ஏழை மாணவர்கள் நகருக்குள் வந்து செல்ல நம்பி இருப்பது புறநகர் ரயில்களையே. அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
கரோனா நோய்த் தொற்று காரணமாகக் கடந்த மார்ச் மாதம் 25- ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டது. அதைத் தொடர்ந்து தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்பட்டது.
தற்போது தமிழகத்தில் கரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் படிப்படியான தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி இறுதியாண்டு மாணவர்களுக்கு கடந்த 7- ஆம் தேதி முதல் கல்லூரிகளைத் திறக்க உத்தரவிட்டது. அரசின் உத்தரவையடுத்து கல்லூரிகள் திறக்கப்பட்டன.
இந்நிலையில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "இறுதியாண்டு மாணவர்களுக்கு கல்விச்சாலைகள் திறக்கப்பட்டுள்ளன. சென்னை புறநகர் ரயில்களில் மாணவர்களுக்கு அனுமதி இல்லை. ஏழை மாணவர்கள் நகருக்குள் வந்து செல்ல நம்பி இருப்பது புறநகர் ரயில்களையே. அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்." என வலியுறுத்தியுள்ளார்.