது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தீபிகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து விசாரணையில் ஈடுபட்டனர். 

 

பெண்ணின் தந்தை சந்திரகுமார் கொடுத்த புகாரின் பேரில், பல்லாவரம் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் விசாரணை நடத்தி வந்தார். திருமணம் ஆகி இரண்டரை மாதங்களில் தீபிகா இறந்ததால் இதுபற்றி தாம்பரம் கோட்டாட்சியர் விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டு இருந்தது.

 

இதனிடையே போலீசார், பிரவின் குமாரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, தீபிகா என்னிடம் அன்பாக இருந்தார். அவரது தாய் வீட்டுக்கு சென்றபிறகு அங்கு இருந்து எனக்கு செல்போனில் தொடர்பு கொண்டார். வேலையாக இருந்ததால் போனை எடுக்காததால், போன் செய்யும்படி எஸ்.எம்.எஸ். அனுப்பினார். ஆனால் நான் வேலையில் இருந்ததால் அதை கவனிக்கவில்லை. இதுதான் சார் கோபம். அந்த கோபத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தார்.

 

தீபிகாவின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள பிரவீன்குமார் முயன்றார். ஆனால் பெண் வீட்டு தரப்பில் கோபமாக இருப்பதால் அங்கு செல்ல வேண்டாம் என்று போலீசார் ஆறுதல் கூறினர். திங்கட்கிழமை (இன்று) காலை கோட்டாட்சியர் விசாரணைக்கு வருமாறு கூறி அனுப்பி வைத்தனர்.

 

காதல் மனைவி  இறந்த சோகம் தாங்காமல் பிரவின்குமார், நேற்று குரோம்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி குரோம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

காதல் திருமணம் செய்த தம்பதிகள், அடுத்தடுத்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பல்லாவரம், குரோம்பேட்டை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஷர்மிளாவின் உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைப்பு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sharmila handed over to Praveen parent

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் ஜல்லடையான் பேட்டையைச் சேர்ந்த ஷர்மிளா (வயது 22) என்ற பெண்ணைக் கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரவீன் - சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், எதிர்ப்பையும் மீறி இந்தத் திருமணமானது நடைபெற்றது. இந்தக் காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் இவர்கள் இருவரும் வசித்து வந்தனர்.

இத்தகைய சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரவு அந்தப் பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் நடந்தது ஆணவக் கொலை என்பது உறுதியானது. கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து காதல் கணவன் கொலை செய்யப்பட்டதால், ஷர்மிளா மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் 9 நாட்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு (22.04.2024) உயிரிழந்தார். மேலும் தன்னுடைய காதல் கணவன் கொல்லப்பட்டது குறித்தும், தன்னுடைய தற்கொலை முடிவு குறித்தும் ஷர்மிளா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 'அவன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக எழுதியதோடு கொலைக்கு காரணமான தனது பெற்றோர் மற்றும் சகோதரர்களின் பெயர்களையும் ஷர்மிளா குறிப்பிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்ட ஷர்மிளா மரணம் தொடர்பாக கோட்டாட்சியர் (RDO - ஆர்.டி.ஓ.) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. ஷர்மிளாவின் உடல் உடற்கூராய்வு செய்யப்படும் போது வீடியோ பதிவு செய்யப்படும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இன்று (25.04.2024) வருவாய் கோட்டாட்சியர் இப்ராஹிம் நேரில் விசாரணை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து ஷர்மிளா உடலுக்கு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை நடைபெற்று நிறைவடைந்த நிலையில் ஷர்மிளாவின் உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

Next Story

ஆஜரான மாவட்ட ஆட்சியர்கள்; விசாரணை இடத்தை மாற்றிய அமலாக்கத்துறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Collectors present ed changed the place of investigation

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்வதாகவும், மணல் ஒப்பந்த குவாரிகள் மூலம் வரும் வருமானத்தை சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு மணல் குவாரிகளுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் தொடர்பான ஆவணங்களுடன் நேரில் அமலாக்கத்துறை முன்பு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பிலும், மாவட்ட ஆட்சியர்கள் சார்பிலும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் வாதிடுகையில், “நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடவடிக்கை பாதிக்கும் என்பதால் மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக கால அவகாசம் வழங்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தால் கண்டிப்பாக ஆஜராக வேண்டும். மணல் கொள்ளை வழக்கில் அமலாக்கத்துறை முன்பு மாவட்ட ஆட்சியர்கள் ஏப்ரல் 25 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக வழங்கப்பட்ட சம்மனுக்கு தடை எதுவும் வழங்க முடியாது” எனத் தெரிவித்திருந்தனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை மே 6 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்திருந்தனர்.

இந்நிலையில் மணல் முறைகேடு வழக்கு தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வேலூர் ஆட்சியர் சுப்புலட்சுமி, அரியலூர் ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா, கரூர் ஆட்சியர் தங்கவேல், திருச்சி ஆட்சியர் பிரதீப்குமார் மற்றும் தஞ்சை ஆட்சியர் தீபக் ஜேக்கப் ஆகியோர் இன்று (25.04.2024) காலை 10.30 மணியளவில் விசாரணைக்கு ஆஜராகினர். அப்போது மாவட்ட ஆட்சியர்களிடம் நுங்கம்பாக்கத்தில் மற்றொரு இடத்தில் உள்ள மண்டல கிளை அலுவலகத்திற்கு செல்லுமாறு அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி இருந்ததும், இந்த முறைகேட்டில் மாவட்ட ஆட்சியர்களுக்கும் தொடர்பு உள்ளது என அமலாக்கத்துறை குற்றம் சாட்டி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.