கடந்த 2013-ம் ஆண்டு, கோவையில் சர்வசமய கூட்டமைப்பு சார்பில், கிறிஸ்துமஸ் பண்டிகை மத நல்லிணக்க நிகழ்ச்சியாகக் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், இந்திய வரைபடம், அசோக சக்கரத்துடன் கூடிய தேசியக் கொடி போன்று உருவாக்கப்பட்ட கேக் வெட்டப்பட்டதாகக் கூறி, அப்போதைய மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் மற்றும் காவல்துறை துணை ஆணையர் பிரவேஷ்குமார் உள்பட, 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி, செந்தில்குமார் என்பவர் கோவை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த கோவை நீதிமன்றம், செந்தில்குமாரின் புகார் மீது வழக்கு பதிவு செய்ய உக்கடம் போலீசாருக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, உக்கடம் காவல் நிலைய ஆய்வாளர் தாக்கல் செய்த வழக்கு, நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்ய அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்பதை, கோவை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கவனத்தில் கொள்ளவில்லை. மத ஒற்றுமையை ஏற்படுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டார்.
இதையடுத்து, ஐஏஎஸ் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், ஐபிஎஸ் அதிகாரி பிரவேஷ்குமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்ய, கோவை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்து, நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டார்.