Skip to main content

சென்னை உயர் நீதிமன்றம் காணொலிக் காட்சி மூலம் முழுமையாக இயங்கும்! –நீதிபதிகள் கூட்டத்தில் முடிவு!

Published on 04/07/2020 | Edited on 04/07/2020
Chennai High Court is running full video footage! - Judges' meeting decided!

 

ஊரடங்கு காலத்தில், சென்னை உயர் நீதிமன்றத்தில் எட்டு நீதிபதிகள், அவசர வழக்குகளை மட்டும் விசாரித்து வந்த நிலையில், ஜூலை 6 முதல் அனைத்து நீதிபதிகளும், காணொலிக் காட்சி மூலம் புதிய மற்றும் நிலுவை வழக்குகளை விசாரிக்க உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கரோனா பரவலைத் தடுக்க, கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றம் மூடப்பட்டு, அவசர வழக்குகள் மட்டும் விசாரிக்கப்பட்டன.

இரு நீதிபதிகள் அடங்கிய இரண்டு அமர்வுகள், பொது நல வழக்குகள், ஆட்கொணர்வு வழக்குகளை விசாரித்தன. அதேபோல,  நான்கு தனி நீதிபதிகள், ஜாமீன், முன் ஜாமீன் மற்றும் பொது வழக்குகளை விசாரித்து வந்தனர். இடையில், நீதிமன்ற விசாரணையை துவங்கியபோது, நீதிபதிகளுக்கும், ஊழியர்களுக்கும் தொற்று பரவியதை அடுத்து, மீண்டும் காணொலிக் காட்சி மூலம் வழக்குகள் விசாரணை துவங்கியது.

நீதிபதிகள், தங்கள் வீடுகளில் இருந்தும், வழக்கறிஞர்கள் தங்கள் வீடுகளில் இருந்தும், சில நேரங்களில் சில வழக்கறிஞர்கள் தங்கள் வாகனங்களில் இருந்தும் விசாரணையில் ஆஜராகி வந்தனர். இந்தக் காணொலிக் காட்சி விசாரணையின்போது, இடையூறுகள், தொழில்நுட்ப சிக்கல்களின் காரணமாக, திறமையாக தங்கள் வாதங்களை முன் வைக்க முடியவில்லை என வழக்கறிஞர்கள் வேதனை தெரிவித்து வந்தனர்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில், நீதிமன்றங்களைத் திறந்து, நேரடி விசாரணை நடத்தப்பட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் செயல்பாடு குறித்து, அனைத்து நீதிபதிகள் கூட்டத்தைக் கூட்டி, தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி ஆலோசனை நடத்தினார்.

இந்தக் கூட்டத்தில், ஜூலை 6 முதல் அனைத்து நீதிபதிகளும், புதிய மற்றும் நிலுவை வழக்குகளை விசாரிப்பது எனவும், காணொலிக் காட்சி மூலம் மட்டும் வழக்குகளை விசாரிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, இரு நீதிபதிகள் அடங்கிய ஆறு அமர்வுகளும், 27 தனி நீதிபதிகளும், ஜூலை 6 முதல் வழக்கமான நடைமுறைப்படி வழக்குகளை விசாரிக்க உள்ளனர். இதேபோல, மதுரை கிளையில், இரு நீதிபதிகள் அமர்வு இரண்டும், ஒன்பது தனி நீதிபதிகளும் வழக்குகளை விசாரிக்க உள்ளனர்.

கரோனா ஊரடங்கு காலத்தில் அவசர வழக்குகள் மட்டும் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், ஜூலை 6 முதல் புதிய வழக்குகள், பல்வேறு நிலைகளில் நிலுவையில் உள்ள வழக்குகளையும் விசாரணைக்கு எடுத்துக் கொள்வது என நீதிபதிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பானை சின்னம் வேண்டும்' - நீதிமன்றத்தை நாடிய வி.சி.க.

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
 'We want a pot symbol'-vck moves the court

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க. பம்பரம் சின்னம் கேட்டு வழக்கு தொடர்ந்திருக்கும் நிலையில், சட்டப்படி அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால் தான் ஒரே சின்னம் ஒதுக்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் மறுத்துள்ளதோடு, பம்பரம் சின்னம் இல்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. ஆனால் தனிச் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்ற முடிவில் மதிமுக தரப்பு உள்ளது.

இந்நிலையில், அதே திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக பானை சின்னம் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. வேட்புமனு தாக்கல் இன்று முடிவடைய இருப்பதால் தேர்தல் ஆணையம் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்து நீதிமன்றத்தை விசிக நாடியுள்ளது. திமுக கூட்டணியில் இரண்டு தொகுதியில் விசிக போட்டியிடும் நிலையில் பானை சின்னம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளது விசிக.

Next Story

நீதிபதி பிறப்பித்த அதிரடி உத்தரவு; பொன்முடி வழியில் ஐ.பெரியசாமி

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
order from judge in I.Periyaswamy case; its going on Ponmudi way

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற முன்னாள் அமைச்சர் பொன்முடியின் தண்டனை மேல்முறையீட்டு வழக்கில் நிறுத்திவைக்கப்பட்ட நிலையில் மீண்டும் அவர் அமைச்சர் பதவியை பெரும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வீட்டுவசதி துறையில் வீடு ஒதுக்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டிருந்தது ரத்து செய்யப்படுவதாக அளிக்கப்பட்ட தீர்ப்பை அடுத்து, அடுத்தகட்ட சட்ட நடவடிக்கையை ஐ.பெரியசாமி தரப்பு எடுத்துள்ளது.

கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி அதிகாரத்தை பயன்படுத்தி அன்றைய முதல்வர் கலைஞரின் பாதுகாவலர் ஒருவருக்கு வீடு ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடைபெற்றதாக லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது.

அந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஐ.பெரியசாமி தரப்பில் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் ஐ.பெரியசாமியை விடுவித்து உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை மறு விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்.

 I.Periyaswamy on Ponmudi way

இந்த வழக்கினுடைய விசாரணை கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் அண்மையில் இந்த வழக்கில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பை வழங்கியிருக்கிறார். அந்த தீர்ப்பில், 'சிறப்பு நீதிமன்றம் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மீண்டும் வழக்கு சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். முறையாக ஒப்புதல் பெற்று லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த வேண்டும்' என உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

மேலும், மார்ச் 28ஆம் தேதிக்குள் நேரில் ஆஜராகி ஒரு லட்சம் ரூபாய் பிணை செலுத்த வேண்டும் எனவும் ஐ.பெரியசாமிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு, இந்த விசாரணையை சிறப்பு நீதிமன்றம் 2024 ஜூலை மாதத்திற்குள் முடிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் சென்னை ஐகோர்ட் கொடுத்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மேல்முறையீட்டு வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.