Skip to main content

இனி 5 நிமிடத்திற்கு ஒரு ரயில்! - 'மெட்ரோ' நிர்வாகம் அறிவிப்பு!

Published on 11/02/2021 | Edited on 11/02/2021

 

chennai metro rail press release


வார நாட்களில், பரபரப்பான நேரங்களில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவைகள் அதிகரிக்கப்படுவதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

 

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், பொதுமக்கள் மற்றும் மெட்ரோ பயணிகளின் கோரிக்கையைக் கருத்தில்கொண்டு வார நாட்களில் (திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை) பரபரப்பான நேரங்களில், 7 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவைகளை 5 நிமிட இடைவேளியில் இயக்க முடிவுசெய்துள்ளது.

 

எனவே, நாளை (12/02/2021) முதல் மெட்ரோ ரயில் சேவைகள், பரபரப்பான நேரங்களில் (Peak Hours) காலை 08.00 மணி முதல் 10.00 மணி வரை மற்றும் மாலை 04.00 மணி முதல் 07.00 மணி வரை 5 நிமிட இடைவெளியிலும் மற்ற நேரங்களில் (Non- Peak Hours) காலை 05.30 மணி முதல் காலை 08.00 மணி வரை, காலை 10.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை மற்றும் இரவு 07.00 மணி முதல் 10.00 மணி வரை 10 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். 

 

சென்னை மெட்ரோ ரயில் சேவைகள், இரவு 10.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை 28 நிமிடங்களுக்குப் பதிலாக, 15 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயில் சேவைகள் நாள் முழுவதும் பரபரப்பில்லா நேரங்களில் (Non- Peak Hours) 20 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். 

 

பயணிகள் அதற்கேற்ப தங்கள் பயணத்தைத் திட்டமிட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பெண்களுக்கு பாதுகாப்பான பயணம்’ - மெட்ரோ ரயில் நிறுவனம் புதிய முன்னெடுப்பு

Published on 15/02/2024 | Edited on 15/02/2024
Safe Travel for Women Metro Rail's New Initiative

சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பான பயண அனுபவத்தை வழங்குவதற்காக மெட்ரோ ரயில் நிறுவனம் கூடுதல் நடவடிக்கையாக அதன் பாதுகாப்பில் தற்காப்புக் கலைகளில் பயிற்சி பெற்ற பெண் பாதுகாப்புப் பணியாளர்களை உள்ளடக்கிய ‘பிங்க் ஸ்குவாட்’ ஐ (Pink Squad) இன்று (15.02.2024) அறிமுகப்படுத்தியுள்ளது. மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சித்திக் முன்னிலையில் மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பாதுகாப்புக் குழுவில் பிங்க் ஸ்குவாட் பாதுகாப்பு சேவை உறுப்பினர்கள் இணைக்கப்பட்டனர். இந்நிகழ்ச்சியில் மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்டங்கள் துறை இயக்குநர் அர்ச்சுனன் முதன்மை பாதுகாப்பு அதிகாரி ஜெயலக்ஷ்மி, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.

இது குறித்து மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் அ.சித்திக் கூறுகையில், “சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஏற்கனவே மெட்ரோ ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களில் முழு சிசிடிவி கேமரா கண்காணிப்பு அமைப்புகளை வழங்கி வருகிறது. இருப்பினும், மெட்ரோ ரயில்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், சிசிடிவி கேமரா கண்காணிப்பு வழங்குவதைத் தவிர, ஈவ் டீசிங் மற்றும் பெண்களுக்கு எதிரான பிற குற்றங்களைத் தடுக்க அதிக கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், பெண் பயணிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு சேவையை வழங்குவதற்காகவும் பிங்க் ஸ்குவாட் அணியை நியமித்துள்ளது.

பிங்க் ஸ்குவாட் உறுப்பினர்கள் தற்காப்புக் கலைகள் மற்றும் தற்காப்பு நுட்பங்களில் நன்கு பயிற்சி பெற்றதுடன் வாடிக்கையாளர் சேவை மற்றும் தகவல் தொடர்பு திறன் ஆகியவற்றிலும் பயிற்சி பெற்றுள்ளனர். முதல் கட்டமாக இந்த குழுவில் 23 பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பயணிகள் அதிகமாக பயணிக்கும் மெட்ரோ ரயில் நிலையங்களான சென்ட்ரல் மெட்ரோ, ஆலந்தூர் மெட்ரோ மற்றும் விமான நிலையம் போன்ற மெட்ரோ ரயில் நிலையங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மெட்ரோ ரயில் நிறுவனம் பொதுவாக அனைத்து பயணிகளுக்கும் குறிப்பாக பெண்கள் மற்றும் சிறப்புத் தேவைகள் உள்ள நபர்களுக்கும் பாதுகாப்பான பயணம் மற்றும் பாதுகாப்பான சூழலை வழங்குவதற்கான தனது உறுதிப்பாட்டை தொடர்ந்து செய்து வருகிறது” எனத் தெரிவித்தார். 
 

Next Story

‘ரூ.5க்கு மெட்ரோ ரயிலில் பயணிக்கலாம்’ - மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

Metro administration announcement You can travel by metro train for Rs.5'  at tomorrow

 

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தொடங்கப்பட்ட நாளை முன்னிட்டு, சிறப்பு கட்டண சலுகையை சென்னை மெட்ரோ நிர்வாகம் வழங்கியிருந்தது. அதன்படி, நாளை (03-12-23) ஒரு நாள் மட்டும் க்யூஆர் பயணச்சீட்டு ( paytm, phonepe, static QR) முறையை பயன்படுத்தி மெட்ரோ பயணிகள் மற்றும் பொதுமக்கள் மெட்ரோ ரயிலில் ஒருவழிப் பயணத்திற்கு வெறும் ரூ.5 என்ற கட்டணத்தில் பயணம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

 

இந்த நிலையில், வடகிழக்கு பருவமழை காரணமாக ‘மிக்ஜம்’ புயல் மற்றும் கனமழை உருவாக வாய்ப்பு  உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த மிக்ஜம் புயல் டிசம்பர் 5 ஆம் தேதி முற்பகலில் நெல்லூருக்கும் - மசூலிப்பட்டினத்திற்கும் இடையே கரையைக் கடக்கும் எனத் தகவல் வெளியாகிருந்த நிலையில் பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை மாநகர காவல் நடவடிக்கை எடுத்து வருகிறது.

 

இதனால், மெட்ரோ பயணிகள் அதிகளவில் நாளை (03-12-23) பயணிக்க வாய்ப்பு இல்லாத காரணத்தினால் சிறப்பு கட்டண சலுகையை கூடுதலாக ஒரு நாள் நீட்டித்துள்ளது. அதன்படி, மெட்ரோ பயணிகள் நலன் மற்றும் பாதுகாப்பு கருதி, அதிக பயணிகள் இந்த சிறப்பு கட்டணத்தில் பயணிக்க வருகின்ற 17ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்றும் ரூ.5 என்ற கட்டணத்தில் பயணிக்கலாம் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.