Skip to main content

10 கோடி ரூபாய் செல்ஃபோன் கொள்ளையில் மத்தியப்பிரதேச கும்பலுக்குத் தொடர்பு? தனிப்படை தீவிர விசாரணை!

Published on 23/10/2020 | Edited on 23/10/2020

 

chennai mobiles container police investigation

 

கிருஷ்ணகிரி அருகே, கண்டெய்னர் லாரியைக் கடத்தி, பத்து கோடி ரூபாய் பெறுமானமுள்ள செல்ஃபோன்களை கொள்ளையடித்துச் சென்ற சம்பவத்தில் மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கும்பலுக்குத் தொடர்பு இருக்கலாம் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 

சென்னையில் உள்ள தனியார் செல்ஃபோன் கம்பெனியில் இருந்து, மும்பையில் உள்ள ஷோரூம்களுக்கு விநியோகம் செய்வதற்காக ஒரு கண்டெய்னர் லாரியில் 10 கோடி ரூபாய் பெறுமானமுள்ள ரெட்மி ரக செல்ஃபோன்கள் ஏற்றப்பட்டன. இந்த லாரி, அக். 20- ஆம் தேதி இரவு புறப்பட்டது. சென்னை பூந்தமல்லியைச் சேர்ந்த சதீஷ்குமார் (29), கோவையைச் சேர்ந்த அருண் (26) ஆகியோர் ஓட்டுநர்களாக இருந்தனர்.

 

இந்த லாரி, புதன்கிழமை (அக். 21) அதிகாலை 03.00 மணியளவில், கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த மேலுமலை பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது, அந்த வழியாக வந்த மூன்று லாரிகள் திடீரென்று செல்ஃபோன் ஏற்றி வந்த கண்டெய்னர் லாரியை வழிமறித்து நின்றது. அந்த லாரிகளில் இருந்து இறங்கிய 20க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள், சதீஷ்குமார், அருண் ஆகியோரை சரமாரியாகத் தாக்கினர். பின்னர் அவர்கள் இருவரையும் கண்களைக் கட்டி, அப்பகுதியில் உள்ள ஒரு புதருக்குள் தள்ளிவிட்டு, கண்டெய்னர் லாரியைக் கடத்திச் சென்றனர்.

 

புதருக்குள் தள்ளிவிடப்பட்ட இருவரும் எழுந்து தப்பிச் சென்று விடக்கூடாது என்பதற்காக மர்ம கும்பலைச் சேர்ந்த இருவர் அங்கேயே விடியும் வரை காவலுக்கு இருந்துள்ளனர். காலையில் அவர்களின் கண்களில் கட்டியிருந்த துணியை அவிழ்த்துவிட்டு அங்கிருந்து மர்ம நபர்கள் இருவரும் தப்பி ஓடிவிட்டனர்.

 

இதையடுத்து, பலத்த காயம் அடைந்த ஓட்டுநர்கள் இருவரும் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். நடந்த சம்பவத்தை அறிந்த ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநர்தான் இதுகுறித்து முதலில் சூளகிரி காவல்துறையினருக்குத் தகவல் அளித்தார்.

 

இதையடுத்து, காவல்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கினர். முதல்கட்ட விசாரணையில், கடத்திச் செல்லப்பட்ட கண்டெய்னர் லாரி, கிருஷ்ணகிரி மாவட்டம் அலகுபாவி என்ற இடத்தில் நின்று கொண்டிருப்பதும், அதில் இருந்த 10 கோடி ரூபாய் பெறுமானமுள்ள செல்ஃபோன்களை மர்ம கும்பல் வந்த மூன்று லாரிகளில் ஏற்றிக்கொண்டு தப்பி ஓடியிருப்பதும் தெரிய வந்துள்ளது. அதையடுத்து, கண்டெய்னர் லாரியை காவல்துறையினர் மீட்டனர்.

 

கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி பண்டிகங்காதர், மேற்கு மண்டல ஐ.ஜி பெரியய்யா, சேலம் சரக டி.ஐ.ஜி பிரதீப்குமார் ஆகியோரின் உத்தரவின்பேரில், டி.எஸ்.பி முரளி தலைமையில் 9 தனிப்படை குழு அமைக்கப்பட்டது.

 

cnc

 

இந்தக் கடத்தலில் மத்தியப்பிரதேச மாநிலம் தீவாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த அங்கித்ஜான்ஜா என்ற கொள்ளை கும்பலுக்குத் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.

 

கொள்ளை கும்பல் அண்டை மாநிலங்களில் பதுங்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில், தனிப்படை காவல்துறையினர் கர்நாடகா, ஆந்திரா, கேரளா, மஹாராஷ்டிரா மற்றும் ஓடிசா ஆகிய மாநிலங்களில் தீவிரமாகத் தேடி வருகின்றனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வெறுப்பு பிரச்சாரம்; மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டி போராட்டம் (படங்கள்)

Published on 24/04/2024 | Edited on 24/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, வெறுப்பு பிரச்சாரம் செய்துவரும்  பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவும், வழக்கு பதிவு செய்திடவும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் மத்திய சென்னை மாவட்டம் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை கண்டனம் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. பிறகு நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க, பேரணியாக சென்றனர்.

Next Story

ஷர்மிளா தற்கொலை விவகாரம்; ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Sharmila incident RdO Order for investigation

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் ஜல்லடையான் பேட்டையைச் சேர்ந்த ஷர்மிளா (வயது 22) என்ற பெண்ணை கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரவீன் - சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், எதிர்ப்பையும் மீறி இந்தத் திருமணமானது நடைபெற்றது. இந்த காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் இவர்கள் இருவரும் வசித்து வந்தனர்.

இத்தகைய சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரவு அந்தப் பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் நடந்தது ஆணவக் கொலை என்பது உறுதியானது. கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து காதல் கணவன் கொலை செய்யப்பட்டதால் ஷர்மிளா மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் 9 நாட்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு (22.04.2024) உயிரிழந்தார். மேலும் தன்னுடைய காதல் கணவன் கொல்லப்பட்டது குறித்தும், தன்னுடைய தற்கொலை முடிவு குறித்தும் ஷர்மிளா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 'அவன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக எழுதியுள்ளதோடு கொலைக்கு காரணமானவர்களின் பெயர்களையும் ஷர்மிளா குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட ஷர்மிளா மரணம் தொடர்பாக கோட்டாட்சியர் (RDO - ஆர்.டி.ஓ.) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஷர்மிளாவின் உடற்கூராய்வு சற்று நேரத்தில் நடைபெற உள்ளது எனவும், உடற்கூராய்வு வீடியோ பதிவு செய்யப்படும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.