chennai highcourt

தேசியக் கொடியை அவமதித்ததாக, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், மூத்த தலைவர் இல.கணேசன் மீதான புகாரில் விசாரணை நடைபெற்று வருவதாக, காவல்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

சுதந்திர தினத்தன்று, தி.நகரில் உள்ள பா.ஜ.க அலுவலகத்தில் மாநிலத் தலைவர் எல்.முருகன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள் பலரும் பங்கேற்றிருந்தனர்.

Advertisment

இதையடுத்து, பாரதிய ஜனதா கட்சிக் கொடி ஏற்றக்கூடிய கொடிக்கம்பத்தில் தேசியக் கொடியை ஏற்றி அவமரியாதை செய்ததாக பாஜக தலைவர் எல்.முருகன், தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் மற்றும் மூத்த தலைவர் இல.கணேசன் ஆகியோருக்கு எதிராக முகப்பேரைச் சேர்ந்த கே.ஆர்.குகேஷ் என்பவர், அண்ணா நகர் காவல் நிலையத்தில் ஆகஸ்ட் 17-ஆம் தேதி புகார் அளித்திருந்தார்.

இந்தப் புகார் மீது நடவடிக்கை எடுக்காததால், உரிய முறையில் வழக்குப் பதிவு செய்து, நடவடிக்கை எடுக்கக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் குகேஷ் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி டி.ரவீந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

Advertisment

மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கார்த்திக் ஆஜராகி, பாஜக கட்சி கொடிக்கம்பத்தில் தேசியக் கொடியை ஏற்றியது தேசியக் கொடி விதிகள் மற்றும் தேசிய கவுரவ பாதுகாப்புச் சட்டத்தின் படி குற்றம் என்பதால்,எல்.முருகன் உள்ளிட்ட மூன்று பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.

cnc

காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரபாவதி, அண்ணாநகர் காவல் நிலையத்தில் குகேஷ் அளித்த புகார், மாம்பலம் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், அதன் மீது விசாரணை நடைபெற்று வருவதாகவும், அதுகுறித்து விளக்கம் அளிக்க அவகாசம் வேண்டுமென்றும் கோரிக்கை வைத்தார்.

இதையடுத்து, வழக்கில் மாம்பலம் காவல் நிலையத்தினரை எதிர்மனுதாரராகச் சேர்க்க மனுதாரருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை காவல்துறை தாக்கல் செய்வதற்காக, வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளார்.