ADVERTISEMENT

ராமஜெயம் கொலையான அதே பகுதியில் சென்னை டாக்டர் மர்மக் கொலை..!

08:26 AM Jul 12, 2018 | Anonymous (not verified)


சென்னையை சேர்ந்த மருத்துவர் ஒருவர் காவிரி ஆற்று கரையில் அழுகிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீரங்கம் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட திருவளர்ச்சோலையில் புத்துநாகம்மன் கோவில் அருகே காவிரி ஆற்று கரையிலிருந்து இருந்து அழுகிய நிலையில் ஒரு உடல் இருப்பதை அந்த பகுதி மக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்து ஸ்ரீரங்கம் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

பொதுமக்களின் தகவலை அடுத்து போலீஸ் உதவி கமிஷனர் ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர் உமாசங்கர், சப்-இன்ஸ்பெக்டர் அழகர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விரைந்து வந்து விசாரணையில் இறங்கினர். இறந்து கிடந்தவரின் கழுத்து, மார்பு பகுதியில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்தன.

கத்தி குத்தினால் உடலில் இருந்து இரத்தம் வழிந்து இருப்பது தெரிந்தது. இந்தநிலையில் அடுத்தகட்ட விசாரணைக்காக மோப்ப நாயை வரவழைத்து மோப்பம் பிடிக்க வைத்தனர்.

மோப்பநாய் உடல் கிடந்த இடத்தில் மோப்பம் பிடித்துவிட்டு காவிரி ஆற்றுக்குள் சிறிதுதூரம் ஓடி சென்று ஆற்றின் நடுவே நின்று விட்டதால் அடுத்த கட்ட விசாரணையை முடுக்கிவிட்டார் உதவி கமிஷனர். கொலை செய்யப்பட்டு கிடந்தவர் கருப்புநிற டி-ஷர்ட்டும், நீலநிற ஜீன்ஸ்-ம் அணிந்து இருந்தார். அவரது கைவிரலில் சாய்பாபா உருவம் பொறித்த மோதிரம் இருந்தது.

ADVERTISEMENT


இதையடுத்து அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். இறந்து கிடந்தவர் அணிந்து இருந்த உடையின் நிறம், அவர் விரலில் இருந்த சாய்பாபா மோதிரம் உள்ளிட்ட தகவல்களை அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தெரிவித்து சமீபத்தில் யாரேனும் மாயமாகி உள்ளனரா? என விசாரிக்க துவங்கினர்.

விசாரணையில் அரியலூர் மாவட்டம் செந்துறை பொன்பரப்பி பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்றும் இவர் சென்னையில் உள்ள மருத்துவமனையில் முடநீக்கியல் மருத்துவராக இருந்து வருகிறார் என்றும் தெரியவந்தது.

இவர் கடந்த 8ம் தேதி சொந்தவூருக்கு சென்று உறவினர்களை பார்த்துவிட்டு அவருடைய மனைவி ஈரோட்டில் டீச்சராக பணிபுரிவதால் அவரை பார்த்துவிட்டு வருவதாக சொல்லி ஊரிலிருந்து கிளம்பியவர். திருச்சி டோல்கேட்டில் இறங்கி ஈரோட்டிற்கு பஸ் ஏறும் போது கூப்பிடுகிறேன் என்று தன் மனைவியிடம் கடைசியாக பேசி இருக்கிறார். அதன் பிறகு செல்போன் சிக்னல் கிடைக்கவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்து திடீர் என எங்கே தேடியும் கிடைக்காத தன் கணவனை கண்டுபிடித்து தரும்படி அவரது மனைவி கற்பகாம்பிகா செந்துறை போலீஸ் நிலையத்தில் கடந்த 9-ந் தேதி புகார் அளித்து இருந்ததும் தெரியவந்தது.

ADVERTISEMENT

உடனே ஸ்ரீரங்கம் போலீசார் கற்பகாம்பிகாவை திருச்சிக்கு வரவழைத்து ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருந்த உடலை காண்பித்தனர். அப்போது அந்த உடலை பார்த்த அவர் அது தனது கணவர் விஜயகுமார் தான் என்று கூறி கதறி அழுதார்.

ஸ்ரீரங்கம் போலீசின் முதற்கட்ட விசாரணையில் டாக்டருக்கு உறையூரில் உள்ள ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதும். அவரை சந்திப்பதற்காக டோல்கேட்டில் இறங்கியிருக்க வாய்ப்பு இருப்பதாகவும் இந்த பெண் விவகாரத்தில் ஏதோனும் பிரச்சனையில் இந்த கொலை நடந்திருக்கலாம் என்கிற ரீதியில் போலீஸ் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் ஸ்ரீரங்கம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு லாரி டிரைவர் ஆண்டவர் அடித்து கொலை செய்யப்பட்டு மேலூர் அருகே அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. தற்போது மீண்டும் அரியலூரை சேர்ந்த டாக்டர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவளர்ச்சோலை பகுதியில் விஜயகுமார் கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்தின் அருகில் சில ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை செய்யப்பட்டு கிடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT