Skip to main content

மாற்றுத்திறனாளிகள் பயணிப்பதற்கான பேருந்துகள் குறித்த தலைமைச் செயலாளரின் அறிக்கை! – உயர் நீதிமன்றம் அதிருப்தி!

Published on 10/12/2020 | Edited on 11/12/2020

 

chennai highcourt

 

அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு கொள்முதல் செய்யப்படும் பேருந்துகளில்  10 சதவீத பேருந்துகள்,  மாற்றுத்திறனாளிகள் பயணிப்பதற்கு ஏதுவான வசதிகளுடன் கொள்முதல் செய்யப்படும் என்ற தமிழகத் தலைமைச் செயலாளரின் அறிக்கை குறித்து, சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

 

கல்வி நிறுவனங்கள், அரசுக் கட்டிடங்கள், ரயில் மற்றும் பேருந்துகளில், மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றும், அது குறித்து அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் எனவும், கடந்த 2016- ம் ஆண்டு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

 

இதுதொடர்பான வழக்குகள் கடந்த முறை விசாரணைக்கு வந்ததுபோது, கடந்த 2005-ம் ஆண்டு முதல், இந்த வழக்கில் பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டும், தமிழக அரசு இதுவரை செயல்படுத்தாதது குறித்து கேள்வி எழுப்பி, தலைமைச் செயலாளர், போக்குவரத்துத் துறை செயலாளர் ஆகியோர், காணொலி மூலம் ஆஜராகி விளக்கமளிக்க, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்குகள், நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழகத் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் காணொலிக் காட்சி மூலமாக ஆஜராகியிருந்தனர்.

 

தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், தலைமைச் செயலாளரின் அறிக்கையைத் தாக்கல் செய்தார். அதில், ‘அனைத்து போக்குவரத்துக் கழகங்களிலும், மேம்படுத்தும் வகையில் புதிய பேருந்துகள் கொள்முதல் செய்வதற்காக, ஜெர்மன் மேம்பாட்டு வங்கியுடன் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு உள்ளது. கொள்முதல் செய்யப்படும் பேருந்துகளில் 10 சதவீத பேருந்துகள், மாற்றுத்திறனாளிகள் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு கொள்முதல் செய்யப்படும். நிதிச் சுமை காரணமாக, தாழ்தளப் பேருந்துகள் கொள்முதல் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. மாற்று ஏற்பாடுகள் குறித்து, அரசுடன் கலந்து பேசி முடிவு தெரிவிக்கப்படும்.’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  

 

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், சென்னை நகரில் போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், தாழ்தளப் பேருந்துகளை இயக்க இயலாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது .

 

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில்,  ஆஜரான வழக்கறிஞர், சென்னையில் தற்போது 10 பேருந்துகள் மாற்றுத்திறனாளிகள் பயணிக்க ஏதுவாக உள்ளதாகக் குறிப்பிட்டார். மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞரும், நீதிமன்றத்திற்கு உதவியாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞரும், 2016 மற்றும் 2017-ஆம் ஆண்டுகளில், நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை அமல்படுத்தவில்லை என்றும், இது நீதிமன்ற அவமதிப்புச் செயல் எனவும் சுட்டிக்காட்டினார்.

 

இதையடுத்து நீதிபதிகள், ‘மாநகரப் போக்குவரத்துக் கழகத்திற்கு நிதி பற்றாக்குறை என்றால்,  பொருளாதார நெருக்கடி நிலையைப் பிறப்பிக்கலாமா? போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவது கட்டாயம்தான். ஆனால், கருணைத் தொகை வழங்குவது கட்டாயமா? கருணைத் தொகையை வழங்கக் கூறியது யார்? சட்டங்கள் உள்ளபோது,  அவற்றை அமல்படுத்த வேண்டியது அதிகாரிகளின் கடமையாகும்.

 

சென்னையில் உள்கட்டமைப்பு வசதிகள் சரியாக இல்லாததால், தாழ்தளப் பேருந்துகள் இயக்கப்படவில்லை என மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் கூறப்படுகிறது. அதனால், தரமான சாலைகளை அமைக்க வேண்டியது, மாநகராட்சியின் கடமையாகும்.
 

cnc

 

மாற்றுத் திறனாளிகள் பயணம் செய்ய ஏதுவாக, தற்போது இயக்கப்படும் 10 பேருந்துகள் போதுமானது அல்ல. உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை அமல்படுத்தாவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டிவரும். அந்த நிலை உருவாகாது என நம்புகிறோம். இந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்து, மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், பொதுப் போக்குவரத்தில் அவர்களுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கலாம் எனத் தெரிவிக்க வேண்டும்.’ எனத் தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை பிப்ரவரி 26-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பேருந்துகள் சேதம் குறித்து தொடர் புகார்கள்; போக்குவரத்துத் துறை கெடு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
transport department action on Frequent complaints about damage to buses

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பேருந்து புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பேருந்து, பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கலையரங்கம் தாண்டி வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த பஸ்ஸின் நடத்துநர் இருக்கை நெட்டு போல்டு கழன்று, அதில் அமர்ந்திருந்த நடத்துநர் பஸ்சுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து பயணிகள் கூச்சலிட உடனே டிரைவர் பேருந்தை நிறுத்தினார். பின்னர் காயத்துடன் கிடந்த நடத்துநரை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஓடும் பேருந்தில் இருக்கை கழன்று நடத்துநர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு பலர் கண்டனம் தெரிவித்து புதிய பேருந்துகளை தமிழ்நாடு அரசு வாங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். 

அதுமட்டுமல்லாமல், பேருந்துகள் சேதம் குறித்து தொடர்ச்சியாக புகார்கள் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தொடர் புகார்களை அடுத்து, போக்குவரத்துத் துறை அனைத்து பேருந்துகளுக்கும் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில், ‘48 மணி நேரத்தில் அனைத்து பேருந்துகளையும் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய வேண்டும். அதன் ஆய்வு தொடர்பான அறிக்கையை போக்குவரத்து செயலாளரிடம் சமர்ப்பிக்க மேலாண் இயக்குநர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது’ எனத் தெரிவித்துள்ளது. 

Next Story

‘கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கம்’ - போக்குவரத்துத் துறை தகவல்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Transport Department Information for Additional Special Bus Operation

முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார். இது குறித்து சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் மக்கள் தொடர்பு இணை இயக்குநர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “இன்று வெள்ளிக்கிழமை முகூர்த்த நாள் (26/04/2024) என்பதாலும், நாளை சனிக்கிழமை (27/04/2024) மற்றும் நாளை மறுநாள் ஞாயிறு (28/04/2024) என வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று (26/04/2024) 280 பேருந்துகளும், நாளை (27/04/2024) 355 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. அதே போன்று சென்னை கோயம்பேட்டிலிருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்று (26/04/2024) மற்றும் நாளை (27/04/2024) 55 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, தினசரி இயக்கக் கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இன்று அன்று 280 பேருந்துகளும் மற்றும் நாளை 355 பேருந்துகளும், கோயம்பேட்டிலிருந்து 55 பேருந்துகளும் மேற்கண்ட இடங்களிலிருந்தும் மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வார இறுதி நாளான இன்று 9 ஆயிரத்து 276 பயணிகளும், நாளை 5 ஆயிரத்து 796 பயணிகளும் மற்றும் நாளை மறுநாள்  8 ஆயிரத்து 894 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் மொபைல் செயலிமூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் இந்த வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள தெரிவிக்கப்படுகிறது” எனக் கூறப்பட்டுள்ளது.