Skip to main content

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி; மூவர் மீது வழக்குப்பதிவு

Published on 29/04/2023 | Edited on 29/04/2023

 

chennai municipal corporation fake job appointment letter related issue 

 

சென்னை மாநகராட்சியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி போலி பணி நியமன ஆணை வழங்கிய  மூன்று பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 

சேலம் அரிசிப்பாளையத்தைச் சேர்ந்தவர் ராஜன். இவருடைய மனைவி சுதா (வயது 40). இவர்களுடைய மகள் ஜோதி. பட்டப்படிப்பு முடித்துள்ள இவர், அரசாங்கப் பணிக்காக முயற்சி செய்து வந்தார். இந்நிலையில் சுதா சேலம் பள்ளப்பட்டியைச் சேர்ந்த ராஜசேகர் என்பவரை அணுகி தனது மகளுக்கு அரசு வேலைக்கு ஏற்பாடு செய்து தருமாறு கேட்டுள்ளார். அதற்கு அவர், இது தொடர்பாக 3 சாலை பகுதியில் நீட் தேர்வு பயிற்சி மையம் நடத்தி வரும் சின்னான் என்பவரை அணுகுமாறு அறிமுகப்படுத்தி வைத்துள்ளார். அதையடுத்து சுதா சின்னானை நேரில் சந்தித்து மகளுக்கு அரசு வேலை தொடர்பாகப் பேசினார். அப்போது அவரும் மாரமங்கலத்துப்பட்டியைச் சேர்ந்த கவுதம் என்பவருக்கு தான் அப்போது இருந்த ஆளுங்கட்சியினருடனும் அதிகாரிகளுடனும் நெருங்கிய பழக்கம் இருக்கிறது. அவர்தான் அரசாங்க வேலை வாங்கித் தருவார் என்று கூறி அவருக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

 

இதன் அடுத்தகட்டமாக சுதா கடந்த 2021ம் ஆண்டு சின்னான் நடத்தி வந்த நீட் பயிற்சி மைய அலுவலகத்திற்குச் சென்றார். அங்கு கவுதமும் இருந்தார். அப்போது சுதாவைப் போல் சேலம் மெய்யனூரைச் சேர்ந்த விஜயகுமார், இரும்பாலையைச் சேர்ந்த மேஜர் சுந்தர்ராஜன், அரக்கோணத்தைச் சேர்ந்த ஹரீஷ் நாகராஜ் ஆகியோரும் அரசாங்க வேலை பெறுவது தொடர்பாக சின்னானையும் கவுதமையும் சந்திக்க வந்திருந்தனர். அவர்களிடம் கவுதமும் சின்னானும் சேர்ந்து, ''தங்களுக்கு தெரிந்த ஆட்கள் சென்னை மாநகராட்சியில் சுகாதார ஆய்வாளர் பணிக்கு வேலை ஏற்பாடு செய்து தருகிறார்கள். இதற்காக ஒவ்வொருவரும் தலா 10 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும். பணம் கொடுத்தால் மூன்றே மாதத்தில் பணி நியமன ஆணை வீடு தேடி வரும்'' என்று தெரிவித்துள்ளனர். அவர்களின் ஆசை வார்த்தைகளை நம்பிய சுதா உள்ளிட்ட நான்கு பேரும் அவர்கள் கேட்டபடியே தலா 10 லட்சம் ரூபாயை கொடுத்தனர்.

 

இதையடுத்து 2021ம் ஆண்டு ஏப்ரல் 19ம் தேதி சுதா உள்ளிட்ட 4 பேரின் வாட்ஸ்ஆப் எண்களுக்கும் அவர்கள் யாருக்கு வேலை கேட்டனரோ அவர்களின் பெயர்களில் பணி நியமன ஆணையை அனுப்பி வைத்தனர். தாங்கள் எதிர்பார்த்தபடியே அரசு வேலை கிடைத்து விட்டது என்ற ஆசையுடன் சுதாவின் மகள் மற்றும் பணம் கொடுத்த சிலரும் வாட்ஸ்ஆப்பில் வந்த பணி நியமன ஆணையுடன் சென்னைக்குக் கிளம்ப ஆயத்தம் ஆனார்கள்.

 

அப்போது கவுதமும் சின்னானும் அவர்களை திடீரென்று தொடர்பு கொண்டு கொரோனா பரவல் காரணமாக தற்போது பணி நியமனத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளதாகவும் சென்னை மாநகராட்சியில் இருந்து அழைப்பு வரும்போது நேரில் சென்றால் போதுமானது என்றும் தெரிவித்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் நால்வரும் பணி நியமன ஆணை குறித்து விசாரித்தனர். இதில், அவர்கள் அனுப்பி வைத்த பணி நியமன ஆணை கடிதங்கள் போலியானது என்பது தெரிய வந்தது. சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த மகேஸ்வரி என்பவருடன் சேர்ந்து கொண்டு கவுதம் போலியாக பணி நியமன ஆணைகளை தயாரித்துள்ளது தெரிய வந்தது.

 

தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சுதா உள்ளிட்ட நான்கு பேரும் இதுகுறித்து சேலம் மாநகர காவல்துறை ஆணையர் விஜயகுமாரியிடம் புகார் அளித்தனர். இந்த புகார் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி மத்திய குற்றப்பிரிவுக்கு ஆணையர் உத்தரவிட்டார். அதன்பேரில் மத்திய குற்றப்பிரிவு ஆய்வாளர் புஷ்பராணி விசாரித்தபோது புகாரில் முகாந்திரம் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சென்னை மாநகராட்சியில் சுகாதார ஆய்வாளர் பணி வாங்கித் தருவதாகக் கூறி 4 பேரிடம் 40 லட்சம் ரூபாய் சுருட்டியதோடு போலி பணி நியமன ஆணை வழங்கிய சின்னான், கவுதம், மகேஸ்வரி ஆகியோர் மீது மோசடி உள்ளிட்ட 5 பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த புகார் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case filed against Prajwal Revanna

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.