Skip to main content

ராமஜெயம் கொலையான அதே பகுதியில் சென்னை டாக்டர் மர்மக் கொலை..!

Published on 12/07/2018 | Edited on 12/07/2018
33


சென்னையை சேர்ந்த மருத்துவர் ஒருவர் காவிரி ஆற்று கரையில் அழுகிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீரங்கம் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட திருவளர்ச்சோலையில் புத்துநாகம்மன் கோவில் அருகே காவிரி ஆற்று கரையிலிருந்து இருந்து அழுகிய நிலையில் ஒரு உடல் இருப்பதை அந்த பகுதி மக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்து ஸ்ரீரங்கம் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

பொதுமக்களின் தகவலை அடுத்து போலீஸ் உதவி கமிஷனர் ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர் உமாசங்கர், சப்-இன்ஸ்பெக்டர் அழகர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விரைந்து வந்து விசாரணையில் இறங்கினர். இறந்து கிடந்தவரின் கழுத்து, மார்பு பகுதியில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்தன.

கத்தி குத்தினால் உடலில் இருந்து இரத்தம் வழிந்து இருப்பது தெரிந்தது. இந்தநிலையில் அடுத்தகட்ட விசாரணைக்காக மோப்ப நாயை வரவழைத்து மோப்பம் பிடிக்க வைத்தனர்.

மோப்பநாய் உடல் கிடந்த இடத்தில் மோப்பம் பிடித்துவிட்டு காவிரி ஆற்றுக்குள் சிறிதுதூரம் ஓடி சென்று ஆற்றின் நடுவே நின்று விட்டதால் அடுத்த கட்ட விசாரணையை முடுக்கிவிட்டார் உதவி கமிஷனர். கொலை செய்யப்பட்டு கிடந்தவர் கருப்புநிற டி-ஷர்ட்டும், நீலநிற ஜீன்ஸ்-ம் அணிந்து இருந்தார். அவரது கைவிரலில் சாய்பாபா உருவம் பொறித்த மோதிரம் இருந்தது.
 

vijay


இதையடுத்து அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். இறந்து கிடந்தவர் அணிந்து இருந்த உடையின் நிறம், அவர் விரலில் இருந்த சாய்பாபா மோதிரம் உள்ளிட்ட தகவல்களை அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தெரிவித்து சமீபத்தில் யாரேனும் மாயமாகி உள்ளனரா? என விசாரிக்க துவங்கினர்.

விசாரணையில் அரியலூர் மாவட்டம் செந்துறை பொன்பரப்பி பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்றும் இவர் சென்னையில் உள்ள மருத்துவமனையில் முடநீக்கியல் மருத்துவராக இருந்து வருகிறார் என்றும் தெரியவந்தது.

இவர் கடந்த 8ம் தேதி சொந்தவூருக்கு சென்று உறவினர்களை பார்த்துவிட்டு அவருடைய மனைவி ஈரோட்டில் டீச்சராக பணிபுரிவதால் அவரை பார்த்துவிட்டு வருவதாக சொல்லி ஊரிலிருந்து கிளம்பியவர். திருச்சி டோல்கேட்டில் இறங்கி ஈரோட்டிற்கு பஸ் ஏறும் போது கூப்பிடுகிறேன் என்று தன் மனைவியிடம் கடைசியாக பேசி இருக்கிறார். அதன் பிறகு செல்போன் சிக்னல் கிடைக்கவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்து திடீர் என எங்கே தேடியும் கிடைக்காத தன் கணவனை கண்டுபிடித்து தரும்படி அவரது மனைவி கற்பகாம்பிகா செந்துறை போலீஸ் நிலையத்தில் கடந்த 9-ந் தேதி புகார் அளித்து இருந்ததும் தெரியவந்தது.

 

 

உடனே ஸ்ரீரங்கம் போலீசார் கற்பகாம்பிகாவை திருச்சிக்கு வரவழைத்து ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருந்த உடலை காண்பித்தனர். அப்போது அந்த உடலை பார்த்த அவர் அது தனது கணவர் விஜயகுமார் தான் என்று கூறி கதறி அழுதார்.

ஸ்ரீரங்கம் போலீசின் முதற்கட்ட விசாரணையில் டாக்டருக்கு உறையூரில் உள்ள ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதும். அவரை சந்திப்பதற்காக டோல்கேட்டில் இறங்கியிருக்க வாய்ப்பு இருப்பதாகவும் இந்த பெண் விவகாரத்தில் ஏதோனும் பிரச்சனையில் இந்த கொலை நடந்திருக்கலாம் என்கிற ரீதியில் போலீஸ் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் ஸ்ரீரங்கம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு லாரி டிரைவர் ஆண்டவர் அடித்து கொலை செய்யப்பட்டு மேலூர் அருகே அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. தற்போது மீண்டும் அரியலூரை சேர்ந்த டாக்டர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவளர்ச்சோலை பகுதியில் விஜயகுமார் கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்தின் அருகில் சில ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை செய்யப்பட்டு கிடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்

Next Story

மறைந்த தொழிலதிபர் கே.என். ராமஜெயம் சிலைக்கு துரை வைகோ மரியாதை

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Durai Vaiko honors statue of late industrialist KN Ramajayam

திமுக முதன்மைச் செயலாளர் - தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேருவின் உடன் பிறந்த சகோதரரும், தொழிலதிபருமான கே.என். ராமஜெயத்தின் 12ம் ஆண்டு நினைவு தினமான இன்று, திருச்சி கேர் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதில் துரை வைகோ கலந்துகொண்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

Durai Vaiko honors statue of late industrialist KN Ramajayam

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கே.என். நேரு, பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேரு மற்றும் தி.மு.கழக மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள், மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி பொறுப்பாளர் புதூர் மு. பூமிநாதன், மாவட்டச் செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, மணவை தமிழ் மாணிக்கம், தொண்டர் அணி ஆலோசகர் ஆ. பாஸ்கர சேதுபதி, அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர் பெல். இராசமாணிக்கம் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Next Story

ராமஜெயம் கொலை வழக்கில் பேரம் பேசப்படுகிறதா? 

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
Ramajayam passes away case

திருச்சி பிரமுகரும், அமைச்சர் கே.என்.நேருவின் தம்பியுமான ராமஜெயம் கொலை வழக்கில் இன்னும் பல மர்ம முடிச்சுகள் அவிழ்க்க முடியாமல் இருப்பதால், யார் குற்றவாளி என்பது கேள்விக்குறியாகவே தொடர்கிறது. தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றவுடனேயே ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்க, எஸ்.பி. தலைமையில் இரண்டு டி.எஸ்.பி.க்கள், மூன்று ஆய்வாளர்கள், 5 உதவி ஆய்வாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.

அந்த சிறப்பு புலனாய்வுப் பிரிவும் ராமஜெயம் கொலை வழக்கை விசாரித்து, குற்றவாளிகளென சிலரை சந்தேகப்பட்டு கட்டம் கட்டியது. ஆனால் அவர்களை வெளிச்சொல்வதில்தான், ஸ்பெசல் டீம் டி.எஸ்.பி.க்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் குழுக்களுக்குள் ஏற்பட்டுள்ள சாதிய மோதல் குறுக்கிட்டுள்ளது. அவர்கள் சந்தேகப்படும் நபர்கள், சிறப்பு புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளின் சாதியினராக இருப்பதால், சந்தேகப்படும் நபர்களை இவ்வழக்கிலிருந்து விடுவிக்க பேரம் பேசுவதாகக் கூறப்படுகிறது.

இந்த வழக்கில் தொடர்புடைய ஒரு முக்கிய ரவுடியை குற்றவாளியென நிரூபிப்பதற்காகத் தொடர்ந்து பல ஆதாரங்களைத் திரட்டிவருகின்றனர். உறுதியான ஆதாரங்கள் கிடைத்தால், சம்பந்தப்பட்ட ரவுடியை இந்த வழக்கில் மிக முக்கிய குற்றவாளியாக மாற்றிவிடத் திட்டமிடப்பட்டு வருகிறது.

அதேபோல் ராமஜெயம் கொலை வழக்கில் தொடர்புடைய பிரபாகரன் என்ற ஆம்புலன்ஸ் நிறுவன உரிமையாளர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். திருச்சியை சேர்ந்த ஆய்வாளர் செந்தில்குமார், கொலை செய்யப்பட்ட பிரபாகரனிடமிருந்து தொடர்ந்து பல மாதங்களாக பணம் வாங்கி வந்துள்ளார். ரவுடிகளைக் கண்காணித்து அவர்களின் செயல்பாடுகள் குறித்து ஒவ்வொரு மாதமும் ரிப்போர்ட் போட வேண்டிய அதிகாரி பணம் வாங்கிக்கொண்டு ரிப்போர்ட் போடாமல் இருந்துள்ளார். ஓ.சி.ஐ.யு. பிரிவில் டி.எஸ்.பி.யாக இருப்பவரும், முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதியின் நெருங்கிய உறவினருமான அந்த அதிகாரிக்கு இந்த விஷயம் தெரிந்தபோதும் நடவடிக்கை எடுக்காமல் அமைதியாக இருந்திருக்கிறார் என்றும், அவரிடமும் விசாரிக்க வேண்டுமென்றும் கூறப்படுகிறது.

ஆனால், சிறப்பு புலனாய்வுப் பிரிவினர் தங்களுக்குள் சாதிச் சண்டையிட்டு வருவதால், இந்த குழுவை முழுமையாகக் கலைத்துவிட்டு புதிய குழு அமைக்க வேண்டுமென்றும், இல்லையென்றால் இந்த குழுக்களை அழைத்து உயர் அதிகாரிகள் கண்டிக்க வேண்டுமென்றும் கூறப்படுகிறது. இவர்களுடைய சாதிய மோதல்களால், உண்மையான குற்றவாளிகளைத் தப்பிக்க வைப்பதற்காக பல்வேறு யுக்திகளைக் கையாண்டு வருவதாகவும், தொடர்ந்து பத்தாண்டுகளுக்கும் மேலாக ஓ.சி.ஐ.யு.வில் பணியாற்றி வரும் அந்த அதிகாரியையும் பணியிட மாற்றம் செய்ய வேண்டுமென்றும் கூறுகிறார்கள். இதில் கவனம் செலுத்தினால்தான் உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்வது சாத்தியப்படும் என்கிறார்கள் காவல்துறை வட்டாரத்தைச் சேர்ந்தவர்களே.

-கீரன்