Skip to main content

மின்கம்பம் விழுந்து முதுகுத் தண்டுவடம் பாதிப்பு!- ரூ.63 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு!

Published on 26/11/2019 | Edited on 26/11/2019

சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர் ஆனந்தகுமார். இவர் கடந்த 2009- ஆம் ஆண்டு காமராஜர் சாலை விவேகானந்தர் இல்லம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது மின் கம்பம் சரிந்து விழுந்து பலத்த காயம் அடைந்தார். பழுதான மின் கம்பத்தை மாநகராட்சி ஊழியர்கள் சரி செய்த போது இந்த விபத்து நடந்தது. இந்த விபத்தில் ஆனந்தகுமாரின் முதுகுத் தண்டுவடம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகம் தனக்கு உரிய இழப்பீடு வழங்க உத்தரவிடக்கோரி ஆனந்தகுமார் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். 

Chennai Municipality to pay compensation of Rs 63 lakh high court order


வழக்கை விசாரித்த தனி நீதிபதி, பாதிக்கப்பட்ட ஆனந்தகுமாருக்கு ரூ 5 லட்சம் இழப்பீடாக வழங்க சென்னை மாநகராட்சிக்கு 4.7.2019 அன்று உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து மாநகராட்சி நிர்வாகம் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது பாதிக்கப்பட்ட ஆனந்தகுமார் சக்கர நாற்காலியில் ஐகோர்ட்டுக்கு நேரில் வந்து தனது தரப்பு கோரிக்கையை எடுத்து வைத்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.வேல்முருகன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
 

திருமணம் செய்து கொள்வதும் பிரம்மச்சரியத்தை கடைப்பிடிப்பதும் அவரவர் விருப்பம். இந்த வழக்கைப் பொறுத்தமட்டில், ஆனந்தகுமார் முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்ட நிலையில் சக்கர நாற்காலியில் தனது வாழ்க்கையை நகர்த்தி வருகிறார். மாநகராட்சி ஊழியர்களின் கவனக்குறைவால் திருமணம் செய்துகொள்ளும் தனது விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள முடியாத நிலைக்கு ஆனந்தகுமார் தள்ளப்பட்டுள்ளார். 

Chennai Municipality to pay compensation of Rs 63 lakh high court order


அவர் தனது விருப்பத்துக்கு மாறாக பேச்சிலர் வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டிய நிலையில் இருந்து வருகிறார். அவரால் நடக்க முடியாது. எந்த வேலையும் செய்ய முடியாது. இன்னொருவர் உதவி இல்லாமல் இயற்கை உபாதையைக் கூட கழிக்க முடியாது.எனவே பாதிக்கப்பட்ட ஆனந்தகுமாருக்கு 63 லட்சத்து 26 ஆயிரம் ரூபாயை இழப்பீடாக மாநகராட்சி நிர்வாகம் வழங்க வேண்டும். ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டி அடிப்படையில் இந்தத் தொகை வழங்கப்பட வேண்டும். இழப்பீட்டுத் தொகையில் ரூ 10 லட்சத்தை ஆனந்தகுமாரின் வங்கிக் கணக்கில் மாநகராட்சி நிர்வாகம் செலுத்த வேண்டும். மீதமுள்ள தொகையை நிரந்தர வைப்புத் தொகைக் கணக்கில் வைத்து, அதிலிருந்து கிடைக்கும் வட்டியை ஆனந்த குமாருக்கு வழங்க வேண்டும். ஆனந்தகுமாரின் ஊனத்தைக்  கருத்தில் கொண்டு இந்தத் தொகைக்காக வருமான வரி பிடித்தம் எதுவும் செய்யக் கூடாது. இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.



 

சார்ந்த செய்திகள்

Next Story

பள்ளிகளில் வழங்கப்படும் தண்டனை தொடர்பான வழக்கு; பள்ளிக்கல்வித்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court ordered the school education department for Case related to punishment in schools

சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘தமிழ்நாடு முழுவதும் பள்ளிக் கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் குழந்தைகளை அடிப்பது போன்ற கடுமையான தண்டனை விதிப்பதை தடை செய்ய வேண்டும் என்ற தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை அமல்படுத்த உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டது. 

இது தொடர்பான மனு இன்று (25-04-24) சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ‘பள்ளி குழந்தைகளை அடிப்பது போன்ற கடுமையான தண்டனையைத் தடுக்கும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை பள்ளிக்கல்வித்துறை அமல்படுத்த வேண்டும். ஆணைய விதிகளை அனைத்து பள்ளிகளுக்கும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்க வேண்டும். 

விதிகளை மீறி குழந்தைகளுக்குத் தண்டனை வழங்கப்பட்டது தொடர்பாக ஏதேனும் புகார்கள் வந்தால், அதன்பேரில் அதிகாரிகள் மீது பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக விதிகளை அமல்படுத்துவதை கண்காணிக்க அனைத்து பள்ளிகளிலும், தலைமை ஆசிரியர், பெற்றோர், ஆசிரியர், மூத்த மாணவர்கள் அடங்கிய கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும்” என்று கூறி பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட்டது. 

Next Story

 ரூ.4 கோடி பறிமுதல்; அமலாக்கத்துறை விசாரணை கோரிய மனுவுக்கு நீதிமன்றம் அதிரடி!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
The court is acting on the petition requested by the enforcement department to investigateon Rs.4 crore confiscated

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை வரும் ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. 

முன்னதாக தமிழகத்தில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாகச் சென்று கொண்டிருந்த நேரத்தில், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் கடந்த 06.04.2024 அன்று இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பைகளில் கட்டுக்கட்டாக இருந்த 500 ரூபாய் நோட்டுகளைப் பறக்கும் படையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும், இந்தச் சம்பவத்தில் ரொக்கமாக நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

நெல்லையில் நான்கு கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரனின் ஹோட்டலில் பணியாற்றிய ஊழியர்கள் மற்றும் உறவினர்களுக்கு காவல்துறை சார்பில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பட்டிருந்தது. தாம்பரம் காவல் நிலையத்தில் ஆஜராகி இது தொடர்பாக விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. 

The court is acting on the petition requested by the enforcement department to investigateon Rs.4 crore confiscated

இந்த நிலையில், நெல்லை சுயேட்சை வேட்பாளர் ராகவன், பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ‘ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று (24-04-24) நடைபெற்றது. அப்போது அமலாக்கத்துறை தரப்பில், ‘பணம் பறிமுதல் வழக்கு, சட்டவிரோத பண பரிமாற்றத் தடைச் சட்டத்தில் பட்டியலிடப்பட்ட குற்றமாக கருத முடியாது’ என்று கூறியது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிமன்றம், சுயேட்சை வேட்பாளர் ராகவன் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.