காதலனுடன் சென்ற சேலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவியைக் கண்டுபிடித்து ஆஜர்படுத்தக் கோரி, அவரது தாய் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு, நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேலுமணி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாணவியின் திருமண ஒப்பந்தத்ததிற்குநோட்டரி வழக்கறிஞர் ஒருவர் சான்றளித்துள்ளதாக, நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது.
இந்தச் சான்றிதழ் செல்லுமா என்பது குறித்து கேள்வி எழுப்பிய நீதிபதிகள், நோட்டரிகளாக நியமிக்கப்படும் வழக்கறிஞர்கள், நீதிமன்றத்துக்கு வெளியில் காரில் அமர்ந்து கொண்டு, பணத்துக்காக இதுபோன்ற சான்றிதழ்கள் வழங்குகின்றனர். நோட்டரி வழக்கறிஞர்கள் கையெழுத்திட்ட, பூர்த்தி செய்யப்படாத முத்திரைத்தாள்கள் எளிதாகப் பெட்டிக்கடைகளில் கிடைக்கின்றன. அந்தச் சான்றுகள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன.
இதைக் கட்டுப்படுத்துவதற்கான நடைமுறைகளை வகுக்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் நோட்டரி வழக்கறிஞர்களுக்கு எதிராக வந்த புகார்கள், அதன் மீது எடுத்த நடவடிக்கைகள் குறித்து இரண்டு வாரங்களில் அறிக்கை அளிக்க, தமிழ்நாடு பார் கவுன்சில் மற்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையைத் தள்ளி வைத்தனர்.