chennai highcourt

7.5 சதவீத இடஒதுக்கீட்டின் படி, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கட்டணம் செலுத்த முடியாததால், காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ள ஏழை மாணவர்களுக்கு இடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.

Advertisment

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் எனத் தமிழக அரசு அரசாணைவெளியிட்டது. அதன்படி, கடலூரைச் சேர்ந்த மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவிகள் தர்ஷினி மற்றும் இலக்கியா ஆகியோருக்கு,கடந்த 18 மற்றும் 19-ஆம் தேதி கலந்தாய்வு நடத்தப்பட்டது. இரண்டு மாணவிகளுக்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்தபோதும், ஆண்டு கல்விக் கட்டணமாக 7 முதல் 8 லட்சம் வரை கட்டணம் செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

மாணவிகள் கட்டணம் செலுத்த முடியாத நிலையில் இருந்ததால், இருவரும் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டனர். இதையடுத்து, 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கான கட்டணத்தை அரசே செலுத்தும் என நவம்பர் 20 -ஆம் தேதி தமிழக அரசு அறிவித்தது. தமிழக அரசின் அறிவிப்பு வெளியாகியும், மாணவிகள் தர்ஷினி மற்றும் இலக்கியாவுக்கு மருத்துவ இடம் வழங்கப்படாததை எதிர்த்து, மாணவிகள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

Advertisment

இந்த வழக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, இரண்டு மாணவிகளுக்கு இடம் வழங்கும் வரை, மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடங்களை நிரப்பத் தடை விதிக்க வேண்டும் என, மாணவிகள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன் வாதிட்டார். மேலும், கட்டணத்தை அரசே ஏற்கும் என்ற அறிவிப்பை முன் தேதியிட்டு அமல்படுத்த வேண்டும் எனக் கோரிக்கையும் விடுத்தார்.

cnc

அப்போது, தமிழக அரசுத்தரப்பில், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் படி தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கட்டணம் செலுத்த முடியாததால்,காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகஉறுதி அளிக்கப்பட்டது.இதைப் பதிவு செய்த நீதிபதி, வழக்கு விசாரணையை டிசம்பர் 11 -ஆம் தேதிக்குத் தள்ளி வைத்தார்.