
தமிழகத்தில் நவம்பர் 6 -ஆம் தேதி முதல், 'வேல் யாத்திரை' நடைபெறும் என தமிழக பா.ஜ.க தலைமை அறிவித்தது. யாத்திரைக்கு அனுமதி அளிக்க முடியாது எனத் தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. இந்நிலையில், பா.ஜ.க தரப்பிலிருந்து அவசர வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுவாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பா.ஜ.க பொதுச் செயலாளர் நாகராஜன் தாக்கல் செய்த மனுவை, இன்று மாலை அவசர வழக்காக நீதிபதி சத்தியநாராயணன் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.
வழக்கில், தமிழகத்தில் கோவில்கள் திறக்கப்பட்ட நிலையில் நாங்கள் வழிபாடு செய்வதைத் தடுப்பது ஏன்? என வாதிட்ட பா.ஜ.க தரப்பு, யாத்திரையில் பங்கேற்றோர் விவரங்கள் இல்லாமல் வழக்குத் தொடர்ந்துள்ளனர் எனக் கூறினர். மேலும், நவம்பர் 16-க்குப் பிறகு, மத நிகழ்ச்சிகளில், 100 பேர் வரை பங்கேற்கலாம் என அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. யாத்திரைக்கு அனுமதி கோரி விண்ணப்பித்த பின்னரே அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என பா.ஜ.க தரப்பு தெரிவித்தது. மத்திய அரசின் வழிகாட்டுதல்களை மீறி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது எனவும் பா.ஜ.க தரப்பு புகார் வைத்தது.
முருகன் கோவில் இல்லாத பகுதிகளுக்கு ஏன் யாத்திரை செல்கிறீர்கள்? என உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். கோவிலுக்குச் செல்வதுதான் நோக்கம் என்றால் அங்கு மட்டும் செல்ல வேண்டியதுதானே எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
யாத்திரைக்கு அனுமதி அளித்தால், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் அபாயம் உள்ளதாக தமிழக அரசு தெரிவித்தது. யாத்திரைக்கு அனுமதி அளித்த விண்ணப்பத்தில், எந்த விவரமும் இல்லை எனவும் தமிழக அரசு வாதத்தில் குறிப்பிட்டது. மேலும், யாத்திரைக்கு அனுமதி மறுத்தஉத்தரவை எதிர்த்து பா.ஜ.க வழக்குத் தொடரவில்லை எனவும் தெரிவித்தது.
அதற்கு, 15 வாகனத்தில்30 பேர் செல்வார்கள். இதைக் கூட முறைப்படி தெரிந்துகொள்ள அரசிடம் வசதி இல்லையா என பா.ஜ.க தரப்பு வாதிட்டது. அதனையடுத்து,எந்த வழியில் யாத்திரை செல்ல வேண்டும் என்பதை நீங்கள் தீர்மானிக்க முடியாது, டிசம்பர் 6-ல்யாத்திரை நிறைவு எனத் திட்டத்தில் உள்ளது. அந்தத் தேதியைக் கவனத்தில் கொள்ள வேண்டும். உங்கள் திட்டப்படி கோயில்களில் மட்டும் கூடுவதாகக் குறிப்பிடவில்லை. நீண்ட பேரணி போல திட்டம் உள்ளது எனத் தெரிவித்த நீதிபதிகள், வேல் யாத்திரையைமட்டும் அரசு தடுப்பது ஏன்? ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில்கூட அனுமதி தரும் அரசு வேல்யாத்திரை எதிர்ப்பது ஏன் எனக்கேள்வி எழுப்பினர்.
மேலும், பா.ஜ.க தரப்பு புதிதாகக் காவல்துறையிடம் மனு அளிக்க வேண்டும். அவர்கள் இறுதி முடிவை எடுப்பார்கள். பா.ஜ.கவின் முழு யாத்திரை குறித்தவிபரங்களுடன் கூடிய புதிய மனுவை டி.ஜி.பி அளிக்கவேண்டும்.மனு குறித்த விவரத்தை நீதிமன்றத்திலும் தாக்கல் செய்ய பா.ஜ.க தரப்புக்கும் அரசுக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து, வழக்கை நவம்பர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.
இதனையடுத்து தற்போது திட்டமிட்டபடி, நாளை வேல் யாத்திரைதொடங்கும் என பா.ஜ.க மாநிலத் தலைவர் முருகன் தெரிவித்துள்ளார். திருவெற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, திருப்போரூர் முருகன் கோவிலுக்கு யாத்திரை நடத்த இருப்பதாகவும்,யாத்திரையில் கரோனா தடுப்பு வழிமுறைகள் அனைத்தும் கடைப்பிடிக்கப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Follow Us