Skip to main content

பேத்தி அபகரித்த சொத்துகளை மீட்கக் கோரிய வழக்கு முடித்துவைப்பு! - இறுதி முடிவெடுக்க திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு!

Published on 13/11/2020 | Edited on 13/11/2020

 

chennai highcourt

 

வெற்று காதிதத்தில் கைரேகை பெற்று பேத்தி அபகரித்த சொத்துகளை மீட்கக் கோரி பாட்டி தொடர்ந்த வழக்கில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்தி இறுதி முடிவெடுக்க,  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவள்ளூர் சாலம்மாள் என்ற 95 வயது மூதாட்டியிடம், அவரது மகள் வழி முதல் பேத்தியான லோகநாயகி, வெற்று காகிதத்தில் கைவிரல் ரேகைகளை வாங்கி, சொத்துகளை தன் பெயருக்கு மாற்றி மோசடி செய்துள்ளார்.

இது தெரிந்தபின், அந்த பத்திரப் பதிவை ரத்து செய்த சாலம்மாள், தன் சொத்துகளை மகள் பெயரிலும், இரண்டாவது பேத்தி பெயரிலும் எழுதி வைத்துள்ளார்.

இதன்பின்னர் லோகநாயகி தொடர்ந்த சிவில் வழக்கில், அவருக்கு சாதகமான தீர்ப்பு வந்த நிலையில், சாலம்மாள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கு தள்ளுபடியானது.

இந்நிலையில், கடந்த ஆண்டு நவம்பரில், மூத்த குடிமக்கள் மற்றும் பெற்றோர் பராமரிப்பு சட்டத்தின் கீழ் லோகநாயகி அபகரித்த சொத்துகளை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி, மாவட்ட ஆட்சியரிடம் சாலம்மாள் புகார் அளித்தார். அந்தப் புகாரில்,  கடந்த பிப்ரவரியில் விசாரணை நடத்திய ஆட்சியர் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்காததால், கடந்த ஆகஸ்ட் மாதம்  சாலம்மாள் மீண்டும் புகார் அளித்துள்ளார்.

அதன்மீதும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், தன் புகாரைப் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் சாலம்மாள் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கில் நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, மூதாட்டி சாலம்மாள் புகாரில் இரு தரப்பினரையும் அழைத்து, அவர்களின் கருத்தை தெரிவிக்க வாய்ப்பளித்து, 4 வாரத்தில் சட்டப்படி இறுதி முடிவெடுக்க வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளார்.

 

 


 

சார்ந்த செய்திகள்