HIGHCOURT

ராஜீவ்காந்தி கொலை வழக்கு ஆயுள் கைதியான ராபர்ட் பயஸின் மனைவி பிரேமாவின் பெயர், தடைப்பட்டியலில் இடம்பெற்றுள்ளதற்கு, உள்துறை அமைச்சகத்திடம் தான் விளக்கம் பெற வேண்டுமென, வெளியுறவுத்துறை அமைச்சகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ராபர்ட் பயஸ், தன்னைச் சந்திக்க இந்தியா வருவதற்கு, இலங்கையில் உள்ள தன் மனைவி பிரேமாவிற்கு விசா வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு இறுதியில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

Advertisment

இந்த மனு நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன்பு விசாரணைக்கு வந்தபோது, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் பதில் மனு,தாக்கல் செய்யப்பட்டது. அமைச்சகத்தின் சார்பு செயலாளர் சி.கண்ணன் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், பிரேமா மீது குற்ற வழக்குகள் ஏதும் இல்லை என ராபர்ட் பயஸ் மனுவில் குறிப்பிட்டிருந்தாலும், குற்ற வழக்குகளைக் காரணம் காட்டியே விசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

2019 அக்டோபரில் விசா கேட்டு விண்ணப்பித்ததற்கான ஆவணங்கள் ஏதும் இல்லை. க்யூ பிரிவு காவல்துறை செய்த பரிந்துரையின் அடிப்படையிலேயே, பிரேமாவின் பெயர் உள்துறை அமைச்சகத்தின் தடைப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது. தடைப்பட்டியலில் பிரேமாவின் பெயர் ஏன் சேர்க்கப்பட்டது என்பது குறித்து, மத்திய உள்துறை அமைச்சகம் அல்லது க்யூ பிரிவு காவல்துறையிடம் நீதிமன்றம் விளக்கம் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, மத்திய அரசுத் தரப்பின் கோரிக்கையை ஏற்று, விசாரணையை அக்டோபர் 2- வது வாரத்துக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

Advertisment