Skip to main content

நிலத்தகராறில் கே.சி.வீரமணி மீதான புகார் மீது நடவடிக்கை எடுக்க அரசின் அனுமதி தேவையில்லை! – மேல்முறையீட்டு வழக்கு முடித்து வைப்பு!

Published on 20/09/2020 | Edited on 20/09/2020

 

CHENNAI HIGHCOURT

 

நிலத்தகராறில் அமைச்சர் கே.சி.வீரமணியின் தலையீடானது, தனிப்பட்ட விவகாரம் என்பதால், அதுதொடர்பான புகாரில் நடவடிக்கை எடுக்க அரசின் முன் அனுமதி தேவையில்லை என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே சுந்தர்ராஜன் என்பவருக்குச் சொந்தமான,  ஏறத்தாழ 7 ஏக்கர் நிலத்துக்கு, காட்பாடியைச் சேர்ந்த ராமமூர்த்தி, ஜெயப்பிரகாஷ் ஆகியோர் குத்தகை பெறுகின்றனர். பின்னர் அந்த இடத்தை விற்பனை செய்ய சுந்தர்ராஜன் முடிவு செய்தபோது, ராமமூர்த்தி மற்றும் ஜெயப்பிரகாஷ் ஆகியோருடன், ஆந்திராவைச் சேர்ந்த பிரம்மானந்தம், சத்யநாராயணா ஆகியோர் இணைந்து வாங்கியுள்ளனர்.

நிலத்தை மேம்படுத்தி, கட்டுமானப் பணிகளைச் செய்து கொடுப்பதற்காக, 65 கோடி ரூபாய் தருவதாக, காட்பாடியைச் சேர்ந்தவர்களுடன், ஆந்திராவைச் சேர்ந்த இருவரும் ஒப்பந்தம் போட்டுள்ளனர். பின்னர், இந்த நிலத்தில் ஒரு பகுதியை, தமிழக அரசு பொதுப் பணித்துறை ஒப்பந்தக்காரரான சேகர் ரெட்டி வாங்கியபின்னர், 13 கோடி ரூபாய் மட்டுமே கொடுக்கப்பட்டு, மீதமுள்ள 52 கோடி ரூபாயைத் தராமல் மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது.

இதில்,  தமிழக வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணியின் தலையீடு இருப்பதால், அவர் மீதும், சேகர் ரெட்டி மீதும் நடவடிக்கை கோரி, வேலூர் மாவட்ட காவல்துறையிடம், ராமமூர்த்தி, ஜெயபிரகாஷ் ஆகியோர் புகார் அளித்தனர். இதுதொடர்பாக,  தமிழக சட்டப்பேரவைச் செயலாளர், அரசுத் தலைமை கொறடா, தமிழக டி.ஜி.பி ஆகியோரிடம், இருவரும் புகார் அளித்தனர்.

இந்தப் புகார் மீது நடவடிக்கை எடுக்க, காவல்துறைக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை,  தனி நீதிபதி ஜூன் 22-ஆம் தேதி தள்ளுபடி செய்தார்.

 

Ad

 

அந்த உத்தரவை எதிர்த்து ராமமூர்த்தி, ஜெயபிரகாஷ் ஆகியோர் மேல் முறையீடு செய்தனர். இந்த மேல் முறையீட்டு மனுவை, தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு விசாரித்தது. அவர்கள் பிறப்பித்த உத்தரவில், நிலம் தொடர்பான விவகாரத்தில், அமைச்சர் வீரமணியின் தலையீடு தனிப்பட்ட முறையில்தானே தவிர, அரசு ரீதியாகவோ அல்லது அமைச்சர் என்ற அடிப்படையிலோ இல்லை என்பதால், அவருக்கு எதிரான புகாரில் நடவடிக்கை எடுக்க, அரசின் முன்அனுமதி தேவையில்லை என்றும், அதனால் அனுமதி அளிக்கும்படி உத்தரவிட வேண்டிய அவசியம் இல்லை எனவும் கூறி, வழக்கை முடித்து வைத்தனர்.

அதுபோல,  அமைச்சர்  வீரமணிக்கு எதிராக சிவில் வழக்குத் தொடர்வதா, அல்லது ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி செயல்படுவதா என்பது குறித்து, மேல்முறையீட்டாளர்கள் முடிவெடுக்கலாம் எனவும் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.